1973ஆம் ஆண்டு பிறந்து காரைநகர் இந்துக் கல்லூரியில் 1984ஆம் ஆண்டு தொடக்கம் பயின்று வந்தவர்களும் 1989ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கும், 1992ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றியிருந்தவர்களும், சென்ற ஆண்டு பொன்னகவையினை எய்தியவர்களுமான பழைய மாணவர்கள் பலரும் ஒன்றிணைந்து வழங்கிய உதவியின் மூலம் கல்லூரியின் முக்கியமான தேவை ஒன்று நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் வடக்கு வளாகத்தில் வடக்கு-தெற்காகவும் கிழக்கு-மேற்காகவும் நிர்மாணிக்கப்பட்டிருந்த இருமாடிக் கட்டடங்கள் வட-கிழக்கு மூலையில் (முன்னர் பௌதிகவியல் ஆய்வுகூடம் அமைந்திருந்த இடம்) இணைக்கப்படாது இவ்விரு கட்டடங்களுக்கிடையே 35X25 சதுர அடி அளவிலான இடைவெளி காணப்பட்டது. இவ்விரு மாடிக் கட்டடங்களையும் இணைத்து குறித்த இடைவெளியை நிரப்பி நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் இரண்டு வகுப்பறைகள் மேலும் கீழுமாக அமையப் பெற்றுள்ளன. இதனை நிர்மாணிப்பதற்கு ஏற்பட்ட சுமார் எழுபது இலட்சம் ரூபாவினையும் தாயகத்தில் நல்ல நிலையிலுள்ள பொன்னகவை எய்திய பழைய மாணவர்களும் புலம்பெயர் தேசங்களிலுள்ள பொன்னகவை பழைய மாணவர்களும் இணைந்து வழங்கியிருந்தனர். கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு குறித்த திட்டப்பணியை நிறைவேற்றி வைக்க பொன்னகவை பழைய மாணவர் அணியினர் முன்வந்ததைத் தொடர்ந்து இக்கட்டடத்திற்கான அடிக்கல் அண்மையில் நாட்டி வைக்கப்பட்டிருந்தது. இவ்வணியினர் விரைவாகச் செயற்பட்டு தமது பங்களிப்பினை வழங்கியிருந்ததும் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் அயராத முயற்சியும் கட்டடத்தின் பணிகள் யாவும் குறுகிய காலத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் 05-02-2024 திங்கட்கிழமை அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. திரு.தீசன் திரவியநாதன் அவர்கள் இப்பணியினை முன்னெடுக்க முன்மயற்சி எடுத்துக்கொண்டதுடன் பொன்னகவை அணி உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பாராட்டும்படியாக செயலாற்றியிருந்தமை அதன் வெற்றிக்கு மூலகாரணமாக அமைந்திருந்தது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து பழைய மாணவர் அணியினர் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களிலுள்ள இவ்வணியினைச் சேர்ந்த ஆறுக்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் இத்திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு சென்றுள்ளதாக அறியமுடிகிறது.
வடக்கு மாகாண சபையின் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் நிரஞ்சன் இவ்விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதுடன் கல்வி மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கல்லூரியுடன் தொடர்புபட்ட வேறு முக்கிய பிரமுகர்களும் பழைய மாணவர்களும் சிறப்பு அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாகவும், தகைசார் அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இத்திறப்பு விழாவினை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
சயம்பு நினைவுக் கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்புக் காரணமாக இக்கட்டடத்தில் அமைந்திருந்த வகுப்பறைகளை பயன்படுத்தமுடியாத நிலையில் எதிர்கொள்ளப்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறைக்கு புதிய இரு வகுப்பறைகளின் மூலம் ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் இரு கட்டடங்களும் இணைக்கப்பட்டதன் ஊடாக இவற்றுக்கிடையேயான போக்கு வரத்துப் பாதை இலகுவாக்கப்பட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொண்ட அசௌகரியங்கள் பலவும் நீக்கி வைக்கப்பட்டுள்ளன.
முன்னுதாரணமான வரலாற்றுப் பணியனை நிறைவேற்றி வைத்து உதவிய பொன்னகவை மாணவர் அணியினரின் காரை.இந்து அன்னை மீதான வியத்தகு விசுவாச உணர்வினையும் சமூக அக்கறையையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் வெவ்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்த சில படங்களையும் கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் பொன்னகவை பழைய மாணவர்கள் அணியின் உதவியுடன் எழுபது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாடிக் கட்டடம் திங்கட்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.”