.காரைநகரின் பெரியமணல் என்ற குறிச்சியில் பல சமூக அமைப்புக்கள் மிகுந்த வினைத்திறனுடன் பணியாற்றி இப்பகுதி மக்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகின்றன. இவ் அமைப்புக்கள் சமூக அக்கறைகொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற பல தன்னலமற்ற செயற்பாட்டாளர்களை கொண்டு விளங்குவனவாகும். காரை.மண்ணின் சேவையாளர்களை இனம்கண்டு அவர்களை கௌரவித்து வருகின்ற இவ் அமைப்புக்களின் பணி விதந்து போற்றுதற்குரியதாகும். அந்தவகையில் தனிப்பட்ட பயணத்தினை மேற்கோண்டு காரைநகர் சென்றிருந்த காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளரும், கனடா-காரை கலாசார மன்றத்தின் உப-தலைவருமாகிய திரு.கனக சிவகுமாரன் அவர்களை அழைத்து அவரது ஊர்ப்பணி சார்ந்த சேவையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள அத்திபுரம் கந்தசுவாமி கோயிலில் வைத்து கனக சிவகுமாரன் அவர்களிற்கான கௌரவம் வழங்கப்பட்டிருந்தது. “காரை.இந்துவின் முத்து” என்ற விருதினை வழங்கி பாராட்டி வாழத்துகின்ற பாராட்டுப்பாமாலை தேசியவிருதிற்கு சொந்தக்காரரான “காரையூர்க் கவிஞர்” வடிவேலு வடிவழைகையன் அவர்களினால் இயற்றப்பட்டு வாசிக்கப்பட்டிருந்ததுடன் இப்பாராட்டுப் பாமாலையினை இவருடன் இணைந்து காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளரும், சிறந்த சமூகச் செயற்பாட்டாளருமாகிய திரு.க.நாகராசா, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி தவமணி பரமானந்தம் ஆகியோர் கனக சிவகுமாரனிடம் கையளித்திருந்தனர்.
தமக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய திரு.கனக சிவகுமாரன் அவர்கள், இப்பகுதி மக்களின் சமூக உணர்வினை தாம் இளமையாக இருந்த காலத்திலேயே தெரிந்து கொண்டிருப்பதாகவும் சமூக உணர்வுடன் செயலாற்றிய முன்னாள் கிராமசபை உறுப்பினர் அமரர் கந்தசாமி, அமரர் சின்னத்துரை, அமரர் சுந்தரம்பிள்ளை போன்றோருடன் தனக்கிருந்த நெருக்கமான தொடர்பினையும் நினைவுகூர்ந்திருந்ததுடன் அவர்களின் வழி வந்தவர்கள் பலரும் இன்று சமூகப் பணியில் ஈடுபட்டு வருவதைக் காண மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்ற இப்பகுதியைச் சேர்ந்த பலரும் நல்லநிலையிலிருந்து கல்லூரிக்கும் காரை.மண்ணிற்கும் பெருமை சேர்த்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகும் எனக் குறிப்பிடதுடன் தனக்கு வழங்கப்பட்ட கௌரவத்தின் ஊடாக காரைநகர் மண்ணிலும் அதன் முன்னேற்றத்தில் பங்காற்றி வருகின்ற அந்தக் கல்லூரியிலும் இப்பகுதி மக்களிற்கு இருக்கக்கூடிய கரிசனையினை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். பொது அமைப்புக்களில் பதவி வகித்து அப்பதவிகளிற்குரிய கடமைகளையே தாம் செய்து வருவதாகவும் இக்கடமைகளின் ஊடாக சில பணிகளை எம்மால் நிறைவேற்றிவைக்கமுடிந்தது என்றால் அதற்கு ஆதாரதளமாக விளங்குபவர்கள் அவ் அமைப்புக்களில் உழைத்து வருகின்ற நிர்வாகிகளும் உதவியும் ஆதரவளித்தும் வருகின்ற உறுப்பினர்களும் ஆவார்கள் என்ற வகையில் அவர்கள் அனைவருக்கும் தங்களால் வழங்கப்பட்ட கௌரவத்தினை சமர்ப்பிப்பதாகவும் கூறி இக்கௌரவத்தினை வழங்க முன்வந்த சிவகௌரி அமைப்புக்களிற்கு உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
கௌரவிப்பு தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளைச் செயலாளரின் சேவையை பெரியமணல் சிவகௌரி அமைப்புக்கள் பாராட்டிக் கௌரவித்துள்ளன.”