காரை இந்துவின் 125வது ஆண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பில் அண்மையில் காரைநகர் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகம் கல்லூரியின் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் கூடி ஆராய்ந்தது. எதிர்வரும் ஆகஸ்டு மாதத்தில் விழாவினை கல்லூரியில் சிறப்புற ஏற்பாடு செய்து நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டதுடன் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இணைந்து இவ்விழாவினை கொண்டாடி கல்லூரி அன்னையை பெருமைப்படுத்துவதுடன் அன்னையின் அரவணைப்பிலே வளர்ந்த தாமும் இக்கொண்டாட்டத்தினூடாக பெருமிதம்; கொள்ளுமாறும் பழைய மாணவர் சங்க நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விழாவினை கனடாவிலும் கொண்டாடுமாறு கடிதமூலம் கனடா கிளையினை கேட்டுக்;கொண்டுள்ள சங்க நிர்வாகம் கல்லூரிக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தமது கடிதத்தில் குறிப்பிட்டு அதற்கான ஆதரவினையும் உதவிகளையும் வேண்டிக்கொண்டுள்ளது. அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் இந்து ஆங்கில வித்தியாசாலை என்னும் பெயருடன் 1888ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை கீர்த்திமிகு அதிபர்கள் மேன்மைமிக்க ஆசான்கள் மானுடம் மேன்மை பெற்றிடவேண்டும் என்கின்ற சிந்தை படைத்த நலன் விரும்பிகள் ஆகியோரின் உன்னதமான பணிகளால் 125 ஆண்டுகள் என்கின்ற நீண்ட கல்விப்பணியாற்றி சமூகத்திற்கு நற்பிரசைகளையும் கல்விமான்களையும் தொழில்சார் வல்லுனர்களையும் உருவாக்கி கிராமத்தை ஒளிபெறச்செய்த கல்லூரி தொடர்ந்தும் தன் கல்விப்பணியினை தளராது ஆற்றிவருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
1)குண நல கல்வி அபிவிருத்தி
2)கற்றலிற்கான புறச்சூழலை ஏற்படுத்தல்
3)கல்வியில் ஏற்படும் மாற்றங்கள் தேவைகளிற்கு ஏற்ப பௌதிக வளங்களை ஏற்படுத்தல்
போன்ற விடயங்களில் உயர்வினை ஏற்படுத்தி கல்லூரியின் பணி மேன்மையுற்று விளங்க பழைய மாணவர்களுடனும் நலன் விரும்பிகளுடனும் தொடர்பாடல்களை தங்கள் அமைப்பூடாக ஏற்படுத்தி காத்திரமான பங்களிப்பினை நல்குமாறு காரைநகரில் செயற்படும் பழைய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. மேற்குறித்த மூன்று விடயங்களிலும் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பான திட்டங்கள் காலக்கிரமத்தில் தங்களிற்கு முன்வைக்கப்படும்.
125வது ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைகளையும் பங்களிப்புக்களையும் எதிர்பார்ப்பதாகவும் சங்க நிர்வாகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்பாடல்களை மேற்கொண்டு பணிகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு சங்கத்தின் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை 125வது ஆண்டு விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாக சபை கூடி தீர்மானிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா இவ்விணையத்தளத்திற்கு தெரிவித்தாh.இதேவேளை பிரித்தானியா – காரை நலன்புரிச் சங்கம் இவ்விழாவினை மே மாதம் கொண்டாடவிருப்பதாக அதன் தலைவர் திரு.பரமநாதர் தவராசா அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “காரையின் கலங்கரை விளக்கம் இந்துவின் 125வது ஆண்டு விழா கனடாவிலும் கொண்டாடுமாறு பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள்”