காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனேடிய இசைக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் இசைக் கச்சேரி சென்ற 11 ஆம் திகதி புதன் கிழமை மதியம் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கச்சேரிக்கு பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.
செல்வன் அமுதீசர் அவர்களின் இசைக் கச்சேரி ஈழத்துச் சிதம்பர வசந்த மண்டபத்திலும், கிழவன்காடு கலா மன்ற அரங்கிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசை அரங்கிலும் இடம்பெற்றிருந்தன என்பதுடன் இவரது இசை ஆற்றல் கண்டு இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் வியந்து பாராட்டியதாக அறியமுடிகிறது.
காரை.இந்துவில் இடம்பெற்ற இசைக் கச்சேரிக்கு முன்னதாக அமுதீசர் அவர்கள் இசை பயிலும் மாணவர்களிற்கான பயிலரங்கினை நடாத்தினார். இப்பயிலரங்கில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம், வியாவில் சைவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இசை பயிலும் மாணவர்களும் இசை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களிற்கு அமுதீசர் அவர்கள் அப்பியாசப் புத்தகங்களை வழங்கி உதவியிருந்தார்.
பல்கலைக்கழக் அனுமதி பெற்ற மாணவனுக்கு திருமதி சுந்தரேஸ்வரி மடிக்கணினி அன்பளிப்பு
காரை.இந்துவின் பழைய மாணவர்களான அமுதீசர் அவர்களது பெற்றோர்களான திரு.திருமதி சச்சிதானந்தன் சுந்தரேஸ்வரி தம்பதியினர் காரை.இந்துவின் பரிசளிப்பு விழாவின்போது சங்கீத பாடத்தில் சாதனை ஏற்படுத்திய மாணவர்களிற்கு அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி (திரு.சச்சிதானந்தனின் தாயார்)) நினைவுப் பரிசில்களை கடந்த பல ஆண்டுகளாக உதவி வருபவர்களாவர். இத்துடன் தாயாரான திருமதி சுந்தரேஸ்வரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகப் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். முகாமைத்துவத் துறைக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவன் செல்வன் லுகிர்தன் திருச்செல்வம் அவர்களிற்கு கணினி ஒன்றினை திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் முன்வந்து உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இசைக் கச்சேரி, பயிலரங்கு, கணினி கையளிப்பு ஆகிய நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற கனேடிய இசைக்கலைஞர் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் இசைக் கச்சேரி.”