.காரை.இந்துவின் கீர்த்தி மிக்க பழைய மாணவனான குழந்தைகள் மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்கள் ரொறன்ரோ, கனடாவில் நிபுணத்துவம் மிக்க குழந்தை மருத்துவராக சேவையாற்றி வருவதன் ஊடாகவும் இவரிடத்துக் காணப்படுகின்ற சமூக அக்கறை காரணமாகவும் காரைநகர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது ரொறன்ரோ வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவராக விளங்குபவர்.
காரை.மண்ணினதும் காரை.இந்துவினதும் புகழினை நிலைநாட்டி வருபவரான இவர், இக்கல்லூரி மீது ஆழ்ந்த விசுவாசத்தினை கொண்டு விளங்குவதுடன் இக்கல்லூரியானது அனைத்து வளங்களையும் பெற்று சமூகத்துக்கான கல்விப் பணியினை தளராது ஆற்றவேண்டும் என்கின்ற ஆத்மார்த்தமான சிந்தனையுடன் செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் ஊடாக பேருதவிகள் செய்து வருபவர். இவரது உதவிப் பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற உயரிய பணியாகவும் காரை.இந்துவின் வரலாற்றில் இடம்பிடித்த பணியாகவும் அமைந்து விளங்குவது இவரால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ ஆகும்.
கல்விச் சமூகத்தினது ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்றதும் மாணவர்களது கல்விச் செயற்பாட்டில் தாக்கம் செலுத்த வல்லதுமான கல்லூரியின் மிக முக்கியமான வருடாந்த நிகழ்வான பரிசில் தினத்தினது முக்கியத்துவத்தினை உணர்ந்துகொண்ட மருத்துவகலாநிதி விஜயரத்தினம் அவர்கள் இந்நிகழ்வானது தங்குதடையின்றி தொடர்ந்து நடாத்தப்படவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவராக இந்நிகழ்விற்கு உதவும் அடிப்படையான நோக்குடனேயே குறித்த நிதியத்தினை நிறுவியிருந்தார். ஒன்றரை மில்லியன் ரூபா வங்கியில் வைப்பிலிடப்பட்டு தொடங்கப்பெற்ற இந்நிதியத்தின் வைப்புத்தொகை காலத்திற்குக்காலம் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களின் உதவியுடன் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் பாடசாலைக்கு பயணம் செய்திருந்த வி.விஜயரத்தினம் அவர்கள் பாடசாலையை சுற்றிப் பார்வையிட்டதுடன் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களைச் சந்தித்து கல்லூரியின் முன்னேற்றம் குறித்தும் சிறப்பாக நம்பிக்கை நிதியத்தின் பயன்பாடு குறித்தும் கலந்துரையாடியிருந்ததுடன் தற்போது மூன்று மில்லியன் ரூபாவாக இருக்கும் நிதியத்தின் வைப்புத் தொகையினை ஐந்து மில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவுள்ள தனது விருப்பத்தினையும் தெரியப்படுத்தினார். இந்நிதியத்தினை நிறுவுவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஒத்துழைப்பினை வழங்கியிருந்தது என்பதன் அடிப்படையில் இச்சங்கத்துடனும் கலந்துபேசி நிதியத்தின் வைப்புத் தொகையினை அதிகரிக்கவுள்ளமை குறித்த தமது எண்ணத்தினை வெளிப்படுத்தியிருந்தார்
உறுத்தியளித்தவண்ணம் மேலதிகமாக இரண்டு மில்லியன் ரூபாவினை இம்மாதம் வைப்பிலிட்டதன் மூலம் ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ தற்போது ஐந்து மில்லியன் ரூபா ( 50 லட்சம் ரூபா) வைப்புத் தொகையினைக் கொண்டு விளங்குகின்றது.
நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வட்டித்தொகையிலிருந்து வருடாந்த பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவு ஈடுசெய்யப்பட்ட பின்னர் மீதியிருக்குமானால் கல்லூரியின் வேறு தேவைகளிற்கு பயன்படுத்த முடியும் என்றவாறு நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய மாணவர்களின் ஆளுமை விருத்தியில் தாக்கம் செலுத்த வல்ல மற்றொரு முக்கியமான நிகழ்வான வருடாந்த விளையாட்டுப் போட்டிக்கான உதவியும் 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்நிதியத்திலிருந்து பெறப்பட்டு வருகின்றமையும் சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும்.
காரைநகரில் அதிக வைப்புத்தொகையினைக் கொண்டு சட்டரீதியாக அமைந்து விளங்குகின்ற ஒரேயொரு நம்பிக்கை நிதியம் என்கின்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றதும் வரலாற்று உதவித் திட்டமாகக் கருதப்படக்கூடியதுமான இந்நிதியத்தினை நிறுவியதுடன் மட்டுமல்லாது அதன் வைப்புத்தொகையினை அதிகரிக்க பேருதவி புரிந்து வருகின்ற மருத்தவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களின் அரும்பணியினைப் பாராட்டி உளமார்ந்த நன்றியினையும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் மீண்டும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
காரை.இந்துவிற்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துவிட்ட இந்நிதியத்தை நிறுவி அதன் வைப்புத்தொகையினை அதிகரிக்க உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் கூடவே பாராட்டி இதயபூர்வமான நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை இந்நிதியத்தினை வெற்றிகரமாக நிறுவுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியது என்ற வகையில் மிகுந்த பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றது.
வருடாந்தம் வெளயிடப்பட்டு வருகின்ற பரிசில் தின அறிக்கையில் நிதியத்தின் நிறுவுனர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களது வாழ்க்கைக் குறிப்புக்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. கீழே இணைக்கப்பட்டுள்ள அதன் பிரதியினை பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் வரலாற்று உதவித் திட்டமாகிய ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ ஐந்து மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.”