காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி அனைவரும் வியக்கும் வண்ணம் தோற்றம் பெற்று காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய அத்தியாயம் ஒன்று திறக்கப்பட்டிருந்தது. காரைநகர் இந்துக் கல்லூரியின் மேம்பாடு என்கின்ற உன்னதமான இலட்சியப் பயணத்தின் பாதையில் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்தி இன்றைய தினம் ஒன்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து பத்தாவது ஆண்டில் பாதம் பதிக்கின்ற செய்தியினை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக பழைய மாணவர் சங்க நிர்வாகம் வழங்கிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கம் வழங்கிய செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வியக்கத்தக்க அபரிதமான வளர்ச்சியும், கல்லூரியின் மேம்பாடு நோக்கிய மகத்தான வரலாற்றுப் பணிகளும் கல்லூரியைச் சார்ந்தவர்களிற்கு மட்டுமல்லாது கல்வியை நேசிக்கும் காரைநகர் மக்கள் அனைவருக்கும் நிறைவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. சங்கத்தின் வளர்ச்சிக்கும், கல்லூரியின் உயர்ச்சிக்கும் ஆதார தளமாக இருந்து உதவியும், ஆதரவளித்தும் வருகின்ற சங்கத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் தலைசாய்த்து நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். அதேவேளையில் சங்கம் கருக்கொள்ள அடிகோலியோர், இச்சங்கத்தின் உருவாக்கத்தில் பங்குகொண்டு உழைத்தோர், சங்கத்தை வளர்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்ல உழைத்த விசுவாசமும், செயற்திறனும் மிக்க நிர்வாகிகள், போசகர்கள், பிரதேசங்களின் இணைப்பாளர்கள், இணையத்தள நிர்வாகிகள் ஆகியோருக்கும், ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்களை வழங்கி ஊக்கிவித்த பாடசாலையின் அதிபர்கள், தாய்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கும் நன்றிபாராட்டி மகிழ்கின்றோம்.
என்றும்போல கல்லூரி அன்னை மீது விசுவாசம் மிக்க அனைவரதும் உதவியும் ஒத்துழைப்பும் இருக்கும் வரைக்கும் சங்கமானது தனது இலட்சியப் பயணத்தில் தளராது தொடர்ந்து வீறுநடைபோட்டு கல்லூரியின் உயர்ச்சிக்காக உழைக்கும் என இத்தருணத்தில் உறுதிகூறுகிறது.
கல்லூரியின் பழைய மாணவன் அமரர் ‘சங்கீதபூசணம்’ புண்ணியமூர்த்தி அவர்களினால் பாடப்பெற்று பதிவுசெய்யப்பட்ட கல்லூரிக் கீதத்தினை கீழே கேட்கமுடியும்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தனது இலட்சியப் பயணத்தில் வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்திய வண்ணம் பத்தாவது ஆண்டில் பாதம் பதிக்கின்றது!”