கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின விழா கடந்த 7ம் திகதி திங்கட்கிழமை உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர் திரு.வே.சிவநேசனின் வழிநடத்தலில் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.
யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட சர்வதேச ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கையில் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
‘கல்வியின் மூலம் சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர்களுக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பு’ என்பதே இம்முறை சர்வதேச ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
வெறும் மாணவர்களாக பாடசாலைக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், கல்வி என அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து அவர்களைச் சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கௌரவித்துக் கொண்டாடும் நாளே ஆசிரியர் தினமாகும்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயததில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு 2014 ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவனும், உயர்தர மாணவர் மன்றத் தலைவருமாகிய செல்வன். சிவகுமார் பிரதாபன் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரியின் ஆரம்பப் பிரிவின்(சுப்பிரமணிய வித்தியாசாலை) முன்னாள் தலைமை ஆசிரியரும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகருமாகிய திரு.ஆ.பலராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும் ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளரும் தற்போது GTZ செயற்திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றுபவருமாகிய திருமதி. சிவபாக்கியம் நடராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
திருமதி சிவபாக்கியம் நடராஜா கல்லூரியின் பிரபல்யம் மிக்க சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரியில் 40 ஆண்டு காலமாக (1915-1955) ஆங்கிலம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களை சிறப்புடன் கற்பித்த அமரர் இராமலிங்கம் கந்தையா (R. கந்தையா மாஸ்டர்) அவர்களின் மகளும் ஆவார்.
அத்துடன் இவர் கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இசைத்துறை முன்னாள் விரிவுரையாளாருமாகிய அமரர் சங்கீதபூசணம் சு.நடராஜா அவர்களின் பாரியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் திரு.ஏ.கம்சன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம், பாடசாலை அபிவிருத்தி சபைச் செயலாளர் திரு.நடராஜா பாரதி, ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அயலில் உள்ள மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலிலிருந்து விருந்தினர்கள்,அதிபர்,ஆசிரியர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மாணவர்களின் பான்ட் அணிவகுப்புடன் கல்லூரி நோக்கி அழைத்துவரப்பட்டனர். நடராசா ஞபாகார்த்த மண்டப முன்றலில் தேசியக் கொடியைப் பிரதமவிருந்தினர் திரு.பலராமனும் கல்லூரிக் கொடியை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மண்டப முன்றலில் தமிழர் பாரம்பரியமுறையில் அதிபர் மற்றும் விருந்தினர்களை மாணவர்கள் தாம்பூலத்துடன் வரவேற்று விழாச் சின்னத்தை அவர்களுக்கு அணிவித்தனர். தொடர்ந்து அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள் அனைவரினதும் கரங்களில் ஒளிரும் மெழுகு தீபம் மாணவர்களால் வழங்கப்பட்டு அவர்கள் மண்டபத்தினுள் நுழையும் போது மாணவர்களால் மலர்தூவி வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கினை விருந்தினர்கள், அதிபர், மற்றும் ஆசிரிய, மாணவ பிரதிநிதிகள் ஏற்றினர்.
மாணவர்களின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து ஆசிரியர் பண் இசைக்கப்பட்டது. வரவேற்புரை, தலைமையுரையைத் தொடர்ந்து ஆசிரியமணிகள் ஒவ்வொருவருக்கும் மாணவர்களால் வாழ்த்துக் கவிதைகள் வாசிக்கப்பட்டு நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி அதிபர் உரையாற்றும் போது மாணவர்கள் ஒளிரும் மெழுகு தீபத்தை எமக்கு வழங்கியதன் மூலம் ஆசிரியர்கள் அறிவு எனும் ஒளியை ஏற்றி வைப்பதுடன் தாமும் மெழுகாக உருகி உழைக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் திரு.ஆ.பலராமன் தனது உரையில் இக்கல்லூரியை விட்டு விலகிய பின்னரும் கல்லூரியுடனான தனது உறவு தொடர்வதாகவும், கல்லூரியின் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பாகும் விடயங்களை தான் வீட்டிலிருந்து கேட்டு தனது அறிவை இன்றும் வளர்த்துக் கொள்வதாகவும் கல்லூரியின் இன்றைய நிலை தனக்கு நல்ல திருப்தியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் திருமதி.சிவபாக்கியம் நடராஜா உரையாற்றும்போது இன்றைய விஞ்ஞான, தகவல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்கள் தமது அறிவையும் கற்பித்தலில் புதிய யுக்திகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு, ‘ஒரு ஆசிரியர் எப்பொழுதும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவனாக இருக்க வேண்டும’; என்று முன்னாள் இந்திய ஜனாதிபதி Dr.S.இராதாக்கிருஷ்ணன் தனது முதலாவது ஆசிரிய தின உரையில் குறிப்பிட்டதையும் கோடிட்டுக் காட்டினார். அவரது உரை ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்திருந்தது.
அடுத்து ஆசிரியர்கள் சார்பில் கல்லூரி ஆசிரியர் திரு.இராஜகோபால் அவர்களின் கவிதையும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.
மதிய போசன இடைவேளையின் பின்னரும் தொடாந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
விழாபற்றி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. சிவபாக்கியம் நடராஜா அவர்களிடம் கருத்துக் கேட்ட போது, தனது மாணவர்கள் பலர் ஆசிரியர்களாக இக்கல்லூரியில் பணிபுரிவதாகவும் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கும்போது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் மிக நேர்த்தியான முறையில் கல்லூரியை நிர்வகிப்பதாகவும் பாடசாலைக்கு காலையில் வேளைக்கே வந்துவிடும் இவர் கல்லூரி மேலும் சிறந்து விளங்க உழைப்பார் என்று நிச்சயமாகக் கூறலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் ஆங்கிலத்தில் அளித்திருந்த பதிலை இங்கே தருகின்றோம்.
“My students are teachers there. They are very active and good. Principal is administrating the school in a perfect way. She is the early bird to school. Hope she will work for the betterment of the school in the future”
மிக அமைதியாகவும் சிறப்பாகவும் இந்த ஆசியர் தின விழாவை ஏற்பாடு செய்திருந்த உயர் தர மாணவர் மன்றத்தினரும் பொறுப்பாசிரியர் திரு.வே.சிவனேசன் அவர்களும் பாரட்டுக்குரியவர்களே!
நிகழ்வின் படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா”