எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி சனிக்கிழமை காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் வெகு சிறப்பான முறையில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள அதன் 10வது ஆண்டு நிறைவு விழாவில் ரொறன்ரோவின் முன்னணி இசைக்குழுவான நட்சத்திரா வழங்கும் “இன்னிசை வசந்தம்” முக்கிய நிகழ்வாக இடம்பெறவுள்ளது. பிரபல்யம் பெற்று வருகின்ற இவ்விசைக் குழுவை பத்து ஆண்டுகளிற்கு முன்னதாக உருவாக்கியவர்களுள் முக்கியமானவராக விளங்கும் Key Board வாத்தியக் கலைஞர் பிருந்தா ஜெயானந்தன், Octopad வாத்தியக் கலைஞர் பிரவீண் பரமநாதன், Drum வாத்தியக் கலைஞர் சுரீண் பரமநாதன் ஆகியோரும் அற்புதமான பாடகராக மிளர்ந்து வருகின்ற அபிராமி கிருஸ்ணா அவர்களும் காரை.மண் தந்த கலைஞர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளமுடியும். சுப்பர் சங்கர் 6இன் இறுதிப் போட்டியாளர் சின்மயி அவர்களும், தனது சிறந்த குரல்வளத்தினாலும் பாடும் திறனாலும்; ரசிகர்களை கவர்ந்து வருகின்ற வித்தியாசங்கர் சிறீனிவாசன் அவர்களும் இன்னிசை வசந்தம் நிகழ்வில் கலந்துகொண்டு பாடவிருப்பது சிறப்பானதாகும்.
திரைப்பட, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்களாக புகழ்பெற்று விளங்கும் காரை.மண் தந்த P.S.சுதாகரன் அவர்களுடன் S.T.செந்தில்நாதன் இணைந்து வழங்கும் நகைச்சுவைக் கதம்பம் நிகழ்வின்; ஊடாக சிரித்து மகிழ்வதற்கான வேளை அமையவுள்ளது. அண்மையில் நடன அரங்கேற்றம் நிகழ்த்திய சியாமா தயாளனின் மாணவியாகிய செல்வி துர்கா சிவகுமார் தனது அற்புதமான நடனத் திறமையினாலே பலத்த பாராட்டினைப் பெற்று விளங்குபவர். காரைமண்ணின் புதல்வியான துர்கா சிவகுமார் அவர்கள் சிறந்த நடன நிகழ்வினை வழங்கி மகிழ்விக்கவுள்ளார்.
அனுசரணையாளர்கள் கௌரவம், சிறப்புக் கௌரவங்கள், சிறப்பு மலர் வெளியீடு ஆகியனவும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவ்விழாவானது கல்லூரிக்கு உதவுவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சிறப்பாக குறிப்பிடலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10வது ஆண்டு விழாவில் ரொறன்ரோவின் முன்னணி இசைக்குழுவான நட்சத்திராவின் ‘இன்னிசை வசந்தம்’.”