கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் ஆகியன சார்ந்து மக்கள் பணியாற்றிய தன்னலமற்ற சேவையாளரும் கல்வி உலகம் போற்றிய ஆற்றல் மிக்க ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் பன்முக ஆற்றலும், ஆளுமையும் கொண்டு விளங்கியவருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்த முதலாவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை அன்னாரது குடும்பத்தினர் சிறப்பாக ஒழுங்கமைத்துள்ளனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை( Jan.06.2019) பிற்பகல் 2.00மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் திரு.வி.கேதீஸ்வரதாசன் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ் அஞ்சலி நிகழ்வில் கல்வியாளர்களும், காரை.மண்ணின் உணர்வாளர்களும் கலந்துகொண்டு அமரர் கென்னடி அவர்கள் தாம் நேசித்த மக்களிற்காக ஆற்றிய பணிகளையும் சாதனைகளையும் நினைவுகூரவுள்ளனர்.
அமரர் கென்னடி அவர்களினால் 2009 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட A COMPARATIVE STUDY OF GEORGE ELIOT AND TONI MORRISON FROM A FEMINIST PERSPECTIVE என்கின்ற ஆய்வு நூல் அன்றைய தினம் வெளியிடப்படவிருப்பது சிறப்பம்சமாகும்.
அதேவேளை கென்னடியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கல்வி, சமூகம், அரசியல் ஆகிய தளங்களில் அன்னாருடன் பணியாற்றியவர்கள் என அன்னாருடன் உறவாடிப் பிணைந்துவிட்ட பலதரப்பட்டவர்களது உணர்வுப் பதிவுகளை உள்ளடக்கி அன்னாரது புகழ் மணத்தினைக் கமழச்செய்கின்ற நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமைமிக்க பழைய மாணவனான அமரர் கென்னடி அவர்களை ஏனையோருடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இத்தருணத்தில் நினைவுகூருகின்றது.
அஞ்சலி நிகழ்வு தொடர்பான விரிவான நிகழ்ச்சி நிரலினையும் வெளியிடப்படவிருக்கின்ற ஆய்வு நூலின் முகப்பு அட்டை மற்றும் பின்பக்க அட்டை ஆகியவற்றின் நிழற் பிரதிகளையும் கீழே பார்வையிடலாம்.
No Responses to “அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும், நூல் வெளியீடும்”