அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காரைநகர் இந்துக் கல்லூரி 2016ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததேயாகும். முதற்கட்டமாக சிறு திருத்த வேலைகளின் பொருட்டு இரண்டு மில்லியன் ரூபாவும், பெருந்திருத்த வேலைகளின் பொருட்டு ஒன்பது மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நாடக அறை மற்றும் சில வகுப்பறைகள் ஆகியனவற்றின் தரைத் திருத்தம், சயம்பு மண்டபம், நடராசா மண்டபத்தின் இருபுறமும் அமைந்துள்ள அறைகள் ஆகியனவற்றிற்கு மட்டப் பலகை அடித்தல்( Level Sheet)போன்ற வேலைகளே சிறு திருத்த வேலைகளுக்குள் உள்ளடக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டவையாகும்.
நூலகம், அதிபர் அலுவலகம், உப அதிபர் அலுவலகம் ஆகியனவற்றிற்கு மாபிள் பதித்தமை, நூலகக் கூரை செப்பனிட்டமை, கண்ணாடி அறைகள் அமைத்தமை, வகுப்பறைகளுக்கு பூச்சுப் பூசியமை, மட்டப் பலகை(Level Sheet) அடித்தமை, வகுப்பறைகளிலும் தியாகராசா விஞ்ஞான மண்டபத்திலும் புறாக்கள் நுழையாவண்ணம் கம்பி வலை அடித்தமை, வர்ணம் பூசியமை, மல, சல கூடங்கள் திருத்தியமை என்பனவே பெருந்திருத்த வேலைகளுக்குள் அடக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டவையாகும்.
இதேவேளை மேற்குறித்த திட்டத்தின் கீழ் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட இரண்டு மாடிக்கட்டிடம் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளடன் அதனை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்விப்பகுதியால் எடுக்கப்பட்டுவருவதாக கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார். பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்டதும் பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்துள்ளதுமான காணியே குறித்த கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ஒப்பந்தகாரர்களிடமிருந்து கேள்விப்பத்திரம் விரைவில் கோரப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
No Responses to “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒதக்கீடுசெய்யப்பட்ட பதினொரு மில்லியன் ரூபாவிற்கான திருத்த வேலைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.”