சித்திரைப் புதுவருட தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்ற சிவகௌரி சனசமூக நிலையம் மற்றும் சிவகௌரி முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்தும் விளையாட்டுப் போட்டி நிகழ்வு சென்ற 15-04-2023 அன்று பெரியமணலில் உள்ள சனசமூக நிலைய வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
அனைவராலும் நன்கு அறியப்பட்டவரும் அவர்களது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்குபவரும் ஓய்வுநிலை நீதிமன்ற அலுவலருமாகிய சமூகச் செயற்பாட்டாளர் திரு.கயிலாயபிள்ளை நாகராசா அவர்கள் குறித்த விளையாட்டுப் போட்டி நிகழ்வில் வைத்து ‘சமூகத் திலகம்’ என்ற கௌரவ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சிவகௌரி சமூகமும், சிவகௌரி நாடக மன்றம் ஆகியன இணைந்து இவ்விருதினை நாகராசாவிற்கு வழங்கியிருந்தது.
சமூகத்தின் சார்பில் இக்கௌரவ விருதினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்கள் வழங்கிவைத்த அதேவேளை காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபரான திரு.அ.ஜெகதீஸ்வரன், யாழ்ற்ரன் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் திரு.தி.தவரத்தினம் ஆகியோர் மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்தியிருந்தனர்.
“சமூகத்திலகம்” பட்டத்தினை வழங்கி வாழ்த்துகின்ற பாராட்டுப் பாமாலை காரையூர்க் கவிஞர் வடிவேலு வடிவழகையன் அவர்களினால் இயற்றி வாசித்தளிக்கப்பட்டது.
திரு.நாகராசா அவர்கள் சிவகௌரி சமூகத்தினதும் ஒட்டுமொத்த காரைநகர் சமூகத்தினதும் வளர்ச்சியில் ஆற்றி வருகின்ற பங்களிப்பானது போற்றுதற்குரிய உன்னதமானதாகும். சிவகௌரி சமூகத்தின் அனைத்து அமைப்புக்களினதும் நிர்வாகங்களில் அங்கம் வகித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களுக்கான சேவையை வழங்கி வருபவர். சிவகௌரி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் அதன் சேமிப்பிலும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் இரண்டுகோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினைக் கொண்டு யாழ் மாவட்டத்திலே உள்ள சங்கங்களிற்கு முன்னோடியான சாதனை மிக்க சங்கமாக விளங்குவதற்கு திரு.நாகராசா அவர்களது அர்ப்பணிப்பும் ஆளுமை மிக்க செயற்பாடே மூலகாரணமாக விளங்குவது பெருமைக்குரியதாகும்.நாகராசாவினது இப்பணியே அனைத்துப் பணிகளிற்கும் சிகரம் வைத்த பணியாக அமைந்துள்ளது எனலாம்.
சிவகௌரி சமூகத்தின் மேம்பாட்டில் மட்டும் இவரது பங்களிப்பு நின்றுவிடவில்லை. இவரது உயர்வான சமூக சிந்தனையானது ஒட்டு மொத்த காரைநகரின் நலிந்த மக்களது வளர்ச்சியிலும் தாக்கத்தினைச் செலுத்தி வருகின்றது என்றே சொல்லலாம். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், காரைநகர், அபிவிருத்திச் சபை, வைத்தியசாலை நலன்புரிச் சங்கம், காரை.மத்தி மேம்பாட்டுக் கழகம் ஆகிய முக்கியமான அமைப்புக்கள் ஊடாக இவர் வழங்கிய-வழங்கி வருகின்ற சேவைகள் நன்றியுடன் நினைவுகூரத்தக்கனவாகும். இவர் காரைநகர் பிரதேச சபையின் கடந்த நிர்வாகத்தின் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டு பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
97வது சர்வதேச கூட்டறவாளர் தினத்தை முன்னிட்டு மூத்த கூட்டறவாளராக 2019ம் ஆண்டுக்கான விருதை திரு.நாகராசா பெற்றுக்கொண்டவர் என்பதும் இத்தருணத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
குடும்பங்களின் அனைத்து இன்ப துக்க நிகழ்வுகளிலும் நாகராசா அவர்களது பிரசன்னம் இல்லாமல் இருக்காது எனக் கூறுமளவிற்கு அவர் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து கொண்டு நிகழ்வுகள் சார்ந்த பாரம்பரிய சம்பிரதாயங்களை சிறப்பாக மேற்கொள்வதற்கு முன்னின்று உதவி வருபவர்.
எமது கல்லூரியின் பழைய மாணவனான திரு.நாகராசா சமூகத்திலகம் என்ற கௌரவ விருதினைப் பெற்றமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையும் பெருமிதமும் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறது.
விருது வழங்கப்பட்டமை தொடர்பிலான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “‘சமூகத்திலகம்’ கௌரவ விருதினைப் பெற்ற காரை.இந்துவின் பழைய மாணவன் க.நாகராசா அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”