யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப் பிரிவின் பகுதித் தலைவராகப் பணியாற்றி வருகின்ற செல்வி சுமத்திராதேவி இராசசிங்கம் அவர்கள் இன்று 25-01-2022 அகவை அறுபதை அடைந்துள்ள தருணத்தில் தனது 30ஆண்டு கால அளப்பரிய கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
காரை.இந்துவின் பழைய மாணவியான செல்வி சுமத்திராதேவி அவர்கள் பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை, காரை.இந்துவின் ஆரம்பப் பிரிவாகச் செயற்பட்டிருந்த சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு ஆகியனவற்றில் பணியாற்றி இன்று கல்வியால் உயர்ந்து விளங்கும் பல நூற்றுக் கணக்கான மாணவர்களிற்கு ஆரம்பக் கல்வியைப் போதித்து சிறந்த அடித்தளத்தினை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்போடு உழைத்து மாணவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள முன்னுதாரணமான ஆசிரியையாவார். சிறப்பாக, மாணவர்கள் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைகள் ஏற்படுத்தியதில் செல்வி சுமத்திராதேவிக்கு பெரும் பங்குண்டு என்றே கூறலாம்.
காரை.இந்துவின் ஆரம்பப் பிரிவாக செயற்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலையின் பகுதித் தலைவராக இவர் பணியாற்றியது இடப்பெயர்வின் பின்னரான முக்கியமான காலகட்டமாகும். இக்காலப் பகுதியில் கல்விச் செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் பல முன்னேற்றகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியதன் மூலம் மாணவர்களின் கல்வியிலும், ஆளுமை விருத்தியிலும் காத்திரமான பங்கு வகித்தவர். இப்பாடசாலையை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு சேவையுணர்வுடன் தளராது உழைத்தவர். 2013ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் சிறந்த ஆசிரியருக்கான ‘குரு பிரதிபா பிரபா’ விருதினைப் பெற்றுக் கொண்டமையானது இவரது அர்ப்பணிப்பு மிக்க கல்விப் பணிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே பார்க்கமுடியும். சிறந்த கல்விப் பாரம்பரியத்திலிருந்தும் வந்த செல்வி சுமத்திராதேவியின் தந்தையாரான அமரர் இராசசிங்கம் அவர்கள் காரைநகரில் பிரபல்யம் மிக்க ஆங்கில ஆசிரியராக விளங்கியவர். இவரது சகோதரனும் ஓய்வுநிலை கிராமசேவை அலுவலருமாகிய திரு.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் காரை.இந்துவில் ஆய்வுகூட உதவியாளராகப் பணியாற்றியிருந்தவர் என்பதுடன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று ஓய்வுபெறுகின்ற காரை.இந்துவின் பழைய மாணவியான செல்வி சுமத்திராதேவி இராசசிங்கம் அவர்களது அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய நீண்ட கல்விப் பணி குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த பெருமிதம் கொள்வதுடன், அவரை உளமாரப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவரது ஓய்வுக் காலம் மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விளங்கவும், நோய்நொடியின்றி நீண்ட ஆயுளைப்பெற்று இன்புற்றிருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றது. அதேவேளை இத்தருணத்தில் 60வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றது.
முன்னாள் கல்வி அமைச்சர்(தற்போதய வர்த்தகத் துறை அமைச்சர்) திரு.பந்துல குணவர்த்தன அவர்களிடமிருந்து சிறந்த ஆசிரியருக்கான ‘குரு பிரதிபா பிரபா விருதினை’ செல்வி சுமத்திராதேவி 2013ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்:
No Responses to “30ஆண்டு கால கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெறுகின்ற காரை.இந்துவின் பழைய மாணவி செல்வி சுமத்திராதேவி இராசசிங்கம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”