காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை கனடா ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் அனைவரும் பாராட்டும்வண்ணம் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், இசை ரசிகர்கள், இசைக் கலைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் வருகையினால் விழா அரங்கம் நிரம்பி வழிந்தது. ஒலி அமைப்பினை சீர்செய்வதில் எதிர்பாராதவகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விழா சிறிது தாமதமாக தொடங்கப்பட்டது என்கின்ற சிறிய குறையைத் தவிர அனைத்து வகையிலும் நிறைவான ஒரு விழாவாக அமைந்திருந்தது. கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவர்களான மருத்துவக்கலாநிதி இராமலிங்கம் செல்வராஜா அவரது துணைவியார் மருத்துவக்கலாநிதி சறோ செல்வராஜா ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் ஓய்வுநிலை பிரதி நில அளவையாளர் நாயகம் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தமை விழாவிற்கு சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருந்தது.
பிரதம விருந்தினர்கள், கல்லூரியின் மூத்த பழைய மாணவர்களான துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை பிரதம காசாளர் திரு.முருகேசு சின்னத்துரை அவரது பாரியார், நீதிமன்ற ஓய்வுநிலை மொழிபெயர்ப்பாளர் திரு.நமசிவாயம் அம்பலவாணர், S.P.சுப்பிரமணியம் நினைவுத் திட்டத்தின் அனுசரணையாளரான திரு. சுப்பிரமணியம் அரிகரன் அவரது பாரியார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து விழா ஆரம்பமானது. செல்வி பிரணவி பஞ்சலிங்கம், செல்வி வர்ணவி பஞ்சலிங்கம், செல்வி சர்மீரா ரஜீகரன், ஆகியோர் இணைந்து கடவுள் வணக்கம், தமிழ்த் தாய் வாழ்த்து, கனேடிய தேசியப் பண் என்பவற்றை அழகுற இசைத்தனர். அக வணக்கத்தைத் தொடர்ந்து karaihinducanada.com இணைத்தளத்தின் நிர்வாகியும் நிர்வாக சபை உறுப்பினருமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
‘தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி தமிழெனும் அமுதினை பருகிட நிலைகொண்ட’ என்கின்ற கல்லூரிப் பண்ணிற்கு அமைத்து வழங்கியிருந்த நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது மட்டுமல்லாது காரை.இந்து அன்னையை போற்றி வணங்கிய உணர்வுபூர்வமான தருணமாகவும் அமைந்திருந்தது. இந்நடனத்தை அமைத்து வழங்கிய ‘நடனகலாபாரதி’ ‘நாட்டியக்கலைமணி’ செல்வி நிர்த்திகா சித்திரவடிவேல் அவர்களின் நடன ஆற்றலை பலரும் வியந்து பாராட்டத் தவறவில்லை. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் நாட்டில் இல்லாத காரணத்தால் உப-தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் இவ்விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றினார். இவரது உரையை அடுத்து 5வது ஆண்டு விழாவிற்கு அனுசரணை வழங்கியதன்மூலம் விழாவினை பொலிவுறச் செய்தது மட்டுமல்லாது அதனூடாக பாடசாலையின் வளர்ச்சிக்கும் உதவிய பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் அரங்கில் வைத்து பொன்னாடை அணிவித்தும் நினைவுக் கேடயம் வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.
மதிப்பளிப்பினை அடுத்து விழா மலர் வெளியீடு இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களிடமிருந்து மருத்துவக்கலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் நிறுவுனர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவக்கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் விழா மலரின் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டு வெளியிட்டுவைத்திருந்தார். பழைய மாணவர் சங்க கனடாக் கிளைத் தலைவரின் செய்தி, நிர்வாக சபையின் செய்தி, கல்லூரியின் அதிபர், பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், மற்றும் கல்லூரி சார்ந்த பெரியோர், பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளைச் செயலாளர், தாய்ச் சங்க நிர்வாகிகள், பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம், சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்க கனடாக் கிளை சார்ந்தோர் ஆகியவர்கள் உள்ளிட்டவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்திகளும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வரலாற்றுத் தகவல்களும் சங்கத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த மகத்தான பணிகளும் கல்வி சார்ந்து தெரிவுசெய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளும் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிகழ்வுகளின் நிழற் பதிவுகளும் இச்சிறப்பு மலரில் அழகுறப் பதிவிடப்பட்டு சிறந்த வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. வாழ்த்துச் செய்திகள் வழங்கிய அனைவரும் சங்கத்தின் உன்னதமான வரலாற்றுப் பணிகளையும் அதன் பயனாக பாடசாலையின் வளர்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட காத்திரமான தாக்கத்தினையும் பல்வேறு கோணங்களிலிருந்து பதிவுசெய்துகொண்டுள்ளனர். யாழ்.பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களால் பழைய மாணவர் சங்கத்தின் மகத்தான பணிகள் குறித்து சங்கத்தின் ஆண்டறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட கட்டுரையும் இம்மலரில் இடம்பெற்றுள்ளது. அனுசரணையாளர்கள் வர்த்தக மற்றும் தொழிற் துறை சார்ந்தோரின் விளம்பரங்களும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பழைய மாணவர்கள் சிலரின் வாழ்த்துக்களுடன் கூடிய பதிவுகளும் கூடவே இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இம்மலரில் இடம்பெற்றுள்ள விளம்பரங்களுக்கும் பழைய மாணவர்களின் பதிவுகளுக்கும் சாதரணமாக அறவிடும் தொகையின் அரைவாசிக்கு குறைந்த கட்டணமே அறவிடப்பட்டதாயினும் பலரும் அவர்களாக முன்வந்து அதிக பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மலர் வெளியீட்டினைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் ஷ்ரவணின் ‘இசை அருவி’ என்ற மகுடத்திலான இசைக் கச்சேரி தொடங்கப்பெற்றது.. இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக சபையினைக் கட்டிப்போட்டிருந்த அற்புதமான இசை நிகழ்வாக இது அமைந்திருந்தது. கர்நாடக இசைப் பாடல்களுடன் திரைப் படங்களில் வந்து மக்கள் மனதில் பதிந்துள்ள பக்திப் பாடல்களையும் இவர் பாடியிருந்ததும் இவர்பாடிய பாடல்கள் தொடர்பில் விளக்கத்தினைக் கொடுத்ததுடன் சபையோரிடமிருந்து கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுக்கொண்டதும் சபையைக் கவர்ந்து பெரு வரவேற்பினைப் பெற்றிருந்தது. இறுதிவரை மக்கள் எவரும்; அரங்கத்திலிருந்து கலைந்து செல்லாமல் பொறுமையாகவிருந்து ரசித்திருந்தமையும் கச்சேரியின் நிறைவில் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளை தேடிச்சென்று விழாவின் நேர்த்தியான ஏற்பாடுகளுக்காகவும் உன்னதமான இசைக் கச்சேரியை அமைத்து வாய்ப்பளித்தமைக்காகவும் தமது மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்திருந்தமையும் விழாவின் உன்னதத்தை புலப்படுத்துவதாகவுள்ளது. கனடாவில் அண்மையில் நடந்த மிகச் சிறந்த இசை நிகழ்வாக இது கருதப்படுகிறது. இவ்விதம் பாராட்டுத் தெரிவித்தவர்களுள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளரும் பிரபல இசைக் கலைஞருமாகிய திருமதி நவராஜகுலம் முத்துக்குமாரசாமி, மற்றொரு பிரபல இசைக் கலைஞர் திருமதி பராசக்தி தேவவிநாயகராசா, ரூபவாகினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்; முன்னாள் செய்தி வாசிப்பாளர் திருமதி மனோகரி சதாசிவம், வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறீ விஜயகுமாரக் குருக்கள், யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் பேராசிரியர் கலாநிதி இ.பாலசுந்தரம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் சங்க நிர்வாகிகளை தொலைபேசி ஊடாக அழைத்து தமது மனநிறைவினையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர் அவர்கள் வயலின் வாசித்தும் மிருதங்ககலாவித்தகர் ரதிரூபன் பரஞ்சோதி மிருதங்கம் வாசித்தும் திரு.நரேந்திரா தில்லையம்பலம் கடம், தபேலா ஆகிய வாத்தியக் கருவிகளை இசைத்தும் ஷ்ரவணின் இசைக் கச்சேரிக்கு மெருகூட்டியிருந்தனர். இப்பின்னணி வாத்தியக் கலைஞர்களின் திறமையான வாசிப்பினை ஷ்ரவண் வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்பதுடன் சபையையும் இவர்களது வாசிப்பு வெகுவாகக் கவர்ந்திருந்தது.
கனடாவின் சிறந்த அரங்க அறிவிப்பாளரும் வானொலி அறிவிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.பா.ஞானபண்டிதன் சபையைக் கவரும்வண்ணம் அழகுற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியமை பாராட்டுக்குரியதாக அமைந்திருந்தது. இதேவேளை துல்லியமான ஒலி அமைப்பினை ஏற்படுத்தி உதவியதன் மூலம் இசைக் கச்சேரிக்கு உயிரூட்டிய ஒலி அமைப்பாளர் திரு.யதுநந்தன் அவர்களும் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கலைஞர்கள் அறிமுகம், கலைஞர்கள் மதிப்பளிப்பு, என்பவற்றைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் நன்றி தெரிவித்து உரையாற்றியதை அடுத்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வரலாற்றில் இடம்பெற்று காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்திய பெரு விழா நிறைவுக்கு வந்தது. பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவியதுடன் மட்டுமல்லாது அற்புதமான இசை நிகழ்வினைக் கண்டு களித்த மனநிறைவோடு அரங்கத்திலிருந்து மக்கள் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது. பாடசாலை மீதான ஈடுபாட்டினை அதிகரிக்க வைத்ததுடன் சங்கத்தின் நிதி வளத்தினை பெருக்க உதவிய ஒரு எழுச்சி நிகழ்வாக இவ்விழா அமைந்தமையையிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளது. இடைவேளை விடப்படாது தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றபோதும் சிற்றுண்டிகளும் தேநீரும் தொண்டர்களால் தாராளமாகப் பரிமாறப்பட்டிருந்தமை சபையோருக்கு ஆறுதலளிப்பதாகவிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
படப்பிடிப்பு: திருமதி.மலர் குழந்தைவேலு, கே.கே.எலக்ரோனிக்ஸ்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வரலாற்று நிகழ்வாக நடந்தேறிய 5வது ஆண்டு விழாவும் சுப்பர் சிங்கர் ஷ்ரவணின் ‘இசை அருவி’ நிகழ்வும்”