‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின்பொருட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் நிதி உதவியுடன் வலந்தலைச் சந்திக்கு அண்மையாக காணி ஒன்று(செல்லையா மாஸ்டரின் காணி) சென்ற டிசம்பர் மாதம் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இக்காணியை திடீரென கடற்படையினர் தங்களது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்டமை அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையளித்திருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனும் தாய்ச் சங்க நிர்வாகமும் உடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக காரைநகர் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் அவர்களின் ஆதரவுடன் படையினர் வெளியேற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் கடற்படை உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடற்படையை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி தவிசாளர் திரு.வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் கூடிய காரைநகர் பிரதேச சபையினாலும் தீர்மானம் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதேவேளை கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தாய்ச் சங்கத்தின் உப-தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, செயலாளர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிர்மலன் நிர்வாக உறுப்பினர் திரு.சற்குணம்(சீமாட்டி) ஆகியோருடன் தனிப்பட்ட பயணத்தினை மேற்கொண்டு தாயகம் சென்றிருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளர் திரு. கனக சிவகுமாரன், பொருளாளர் திரு. மாணிக்கம் கனகசபாபதி ஆகியோரும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரை அவரது காரியாலயத்தில் சந்தித்து கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த காணி விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறித்தியிருந்தனர். விரைவில் நடக்கவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் உறுதியளித்திருந்தார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கான ஏற்பாட்டினை யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி வே.தர்மரட்ணம் செய்திருந்தார்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளரும் பொருளாளரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கல்லூரியின் பழைய மாணவியும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பலவகையிலும் உதவி வருபவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். தாய்ச் சங்கத்தின் சார்பில் அதன் உப-தலைவரும் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் கனடாக் கிளைச் செயலாளர் திரு.கனக. சிவகுமாரன், பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி ஆகியோர் திருமதி விஜயகலாவுடனான சந்திப்பில் கலந்துகொண்டு காணி விடுவிப்புத் தொடர்பில் இதுவரை எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விபரங்களைத் தெரிவித்ததுடன் அவை தொடர்பிலான பத்திரங்களையும் கையளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இக்காணியை கடற்படையினர் பாடசாலையிடம் மீண்டும் கையளிக்கப்படவேண்டியதன் நியாயத்தினை வலியுறித்தி ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, கடற்படைத் தளபதி, கடற்படை அதிகாரிகள் ஆகியோருக்கு விளக்கமான கடிதம் திருமதி விஜயகலாவினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. திருமதி விஜயகலா மகேஸ்வரன் காணி விடுவிப்புத் தொடர்பில் எடுத்துவருகின்ற முயற்சிகளுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை அண்மையில் காரைநகருக்கு சென்றிருந்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் அமைச்சர் திரு.டி.எம். சுவாமிநாதன் அவர்களிடம் தாய்ச் சங்கத்தின் சார்பில் மகஜர் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காணியை விடுவித்து பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுக்க உதவுமாறு இலங்கை கடற்படைத் தளபதியை அமைச்சர் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
இவ்வாறாக பல தரப்புக்களிலிருந்தும் காணியை விடுவிக்குமாறு கொடுக்கப்பட்டு வருகின்ற தொடர் அழுத்தங்களும், படையினர் வசம் உள்ள காணிகள் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படவேண்டும் என்கின்ற அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாடும் இக்காணி விரைவில் பாடசாலையிடம் கையளிக்கப்படும் என்கின்ற நம்பிக்கையினை ஏற்படுத்துவதாகவுள்ளன.
No Responses to “கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைக் காணியை விடுவிக்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் தாய்ச் சங்கமும் இணைந்து நடவடிக்கை”