நூற்றுக்கு மேற்பட்ட புற்றுநோயியல் நிபுணர்களை ஆயுட்கால உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறீலங்கா புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் (Srilanka College of Oncologists) தலைவராகவும், ஏழு தெற்காசிய நாடுகள் அங்கம் வகிக்கும் தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பின் புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பினுடைய (SAARC Federation of Oncologists) தலைவராகவும் இவ்வாண்டு பதவி வகிப்பதற்கு காரை.இந்து அன்னையின் மகிமை மிக்க புதல்வனாகிய புற்றுநோயியல் நிபுணர் மருத்துவகலாநிதி நடராஜா ஜெயகுமாரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றது.
மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் பணியாற்றி வருகின்றவரான மருத்துவகலாநிதி நடராஜா ஜெயகுமாரன் அவர்கள் புற்றுநோய் மருத்துவத்துறைக்கான தமது ஆற்றல் மிக்க சேவையை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சமூக அக்கறையுடனும் வழங்கி வருபவர். புற்றுநோயாளர்களை உடல், உள ரீதியாக ஆற்றுப்படுத்துவதில் அவரது அணுகுமுறை தனித்துவமானது. ஜெயகுமாரன் அவர்களுடைய நோயாளர்களது நலன் சார்ந்த கரிசனைக்காகவே பாதிக்கப்பட்டவர்கள் பலரும் அவரிடமே சிகிச்சை பெறவேண்டும் என விரும்பிச் செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இவர் பணியாற்றிய காலத்தில் புற்றுநோய்ப் பிரிவின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி அனைவரதும் பாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியவராக விளங்குகின்றார்.
சட்டத்துறையிலும் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து சட்டத்தரணியாகவும் தன்னை நிலைநிறுத்திய பெருமைக்குரியவர்.
சமூக அக்கறையும், சிறந்த கல்விப் பின்புலத்தையும் கொண்டு விளங்கும் மருத்துவகலாநிதி ஜெயகுமாரன் அவர்களின் தந்தையாரான அமரர் கே.கே.நடராஜா அவர்கள் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியிருந்தவர் என்பதுடன் அவரது தாயாரான அமரர் கமலாவதி நடராஜா அவர்களும் இக்கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரியையாகப் பணியாற்றியிருந்தவராவார்.
தெற்காசியாவின் ஏழு நாடுகளிலும், சிறீலங்காவிலும் பணியாற்றி வருகின்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்களின் தலைவர் என்கின்ற உயரிய பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதன் மூலம் காரை.இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்த மருத்துவகலாநிதி நடராஜா ஜெயகுமாரன் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உளமாரப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்கள்: Srilanka College of Oncologists Facebook
No Responses to “தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பினுடைய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு காரை.இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி நடராஜா ஜெயகுமாரன்.”