யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 2வது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு சென்ற 16, 17ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்த் துறையின் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மாநாட்டின் முதல்நாள் அமர்வின்போது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுநிலை அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் கௌரவத்தினைப் பெற்ற ஏழு புலமையாளர்களுள் ஒருவராக உள்ளார் என்பது காரை.மண்ணிற்கு மட்டுமல்லாது காரை.இந்துவிற்கும் பெருமை சேர்ப்பதாகவுள்ளது.
வேலாயுதபிள்ளை அவர்கள் கௌரவத்தினைப் பெற்றமை குறித்து யாழ்ப்பாண உதயன் நாளிதழில் வெளிவந்திருந்த சிறப்புக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தில் கற்று பண்டிதராகத் தேறியவர். பண்டிதர் ஆறுமுகம், பண்டிதர் மயில்வாகனன், புலவர் சிவபாதசுந்தரனார், பண்டிதை பொன் பாக்கியம் ஆகியோரிடத்தில் தமிழ்க் கல்வியைக் கற்றவர். தமிழ்ப் பாடத்தையும், வர்த்தக பாடத்தையும் போதிப்பதில் வல்லவராக விளங்கினார். ஆசிரியராக மட்டுமல்ல, அதிபராகவும் காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றியவர். காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராகவும், வட்டுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் பதவி வகித்து சைவத்துக்கும், தமிழிற்கும் அவர் ஆற்றிய பணிகள் அளவிறந்தவை. பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தமிழ், சமயம் தொடர்பான ஆழமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகின்றார். இவரது கலைப் பணியைப் பாராட்டி திருவாசகமணி, தமிழ்த்தொண்டன், கலாபூசணம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
மகனின் திருமண வைபவம் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இவருக்கான கௌரவ விருது அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கௌரவத்தினைப் பெற்றமை குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதாக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் அனுப்பிவைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறது.
யாழ்ப்பாண உதயன் நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் பிரதியும், வலம்புரி பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் பிரதியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையின் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் கௌரவத்தினைப் பெற்ற பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களை கல்லூரிச் சமூகம் பாராட்டி வாழ்த்துகிறது.”