கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக (1977-1992) சிறந்த ஆசிரியராக சேவையாற்றிய திருமதி.சிவபாக்கியம் அருமைநாயகம் அவர்கள் அண்மையில் கல்லூரிக்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அயல் கிராமமாகிய மூளாய் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.அருமைநாயகம் அவர்கள் வர்த்தகமும் கணக்கியலும் பாடத்திற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியையாக 1977 ஆம் ஆண்டிலிருந்து எமது பாடசாலையில் சேவையாற்றியவர். அவ்வாண்டிலேயே எமது கல்லூரியில் உயர்தர வகுப்பிற்கான வர்த்தகப்பிரிவும் ஆரம்பிக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இடைநிலை வகுப்புகளுக்கும் வர்த்தகம், சமூகக்கல்வி போன்ற பாடங்களைக் கற்பித்த திருமதி.அருமைநாயகம் அவர்கள் தனது இனிமையான குரலால் மாணவர்களை வசப்படுத்தி சிறப்புடன் கற்பித்தவர் ஆவார்.
கல்லூரியின் பரிசளிப்பு விழா, விளையாட்டுத்துறை மற்றும் மனையியல் துறை, யோகாசனப்பயிற்சி ஆகியனவற்றில் முன்னின்று உழைத்த ஆசிரியை அவர்கள் அனைவரினதும் நன்மதிப்பினைப் பெற்று சேவையாற்றிய ஒரு நல்லாசிரியை என்றால் மிகையாகாது.
இவர் தற்போது ஓய்வுபெற்று தனது சொந்தக்கிராமமாகிய மூளாயில் வசித்து வருகின்றார். தனது ஓய்வுக் காலத்திலும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது தான் கற்பித்த கல்லூரிக்கு மிகவும் ஆர்வத்துடன் அண்மையில் சென்றிருந்தாh. கல்லூரியைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுடனும் கல்லூரியின் தேவைகள் பற்றிக் கலந்துரையாடி தம்மாலியன்ற சிறு நிதி அன்பளிப்பினையும் கல்லூரிக்கு வழங்கிருந்தமையும் குறிபபிடத்தக்கது.
மற்றொரு சிறந்த ஆசிரியையாகிய அமரர் திருமதி.நாகபூசணி தியாகராசா அவர்களின் புதல்வி திருமதி யசோதை சிறிதரன் அவர்களும் கனடாவிலிருந்து சென்றிருந்த வேளையில் திருமதி.அருமைநாயகம் அவர்களுடன் கல்லூரிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின் தற்போதய நிலைமைபற்றி ஆசிரியை அவர்களிடம் குறிப்பிடும்போது பௌதீகவளங்களும், தொழில்நுட்ப வளங்களும் இருக்கின்ற போதிலும் மிகவும் ஆர்வத்துடன் பயிலும் திறமையான மாணவர்களுக்கு மேலும் விஞ்ஞானம் போன்ற பாடங்களைப் போதிப்பதற்கான ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்திருந்தார்.
நாம் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற சொந்தக் கிராமமாகிய காரைநகரிலிருந்து வெளியேறி புலம்பெயர் நாடுகளிலும் தென்னிலங்கை மற்றும் யாழ் குடாநாட்டுப் பகுதிகளிலும் வசதியாக வாழ்வதில் ஆர்வம் காட்டி வரும் எம்மைப் போன்றவர்களுக்கு வசதி குறைந்த அந்தக் காலத்தில் அயல் கிராமத்தில் இருந்து எமது கிராமத்தில் தசாப்த காலமாகச் சேவையாற்றியது மட்டுமல்லாமல் இன்றும் இனிமையான நினைவுகளுடன் கல்லூரிக்கு சென்று தரிசித்து தமது அக்கறையையும் ஆசியையும் வழங்கும் இவ்வாறான ஆசிரியமணிகள் என்றும் எம்மால் மறந்துவிட முடியாத நடமாடும் தெய்வங்களாவர்.
ஆசிரியை அவர்கள் கல்லூரிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “முன்னாள் ஆசிரியை திருமதி.சிவபாக்கியம் அருமைநாயகம் அவர்களின் கல்லூரிக்கான சிறப்பு பயணம்”