காரைநகர்.இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனை கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வந்த காரை.இந்து அன்னையின் மைந்தனும் பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினருமாகிய திரு.வெற்றிவேலு நடராசா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது.
வலந்தலை, காரைநகரைச் சேர்ந்த இவர் 2014ஆம் ஆண்டு தமது குடும்பத்துடன் இணைந்து ஆறு பரப்புக் காணியினை கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கியவர். இதன் மூலம் கல்லூரியின் விளையாட்டு மைதானம் விரிவாக்கம் செய்ய வழியேற்பட்டது. அத்துடன் 2013ஆம் ஆண்டில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நீதியரசர் நடராசா அவர்களதும் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களதும் திருவுருவப் படங்களை செப்பனிட்டு அழகியமுறையில் மாற்றியமைக்க உதவியதுடன் அரங்கில் தற்போது பாவனையிலுள்ள அழகிய நீல, சிவப்பு வர்ண திரைச்சேலைகளையும் வாங்கி உதவியவர்.
சீமெந்துக் கூட்டுத்தாபன முன்னாள் ஊழியரான இவர் காரைநகரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை நிர்வகித்து வந்ததுடன் கற்பித்தல் பணியிலும் ஈடுபட்டவர். 2012ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தோற்றம்பெற்றிருந்த தொடக்கப் பொதுக்கூட்டத்தில் இவர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியிருந்தமையை இத்தருணத்தில் நினைவுகூருகின்றோம்.
திரு.நடராசா அவர்களின் மறைவினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, மகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
No Responses to “காரை.இந்துவின் பழைய மாணவன் திரு.வெற்றிவேலு நடராசா அவர்களின் மறைவுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அனுதாபம்.”