கல்வியை வழங்கும் நிறுவனங்கள் பலவற்றுள் பாடசாலைகள் ஆற்றல் மிக்க பின்னணியுடன் செயற்பட்டாலும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தனியார் ஆசிரியர்களின் பங்களிப்பு மாணவர்களின் கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மறுக்கமுடியாத உண்மையாகும். அந்தவகையில் 1980களில் காரைநகரில் கல்வியைப் போதித்து வந்த தனியார் ஆசிரியர்கள் வரிசையில் முன்னிலை பெற்று விளங்குபவர் அமரர் சி.குமாரவேலு அவர்களாவர். அன்னாரது முதலாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இணைய வழி ஊடாக காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் சென்ற 07-08-2021 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
அமரர் சி.குமாரவேலு அவர்களிடம் விஞ்ஞானக் கல்வியைப் பெற்று உயர்நிலையிலிருக்கும் அன்னாரது பழைய மாணவர்கள் , கல்வியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என முப்பதுக்கு மேற்பட்டோர் அமரரது கல்விச் சேவை, அன்னார் உப-தபாலதிபராகவும் பின்னர் தபாலதிபராகவும், தபால் போதனாசிரியராகவும் பதவிகள் வகித்தபோது வழங்கிய மக்களுக்கான சேவை, அன்னாரது உன்னதமான பண்புகள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டிருந்தனர்.
மருதடி, காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் குமாரவேலு அவர்கள் ‘செல்வா கல்வி நிலையம்’ என்ற பெயரில் தனியார் கல்வி நிலையத்தினை வலந்தலை உப-தபாற்கந்தோர் அமைந்திருந்த வளாகத்தினுள் நிர்வகித்து நடாத்தி வந்ததுடன் இங்கு விஞ்ஞானக் கல்வியை திறம்படப் போதித்து வந்துள்ளார். கற்பித்தல் உத்திகளையும் நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டு மாணவர்களின் மனம் கவரும் வண்ணம் கற்பித்து வந்ததுடன் கற்பித்தலுக்கு அப்பால் மாணவர்களிற்கு நல் அறிவுரைகளையும், நற்சிந்தனைக் கருத்துக்களையும் வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியவர். மாணவர்களின் முன்னேற்றம் குறித்து அவர்களது பெற்றோருடன் தொடர்புகளைப் பேணி வந்ததுடன் அவ்வப்போது பரீட்சைகளை வைத்து தனது செலவில் ஊக்குவிப்புப் பரிசில்களை வழங்கிவந்தவர். பணத்தை மட்டும் நோக்காகக் கொள்ளாது சேவை உணர்வோடு கற்பித்து வந்த இவர் கஸ்டமான மாணவர்களிடமிருந்து கட்டணம் எதுவும் பெற்றுக்கொள்ளாது கற்பித்த மனிதநேயப் பண்பாளர். காரைநகர் இந்துக் கல்லூரியில் பயின்ற மாணவர்களே அதிகம் இவரிடத்தில் பயன்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் குமாரவேலு ஆசிரியர் அவர்களிடம் பயின்று பல்வேறு நாடுகளிலும் உயர்நிலையில் இருக்கும் அன்னாரது மாணவர்களாகிய காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் செல்வி பரமேஸ்வரி கணேசன், பொறியியலாளர் சிவசித் ஆறுமுகம்(நியூசிலாந்து), யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம், பொறியியலாளர் ஞானசோதி பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), தனியார் ஆசிரியரும் ஓய்வுநிலை கிராம சேவை அலுவலருமான திரு. இ.திருப்புகழூர்சிங்கம், ஒலிபரப்பாளரும் ஊடகவியலாளருமான திரு.இளையதம்பி தயானந்தா(லண்டன்), பொறியியலாளர் கலாநிதி வாசுகி இராசநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), சட்டத்தரணி திருமதி நிவேதனா அச்சுதன்(அவுஸ்திரேலியா), மருத்துவகலாநிதி அனுசியா சிறீதரன்(சிறீலங்கா), யாழ்ப்பாணக் கல்லூரி உப-அதிபர் திரு.விக்ரர் ஜெயகுமார், தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம்(கனடா), புற்றுநோய் மருத்துவநிபுணர் மருத்துவகலாநிதி நடராசா ஜெயகுமார்(சிறீலங்கா), ஆங்கில ஆசிரியை திருமதி நளாயினி யோகேஸ்வரன்(சிறீலங்கா), தினகரன் ஆசிரியர் திரு.செந்தில்வேலவர் தேவதாசன், பேராசிரியர் கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன்(லண்டன்), மருத்துவகலாநிதி நவநீதன் ஞானசுதன்(சிறீலங்கா), தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் திரு.கந்தையா பஞ்சலிங்கம்(கனடா), திருமதி ஜெயா ஜெயமோகன்(சிறீலங்கா), வங்கி அலுவலர் திருமதி ஜெயதேவி சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரும் அமரருடன் கல்வி சார்ந்த தொடர்புகளைப் பேணி நட்புடன் பழகியவர்களான ஓய்வுநிலை அதிபர் திருமதி மாலதி சிவகுமார், ஓய்வுநிலை அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம், காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் திரு.செல்வச்சந்திரன்(நேருமாஸ்டர்) ஆகியோரும் உள்ளிட்டு முப்பதிற்கு மேற்பட்டோர் நினைவுரைகளை நிகழ்த்தியிருந்தனர்.
இவரது நல் மாணாக்கர்களுள் ஒருவரான கனடாவில் வதியும் தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது முன்னேற்றத்தில் குமாரவேலு ஆசிரியரின் பங்களிப்பினை நன்றியோடு நினைவுகூர்ந்து அன்னாரை என்றென்றும் நினைவுகூரும் வகையில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களிற்கான ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தமை சிறப்பானதாகும். இவ் ஊக்குவிப்புத் திட்டம் குறித்த விரிவான செய்தி பின்னர் எடுத்துவரப்படும்.
நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளரான அமரர் குமாரவேலு அவர்களின் சகோதரனும் காரை.இந்துவின் பழைய மாணவனும் தற்போது அவுஸ்திரேலியாவில் கணினி மென்பொருள் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான திரு.பழனி சிதம்பரன் அவர்கள் நன்றி கூறினார்.; கணினி தொழில்நுட்பவியலாளர் திரு.ஏகநாதன் சிவானந்தா(கனடா), பொறியியலாளர் நவநீதன் ஞானரஞ்சன்(சிங்கப்பூர்), ஆகியோரும் அமரர் குமாரவேலு ஆசிரியரின் வேறும் பல மாணவர்களும் இந்நிகழ்வினை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கு செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நினைவு வணக்க நிகழ்வின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்: திருத்தப்பட்டது.
நினைவு வணக்க நிகழ்வில் இணைந்துகொண்டவர்களை Screenshot மூலம் எடுக்கப்பட்டு கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப் படங்களில் பார்வையிடலாம்:
No Responses to “தனியார் கல்வி நிறுவன முன்னாள் ஆசிரியர் அமரர் சி.குமாரவேலு அவர்களின் அளப்பரிய சேவை அன்னாரது முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வின்போது உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.”