திரு. மு. சிவபாதம்
ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்
சயம்புமலரின் அட்டைப்படம் அது முகிழ்த்த இடத்தின் கருப்பொருளைச் சிறப்புறச் சுட்டிநிற்கிறது. ஆம் கலைக்கூட வாசல் திறந்திருக்க வீணை ஏந்திய கையினால் கலைமகள் வாசலின் முன்னின்று மாணவர்களாகிய வீணைகளை உள்ளே அழைப்பது போல் ஒரு காட்சி. கலைமகளின் வீணை மீட்டப்படும் போது எத்தனை வகை நாதங்கள் உருவாகின்றனவோ அதே போன்று உள்ளே வரும் பல்வேறு வகையான நாதங்களை (திறன்களை) உருவாக்க வல்லவர்களாக மீட்டப்படுவார்கள் என்பதே இங்கு கருப்பொருளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வர்த்தம் எவ்வளவு மகிமையானதோ மலரும் அவ்வளவு மகிமையானதே.
முழுமையான கண்ணோட்டத்தை இங்கே தருகின்றோம்.
கல்லூரியின் 125வது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு ‘சயம்பு’ மலர் பற்றிய ஒரு கண்ணோட்டம்
திரு. மு. சிவபாதம்
ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்
சயம்புமலரின் அட்டைப்படம் அது முகிழ்த்த இடத்தின் கருப்பொருளைச் சிறப்புறச் சுட்டிநிற்கிறது. ஆம் கலைக்கூட வாசல் திறந்திருக்க வீணை ஏந்திய கையினால் கலைமகள் வாசலின் முன்னின்று மாணவர்களாகிய வீணைகளை உள்ளே அழைப்பது போல் ஒரு காட்சி. கலைமகளின் வீணை மீட்டப்படும் போது எத்தனை வகை நாதங்கள் உருவாகின்றனவோ அதே போன்று உள்ளே வரும் பல்வேறு வகையான நாதங்களை (திறன்களை) உருவாக்க வல்லவர்களாக மீட்டப்படுவார்கள் என்பதே இங்கு கருப்பொருளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வர்த்தம் எவ்வளவு மகிமையானதோ மலரும் அவ்வளவு மகிமையானதே.
கல்விச்சாலையின் அடுத்து கணபதி வணக்கத்துடன் மலர் ஆரம்பிக்கின்றது. இது சமய கலாசாரத்தை தொட்டு நிற்கிறது. முதலில் நூலைப் பற்றிய அறிமுகம் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கீதம், தமிழ்மொழி வாழ்த்து, மகுடவாசகம், நோக்கக்கூற்று, பணிக்கூற்று, பாடசாலை பற்றிய தரவுகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடசாலையின் ஆண்டு விழா மலரின் பாரம்பரிய ஒழுங்கமைப்பைத் தழுவிச் சென்றிருப்பதை இங்கு அவதானிக்க முடிகிறது.
Picture
ஒரு நிறுவனத்தின் ஆண்டு விழா மலரை அந்நிறுவனத்தின் சேவையின் காலவோட்டத்தை விம்பங்களாக காட்டும் கண்ணாடியெனக் கருதலாம். அந்த வகையில் 125 ஆண்டுகளை நிறைவு செய்த யா-கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் அதன் ஆரம்ப கால வரலாற்று நாயகன் (நிறுவுனர்) அமரர் முத்து சயம்பு அவர்களின் நிலையான இருப்பை சுட்டிநிற்கும் புகைப்படத்துடனும் போற்றுகவியுடனும் மலரை அலங்கரிப்பதும் ஒரு தனி அழகாகும்.
picture
அது மாத்திரமன்றி பாடசாலையின் அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் உலகறியும் தரத்திற்கு பாடசாலையின் மகிமையை வளர்த்துச் சென்ற வெள்ளி விழா அதிபரினதும் இதற்கு ஒத்தாசையாக வளங்கள் சிலவற்றை அளித்து உதவிய வள்ளலினதும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளமை பின்னைய சந்ததியின் நன்றியின் வெளிப்பாடாக எண்ணலாம்.
picture
இவர்களை அடுத்து தற்போது இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்றுள்ள அதிபரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது முன்னைய சேவையாளர்களின் வரிசையில் தாங்களும் தடம்பதிக்க வேண்டும் என்பதை வலுப்படுத்தி நிற்பதாகவே கருதலாம்.
சயம்புவினுள்ளே எனும் தலைப்பை ஆராயும் இடத்து 7 விடயங்கள் மலரில் இடம்பிடித்துள்ளமை தெளிவாகின்றது. அத்துடன் அவ்விடயங்கள் வெளிப்படுத்தும் கருப்பொருட்களின் தன்மையையும் அறியக்கிடக்கின்றது. ஒரே பார்வையில் வாசகர்களின் தேடலுக்கு இலகுவழியாக இது அமைந்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்றுள்ள விடயங்கள் ஐந்து தலைப்புகளுள் வகைப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அவை,
நுழைமுகம்
கல்லூரிச் சுவடுகள்
ஆசிரியர் கைவண்ணம்
மாணவர் கைவண்ணம்
கல்லூரிச் சாதனைகள் என்பனவாகும்.
நுழைமுகத்தினுள் ஐந்து பொது அம்சங்களும், அதனைத் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. முதல் அம்சமாக இடம்பெற்றிருப்பது அதிபரின் உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட தனது குறுகிய வருகைக்கால இடைவெளியில் நிறைவேற்றப்பட்ட செயற்றிட்டங்களும், தனது மன ஆதங்கமாகவுள்ள நிறைவேற்றப்பட வேண்டிய விசேட செயற்றிட்டங்களுமாகும். பாடசாலையின் வளர்ச்சியில் உண்மையான பற்றுறுதி கொண்ட அனைத்து உள்ளங்களும் இதனை வாசிக்கும் போது பாடசாலையின் வளர்ச்சிக்கு நேர்மனப்பாங்குடனான உந்து சக்திப்பலத்தை அளிப்பார்கள் என எண்ணத் தோன்றுகின்றது.
மலராசிரியர்கள்
pic
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை திரு.கா.குமாரவேலு
ஓய்வுநிலை அதிபர் ஓய்வுநிலை அதிபர்
இரண்டாவது அம்சமான ‘மலராசிரியர்களின் மனதில் மலர்ந்த மலர்கள்’ பொய்யா மொழிப்புலவரின் ஈரடி வெண்பாவை பதிவு செய்து இம்மலர் இக்காலத்திற்கு தேவையா என்பதற்கு விடைபகர்ந்துள்ளது. இது பாராட்டிற்குரியதொன்றாகும். நல்ல தமிழில் நற்செய்திகள் பல செப்பி தம் வித்தியாலயத் தாய்க்கு இம்மலரை முத்துக்கள் பதித்த கழுத்து மாலையாக அணிவித்திருப்பது உள்ளத்திற்கு உவகையளிக்கிறது.
மூன்றாவதாக இடம்பெற்றிருப்பது ஆசிச்செய்திகள். எந்தவொரு நிகழ்விலும் ஆன்றவிந்தடங்கிய முதுபெரும் அறிஞரின் ஆசி வேண்டுவது எமது மரபு. அதனை வலியுறுத்த ஆயிரம் பிறைகண்ட தத்துவ கலாநிதியால் இம்மலருக்கு அருளாசி கிடைக்கப் பெற்றுள்ளமையும் சிறப்பிற்குரியதே.
நான்காவதாக மலருக்கான வாழ்த்துச் செய்திகளை நோக்குமிடத்து 27 வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாழ்த்துச் செய்திகள் பன்முகப்பட்ட சேவைகளை சமூகத்திற்கு வழங்கும் அறிவுசால் அறிஞர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. சில வேளைகளில் இவ்வளவு வாழ்த்துச் செய்திகள் இடம்பெறும் போது மலரின் பருமன் பெரிதாகிவிடுமே என எண்ணத் தோன்றும். ஆனால் தற்போது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் அனைத்துச் சேவையாளர்களின் கரங்களும் இணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். அந்த வகையில் வாழ்த்துச் செய்திகள் அதிகரித்திருப்பினும் அவையாவும் தேவையானவை என்றே கருதலாம்.
ஐந்தாவதாக தற்போது இப்பாடசாலை இடைநிலப் பாடசாலையாக இயங்குவதனால் மாணவர் வளங்களை அதிகரிப்பதற்கு ஊட்டப் பாடசாலைகளின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதன் பொருட்டு ஊட்டப் பாடசாலைகளின் கரங்களையும் இறுகப்பற்றுவதற்கான தேவையும் உருவாகியுள்ளது. பாடசாலையின் அபிவிருத்தில் இது முதலிடம் பெறுவதாகவும் எண்ணலாம். இதனை மனதிற்கொண்டு ஏழு பாடசாலை அதிபர்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் வாழ்த்துக்களும் இம்மலரில் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிபரினதும் மலர்க் குழுவினரதும் சாணக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தொடர்ந்து மலரை அவதானிக்குமிடத்து பேராசிரியர்களினாலும் சிரேஸ்ட விரிவுரையாளர்களினாலும் பிரதிக்கல்விப்பணிப்பாளர், அதிபர்களினாலும், பாடசாலையை வளர்த்தெடுத்த முத்துக்கள் பலராலும் வரையப்பட்ட கட்டுரைகள் பலவற்றை காணமுடிகிறது. இவற்றுள் சில ஆய்வு ரீதியானது, இன்னும் சில அனுபவ ரீதியானவையாகும். முதலாவது கட்டுரை ஆய்வு மதிப்பீட்டு வகையைச் சார்ந்துள்ளது. அதன் தலைப்பு ‘காரைநகர் அபிவிருத்தி ஒரு மதிப்பீடு’ என்பதாகும். இக்கட்டுரையில் பலம், பலவீனம், அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள், அச்சுறுத்தல் ஆகியன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கு பாடசாலை மலரானது பாடசாலையுடன் இடைவினையுறவு கொண்டுள்ள பாடசாலைப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக அச்சமுகத்தினருக்கு பலவிழிப்புணர்வூட்டும் செய்திகளைச் செப்பி நிற்பதை அறிய முடிகிறது. இவ்விடயத்தில் பாடசாலைச் சூழலில் உள்ள சமூகத்தினர் அதிக அக்கறை கொண்டவர்களாக உடனடிச் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியது காலத்தின் தேவையெனக் குறிப்பிடலாம். இவற்றை வெறுமனே செய்திகளாகக் கருதினால் பிரதேச அபிவிருத்தியில் பாரிய வீழ்ச்சியை அடைய வேண்டியும் நேரிடலாம். அந்தவகையில் இது ஒரு ஆக்கபூர்வமான ஆய்வுக் கட்டுரை எனலாம்.
இவற்றைத் தவிர எட்டுக் கட்டுரைகள் பாடசாலையின் கல்வித்தர மேம்பாட்டிற்கான அறிவாற்றலையும் செயற்றிறன்களையும் விளக்கி நிற்கும் கட்டுரைகளாகும். கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள கல்விப்பணிப்பாளர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பயிலுநர் ஆசிரியர்கள் ஆகியோர் இவ்விடயங்கள் தொடர்பான அறிவைப் பெறுவது அவர்களது தொழில் வாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு உறுதுணையாக உள்ளது. இக்கட்டுரைகள் கல்விப் பாரம்பரியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நடைமுறையிலான கல்விப் பிரச்சினைகள,; பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மற்றும் பாடசாலை மேற்பார்வை, தரஅபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றை மிகத்துல்லியமாக எடுத்துக் கூறியுள்ளமையைக் கண்டு கொள்ள முடிகிறது. இத்தகைய அம்சங்கள் அடங்கிய கட்டுரைகள் பாடசாலை மலரினூடாகப் பரிணமிப்பது மலரின் பெறுமதியை உயர்த்தி நிற்கிறது. ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ எனும் கூற்றுக்கமைய இதனை வாசிப்பவர்கள் தொழில் மகத்துவம் பேணுபவர்களாகவும் தேடியறியும் ஆர்வமும், மனப்பாங்கும் உடையவராகவும் இருந்தால் மாத்திரமே இக்கட்டுரைகள் அவர்களுக்குப் பயனுறுதியுள்ளனவாகத் தென்படும். இன்றேல் இவை அவர்களுக்கு அர்த்தமற்றவையாகவே புலப்படும்.
மற்றுமொரு ஆய்வுக் கட்டுரையை நோக்குமிடத்து அது பாடசாலைப் பிரதேசத்தின் 2500 ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றும் கண்ணாடியாக அமைந்துள்ளது. இக்கட்டுரையில் ‘காரைதீவு’ என்ற பெயர் வந்த வரலாறு வரலாற்றுப் பழமைக்கு அடிப்படைக் காரணம். காரைதீவின் வணிகவளம், புன்னாலைப்பாலம் மற்றும் காரைதீவு வர்த்தகர்கள் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் வியாபார நிறுவனங்களுக்கு உரித்துடையோராகியதற்கான காரணம் போன்ற இன்னோரன்ன வரலாற்று உண்மைகளை ஜாதகக்கதைகள், தொல்பொருட்கள் போன்ற சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளதை நோக்கமுடிகிறது.
‘ஊர் வரலாறும் பாடசாலை வரலாறும் வெறுமனே தமக்குள் போட்டி போடுவதற்காக எழுதப்படுவனவல்ல’ எனும் கூற்றினால் ஒரு சமூகத்தின் இவ் வரலாறுகள் எத்துணை முக்கியத்துவம் ஆனது என்பது மனம் கொள்ளத்தக்கது. அத்தகைய கட்டுரைகள் இம் மலரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை மலரின் உச்சநிலை பெறுமானத்தைச் சுட்டி நிற்பதாகக் கருதலாம். ஆகவே ஒரு ஆண்டுமலரின் முக்கியத்துவத்தையும் இவ் ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.
ஏனைய கட்டுரைகளுள் ஒன்று தமிழ் மொழியின் இலக்கிய இரசனையையும், இலக்கணமுறையையும் சிறப்புற எடுத்தாண்டிருக்கிறது. கைகேயி சூழ்வினைப் படலத்தின் ஊடாக கம்பனின் கவித்துவம் மிகநுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இது இலக்கிய இரசனையை மாணவர் உள்ளங்களில் வளர்த்தெடுக்கவும,; இலக்கண அறிவினை மேம்படுத்தவும் ஏற்புடையதாகவுள்ளது எனினும் இத்தகைய தாய் மொழியின் சிறப்புக்கான கட்டுரைகள் இன்னும் சில இடம்பெற்றிருப்பின் மலரின் வண்ணம் மேலோங்கி இருக்கும்.
தொடர்ந்து இடம்பெற்றுள்ள கட்டுரைகளுள் சில காரைநகரின் புகழை உலகம் போற்ற வைத்த மண்ணின் மைந்தர்களைப் பற்றியதாகவுள்ளது. அவற்றுள் ஒருவர் பேராசிரியர் அலன் ஆபிரகாம் வானியல் ஆய்வில் சாதனை நிலைநாட்டியதனால் பிரித்தானிய வானியல் ஆராய்ச்சிக் கழகம் இவரை முதல் அங்கத்தவராக இணைத்திருந்தது. இலங்கையில் முதலாவதாக இடம்பெற்ற அங்கத்தவரும் இவரே. இத்தகைய பெருமைக்குரியவரைப் பற்றிய ஒரு கட்டுரை இம்மலரில் இடம்பெற்றிருப்பது மலர் ஒழுங்கமைப்புக் குழுவின் நல்ல உள்ளத்தை தெளிவுபடுத்தி நிற்கி;றது.
இன்னும் சில கட்டுரைகள் பழைய மாணவர்களின் பசுமையான பதிவுகளாக வரையப்பட்டுள்ளன. இவை யாவும் அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி நிற்பதுடன் வருங்கால மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
அடுத்துஆசிரியர் கைவண்ணப்பகுதியில் ஆசிரியர்கள் பலரினால் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளைக் காணமுடிகிறது. இவற்றுள் இரண்டு ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் மாணவர்களுக்குப் பெரிதும் பயனுறுதியுள்ளனவாக அமைந்திருப்பதை நோக்க முடிகிறது.
மாணவர்கள் கைவண்ணப்பகுதியில் 26 விடயங்கள் இம்மலரில் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் 10 விடயங்கள் கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ளன. இரண்டு விடயங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை யாவும் மாணவர்களுக்கு ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளவும், சமகால நிகழ்வுகளையும் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ளவும், ஒழுக்க சிந்தனையைப் பேணவும், சமூகத்தின் சிறந்த சிற்பிகளாக உருவாகும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உந்துசக்தியை வழங்கியுள்ளன. ஆங்கிலக் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மேலும் திருப்தி தரக்கூடியது.
ஆசிரியர் கைவண்ணம், மாணவர் கைவண்ணம் ஆகியவற்றை ஆராயுமிடத்து பாடசாலையின் முக்கிய வளங்களாக கருதப்படும் இவர்களின் பங்களிப்பு இம்மலரிற்கு பூரணமாக கிடைத்திருக்கிறது. மேலும் வகுப்பு ரீதியாக மாணவர்களிடம் ஆக்கங்கள் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அந்தவகையில் இம்மலரிற்கு குறையொன்றும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயுமிடத்து விளையாட்டுக் குழுக்கள், மாணவர் மன்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் புகைப்படங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று நிர்வாகத்திற்கு உறுதுணையான ஆசிரிய குழுக்கள், மாணவ குழுக்கள் ஆகியோரின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வாத்தியக் குழுக்கள், கணணி செயற்பாட்டிற்கான குழுக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமான வைபவங்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் மலரின் சிறந்த ஒழுங்கமைப்பை சுட்டிக் காட்டுகின்றன. இவை பாடசாலையின் பெருமைகளை ஆவணப்படுத்தியமைக்குச் சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
சாதனைகள் என்ற பகுதியில் கல்லூரி கடந்து வந்த சாதனைகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில சாதனையாளர்களின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 2005இலிருந்து இற்றைவரை விளையாட்டுத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட மாணவர்களின் சாதனைகள் முதலாவதாக இடம்பிடித்துள்ளது. க.பொ.த. (உயர்தரம்) சிறப்புப் பெறுபேறு மாணவர் விபரம் க.பொ.த. (சாதாரணதரம்) சிறப்புப் பெறுபேறு மாணவர் விபரம் பிரதான இடம் பிடித்துள்ளன. உயர்தரம், சாதாரணதரம் பாடரீதியான சித்தி வீதங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் விபரம் துறை சார்ந்தவகையில் ஆய்வு செய்யப்பட்டு வரைபுகளும் இடம்பெற்றுள்ளன. கல்விச் சாதனை புரிந்தோரின் முகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் தற்போது உள்ள மாணவர்களிடம் சாதனை படைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தவல்லன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
2005 தொடக்கம் இற்றை வரையான ஆசிரியர்களின் விபரமும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அதிபர்களின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கல்விசாரா ஊழியர்கள், கணணி உதவியாளர்கள், பாடசாலையின் மாணவர் பருமன் ஆகியனவும் ஒன்றும் தவறாமல் மலரில் சேர்;க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாடசாலையின் காலச்சுவடுகளின் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளன. அது மாத்திரமன்றி நன்கொடை வழங்கியோர் விபரம், பணஅன்பளிப்புச் செய்தோர் விபரமும் வெளிப்படைத் தன்மை கொண்டனவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தையும் நோக்குமிடத்து பாடசாலை தொடர்பான சகல அம்சங்கள் அனைத்தையும் மூலைமுடுக்கெல்லாம் தேடிப் பெற்று இம்மலரைச் சமைத்துள்ளமை பாராட்டிற்குரியதே. இவை யாவும் மிகுந்த நிறைவுப் பெறுமானம் கொண்டவையாக உள்ளமையால் மலரில் ஏதேனும் குறைகள் இருப்பினும் கூட அவையாவும் விமர்சனம் பெறுமளவிற்கு இல்லை என்றே கூறலாம்.
நிறைவாக மலர்குழுச் செயலாளரின் நன்றியுரையுடன் மலர் நிறைவுத் தன்மை பெற்றுள்ளமையும் ஒரு தனிச் சிறப்பே. மலரின் ஒழுங்கமைப்பு, வடிவம், பருமன், நேர்த்தியாவும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதையும் இங்கு காணமுடிகிறது.
pic
ஒரு பாடசாலையின் ஆண்டு மலரை உருவாக்குவது என்பது எத்தகைய சிக்கலான பணி என்பது அனுபவமுள்ளவர்களுக்குப் புரியாத ஒன்றல்ல. அந்தவகையில் இம்மலரைச் சிறப்பாக ஆக்கி வழங்கிய மலர்க்குழு, அதிபர் மற்றும் உதவியாளர்கள், நிதி வழங்கியோர் ஆகியோரின்; தன்னலங்கருதாத சேவை இங்கு மனங் கொள்ள வேண்டிய தொன்றாகும்.
மேலும் பாடசாலையுள் உள்வாங்கப்பட வேண்டிய கரங்கள் அனைத்தையும் தேடித்தேடி இம்மலரில் இணைத்துள்ளமை இக்குழுவினரின் செயலாற்றுகைத் திறனைத் வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் பெருமனதுடன் வாழ்த்ப்பட வேண்டியவர்கள். குறுகிய கால நிர்வாகக் காலவோட்டத்தில் இத்தகைய பணியை திறம்பட முன்னெடுத்து வெற்றிகண்ட பாடசாலை அதிபரின் ஆளுமையையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதும் எமது கடமையாகும். ஒட்டுமொத்தமாக நிறைவான அம்சங்கள் நிறைந்து கிடப்பதனால் குறைகண்டு விமர்சனம் செய்யும் எண்ணம் அடிபட்டும் போயுள்ளமையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. எனவே இம்மலரைப் பற்றிய எனது எண்ணத்தில் ‘குறையொன்றும் இல்லை நிறைவுண்டு கண்ணா’ என்ற வாசகமே தோன்றுகிறது. அந்த வகையில் இம்மலரை ஆக்கிவெளியிட்ட அனைத்து உள்ளங்களையும் வாழ்த்தி அமைகின்றேன்.
நன்றி
திரு. மு. சிவபாதம்
ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்
No Responses to “கல்லூரியின் 125வது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு ‘சயம்பு’ மலர் பற்றிய ஒரு கண்ணோட்டம்”