தனியார் ஆசிரியரான அமரர் சி.குமாரவேலுவிடம் கல்வி கற்ற தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் அன்னாரது கற்பித்தல் முறையினாலும், மனதில்பதியும்படி கூறிவந்த அறிவுரைகளினாலும், அன்னாரது அரும் குணங்களினாலும் ஈர்க்கப்பட்டவர். அமரர் குமாரவேலு மாஸ்டர் அவர்களின் அறிவுரைகள் தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவனவாகவுள்ளன என்பதை அமரர் குமாரவேலு மாஸ்டர் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய திரு.மகாதேவன் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் கனடாவில் பெரும் தொழில் நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கின்ற தொழில் அதிபராக பரிணமிப்பதற்கு அவரது விடா முயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு என்பனவே அடிப்படையானவையாகும். கனடாவில் CLEARREX – Windows & Doors Manufacturing Inc., DOUBLESEAL INSULATING GLASS LTD. ஆகிய தொழில் நிறுவனங்களை நடாத்தி வருகின்ற திரு.மகாதேவன் அவர்கள் பல்வேறு தர்ம கைங்கரியங்களிற்கும், காரை.மண்ணின் பல அபிவிருத்திப் பணிகளிற்கும் உதவி வருபவர். சிறப்பாக கல்வி அபிவிருத்திக்கான பணிகளிற்கு உதவுவதில் அதிக நாட்டம் கொண்டவர். காரை.இந்து அன்னையின் விசுவாசம் மிக்க புதல்வரான திரு.மகாதேவன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தோற்றம் பெற்ற காலம் முதலாக அதன் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவராக இருந்து உதவி வருவதுடன் சங்கத்தினால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட திட்டங்களிற்கும் பெரும் பங்கினை அளித்து வருபவர். காரைநகரின் இடப்பெயர்வினால் சேதமுற்றிருந்த கல்லூரியின் நிறுவுனர் சயம்பு அவர்களின் சிலை இவரது முழுமையான பங்களிப்புடனேயே திருத்தி அமைக்கப்பட்டிருந்தது என்பதுடன் சிலை அமைந்துள்ள இடத்தை பாதுகாப்பாகவும், அழகாகவும் அமைப்பதற்கான பொறுப்பினையும் திரு.மகாதேவனே ஏற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உயர் கல்வியை மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளவும் தேசியப் பரீட்சையான க.பொ.த. சாதரண தரப் பரீட்சையில் மாணவர்கள் பெறுகின்ற பெறுபேறுகளே தீர்மானிப்பனவாகும். அந்தவகையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் முக்கியத்துவத்தைக் கருதி இப்பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று வருகின்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்ற பணியினை கடந்த ஏழு ஆண்டுகளாக பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை செய்து வருகின்றது. இந்தப் பணியானது மாணவர்களது கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவே கருதப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இப்பணியினை தொழிலதிபர் மகாதேவன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு தனது முன்னாள் ஆசிரியர் அமரர் குமாரவேலு அவர்களின் ஞாபகார்த்தமாகச் செய்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாவினை உதவ முன்வந்து இத்தொகையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையிடம் கையளித்துள்ளார். இவரது முன்மாதிரியான இப்பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி மகாதேவன் அவர்களிற்கு உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
திரு.மகாதேவன் அவர்களின் உதவித்தொகை ஐந்து இலட்சம் ரூபாவும் தாய்ச் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு வங்கி ஒன்றில் நிரந்தர வைப்பிலிடப்பட்ட பின்னர் இதன் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகை மாணவர்களின் ஊக்குவிப்பிற்கு ஆண்டுதோறும் பயன்படுத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி திட்டத்தினைச் செயற்படுத்த முன்வந்த கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களிற்கும், தாய்ச் சங்கத்தின் நிர்வாகத்திற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உளமார்ந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளது. வைப்பிலிடப்படும் உதவித்தொகையிலிருந்து பெறப்படும் வட்டித்தொகை ஒரு வருட பூர்த்தியின் பின்னரே அதாவது அடுத்த ஆண்டே கிடைக்கப்பெற்று குறிப்பிட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால் இத்திட்டத்தினை இவ்வாண்டிலிருந்தே செயற்படுத்த விரும்பிய திரு.மகாதேவன் அவர்கள் அதற்குத் தேவைப்படும் ஊக்குவிப்புத் தொகையினையும் மேலதிகமாக உதவியுள்ளார்.
அமரர் சி.குமாரவேலு அவர்களின் 1வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு ZOOM மூலம் சென்ற 07-08-2021 சனிக்கிழமை நடைபெற்றபோது திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆற்றியிருந்த நினைவுரையின் பதிவுசெய்யப்பட்ட ஒலிவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “தான் கற்ற ஆசிரியரின் ஞாபகார்த்தமாக மாணவர்கள் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு உதவிய தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் முன்மாதிரிப் பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி நன்றி கூறுகிறது.”