கவின் கலைகளில் இசைக்கலை புனிதமானது. மனித நாகரிகம் வளர்ச்சியடைய முன்னரே இசைக்கலை ஒரு தனிமொழியாக விளங்கியது. மொழிமூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத காலத்திலேயே மனிதன் தன் உணர்ச்சிகளை ஓசைமூலம் வெளிப்படுத்தினான்.
இவ் ஓசைகளே இசைதோன்றக் காரணமாய் இருந்தன. மகிழ்ச்சியை ஆரவாரித்தும் பயத்தை இரைந்தும் துன்பத்தை ஓலமிட்டும் மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான். இவ்வாறு இனிமையற்ற ஓசை தவிர்ந்த ஏனையவை நாதம் என அழைக்கப்பட்டன. இந்த நாதமே இசைக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த வகையில் சங்ககால இசைமரபு பற்றி நோக்குவோம்.
சங்ககாலத்தில் ஐவகை நிலங்களும் அவற்றிற்குரிய பண்களும் இருந்தன. அவையாவன குறிஞ்சிப்பண் முல்லைப்பண்- மருதப்பண்- நெய்தற்பண-; பாலைப்பண் என்பவையாம். விபுலானந்தர் தனது நூலில் பன்னிரண்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது ஆயர்பாலை எனவும், நாற்பத்தெட்டு ஸ்வரஸ்தான அமைப்பை உடையது சதுரப்பாலை எனவும், தொண்ணூற்றியாறு கால ஸ்வர நரம்புகளை உடையது திரிகோணப்பாலை எனவும் குறிப்பிடுகின்றார். இவை பின்பு ரி-க-த-நி- தமிழிசையில் தத்தம் கைக்கிளை- விளரி- தாரம் என்னும் ஸ்வரஸ்தானங்களுடன் இணைந்து பதினாறு பண்களாயின. இவை ஒவ்வொன்றும் அகம், புறம், அருகு, பெருகு என்றும் நான்கு பேதமடைந்து அறுபத்துநான்கு பண்களாயின என்றார்.
மேலும் குறிஞ்சி நிலத்திற்குரிய தோற்கருவியாக பிறையும் மருதநிலத்திற்குரிய தோற்கருவியாக முழவும் முல்லை நிலத்திற்குரிய தோற்கருவியாக ஏறு கோட்பறையும் புல்லாங்குழல், நெய்தல் நிலத்திற்குரிய கருவியாக விளரியாழும், நாவாயப்பம்பை முதலியவையும் தோற்கருவியாக தடியும் இசைக்கப்படுகின்றது. பட்டினப்பாலை என்னும் சங்கநூல் காவிhப்பூம்பட்டின பண்டகசாலையில் யாழ்கள் இருந்தன என்று கூறுகிறது.
பரிபாடல் என்பது பண்ணுடன் கூடிய எழுபது இசைப்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். பரிபாடல் முழுவதும் இசைப்பாடல் ஆகும். இதனைப் பாடிய புலவர்கள் பதின்மூன்றுபேர் இவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர், இப்பாடலில் குறிப்பிட்டுள்ள பதினொரு பாடல், பண், பாலை, யாழ் என்னும் இவற்றுள் ஐந்து பாடல் பண் நேர்திறம் என்றும் குறிப்பிட்டுன்ளது. யாழ், குழல், முழவு, பாட்டு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய பெரிய தொகுதியாக பரிபாடல் விளங்குகிறது. பரிபாடலில் பண் வழக்கு தற்போது மறைந்துவிட்டது.
எட்டுத்தொகையைச் சேர்ந்த புறநானூற்றில் பண்கள் பற்றியும் வேய்ங்குழல், ஆம்பற்குழல், சீறியாழ், பேரியாழ், தண்ணுமை, பெருவாத்தியம், முழவு முதலிய இசைக்கருவிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப்பண்ணும் இசைக்கப்படும் மரபு இருந்திருக்கிறது. தவிர புறநானூற்றில் நடுகல் வழிபாடு இருந்திருக்கிறது. போரிடும் வீரனுடைய சிறப்புக்கள் கொடை, புகழ், வீரம் என்பவைபற்றி பாடற் பொருள் அமைந்திருந்தது. இத்தகைய பாடல்களை ஒத்தவையே ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுப்படுத்தல் என்பது வழிப்படுத்தல் ஆகும். பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் மன்னர் கலைஞர்களை எவ்வாறு ஆதரித்தனர் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது. வெறியாட்டு எனப்படும் ஆடலுடன் கூடிய பாடல் முருகன் பெயரில் பாடப்பட்ட இசை வடிவமாகக் காணப்படுகின்றது.
இசைத் தமிழின் அடிப்படை இலக்கணம் பற்றிய குறிப்புக்கள் இடைச்சங்க நூலாகிய தொல்காப்பியத்திலும் கடைச்சங்க நூலாகிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு கீழ்க் கணக்கு நூல்களிலும் காணப்படுகிறது. மேலும் தொல்காப்பியத்தில் பண்ணத்தி பரிபாடல் முதலிய இசைப்பகுதிகள் காணப்படுகின்றன. கலிப்பாவினுள் தாழிசைப் பகுதி இசைப்பாட்டாக உள்ளது.
பத்துப்பாட்டு பாடல்தொகுதி நூல்களில் பாணர்- விறலியர்-கூத்தர்- பொருணன் என்ற நால்வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவர்கள் யாவரும் இசைக்கலையிலும் இசைக்கருவிகளைக் கையாள்வதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். பொருநர் ஆற்றுப்படையில் கூறப்பட்டுள்ள வில்யாழே யாழில் தோற்றமாக இருந்திருக்கிறது. யாழில் தோற்றத்தின் ஆரம்பநிலை வில்யாழிலிருந்தே தோற்றம் பெற்றது.
பேரியாழ் இருபத்தொரு நரம்புகளையும் – மகரயாழ் பத்தொன்பது நரம்புகளையும் – சகோட யாழ் பதின்மூன்று நரம்புகளையும் – செங்கோட்டு யாழ் ஏழு நரம்புகளையம் உடையது. யாழை முதலில் கரிகாம்போதியில் (அதாவது செம்பாலை எனக் கூறுவர்) இசைத்து பின்பு கிரக பேதத்தினால் மத்திமத்தை சட்சமாகக் கொண்டு சங்கராபரணமும் இசைக்கப்பட்டது.
இவ்வாறாக சங்ககாலத்தில் பல்வேறு நூல்களிலும் இசைபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த இசையே பிற்காலத்தில் இசைவளர்ச்சி தமிழிசை வளர்ச்சி இரண்டிற்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.
சங்க காலத்தில் காணப்பட்ட பண்களும் அவை சுட்டும் நூல்களும்
பண்கள் நூல்கள்
1. ஆம்பல்பண் நற்றிணை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு
2. காஞ்சிப்பண் மலைபடுகடாம் – புறநானூறு, சிறுபாணாற்றுப்படை
3. சாமரப்பண் சிறுபாணாற்றுப்படை
4. குறிஞ்சிப்பண் மலைபடுகடாம், நற்றிணை, திருமுருகாற்றுப்படை
5. செவ்வழிப்பண் அகநானூறு, புறநூனூறு, மதுரைக் காஞ்சி
6. நைவளப்பண் குறிஞ்சிப்பாட்டு- பரிபாடல், சிறுபாணாற்றுப்படை
7. பஞ்சுரப்பண் ஐங்குறுநூறு
8. படுமலைப்பண் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு
9. பாலைப்பண் பரிபாடல், பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுப்படை, பொருணாராற்றுப்படை
10. மருதப்பண் மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்
சங்க இசைக்கருவிகளும் அவை சுட்டும் நூல்களும்
இசைக்கருவிகள் நூல்கள்
1. யாழ் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, திருமுருகாற்றுப்படை, பொருனா ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம்
2. கின்னரம் பெரும்பாணாற்றுப்படை
3. குழல் பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து
4. சங்கு திருமுருகாற்றுப்படை, புறநானூறு, பதிற்றுப்பத்து
5. தம்பு ஐங்குறுநூறு, பரிபாடல், மலைபடு கடாம்
6. தண்ணுமை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
7. முழவு குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு
8. முரசு மதுரைக்காஞ்சி, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், பதிற்றுப்பத்து, அகநானூறு
9. பறை புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, மலைபடு கடாம், சிறுபாணற்றுப்படை
இராகசுரபி. செல்வி. பரமேஸ்வரி கணேசக்கம்பர் M.A(Music), M.Phil(Music)
முதுநிலை விரிவுரையாளர்,
இசைத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நன்றி: சயம்பு மலர் – 2005
No Responses to “சங்க காலத்தில் இசை மரபு – இராகசுரபி. செல்வி. பரமேஸ்வரி கணேசக்கம்பர்”