காரை.இந்துவில் 27 ஆண்டுகளாக (1961-1988) அரும்பணியாற்றி பல நல் மாணாக்கர்களை உருவாக்கி அவர்கள் அனைவரதும் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பவர் “நாகபூசணி ரீச்சர்” என அழைக்கப்பட்ட திருமதி நாகபூசணி தியாகராசா அவர்கள். மூளாய் கிராமத்திலிருந்து கிரமமாக வருகை தந்து தமிழ், சமயம் ஆகிய பாடங்களை மாணவர்களது மனம் கவரும்படி திறம்படப் போதித்தவர். மாணவர்களது கல்வி மேம்பாட்டிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிலும் கண்டிப்பாக நடந்துகொண்டாலும் நயமாகப் பேசி மாணவர்களது அன்பையும் மதிப்பையும் பெற்றவர். கல்லூரியை உன்னதமான நிலைக்குக் கொண்டு வர உழைத்த வெள்ளிவிழா அதிபர் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களது பதவிக் காலத்தில் “நாகபூசணி ரீச்சர்” அவர்கள் பணியாற்றியமை சிறப்பானது என்பதுடன் கல்லூரியின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முன்னின்று பணியாற்றிப் பாராட்டினைப் பெற்றவர். ஆசிரியைகளுக்குள் ஓர் திலகமாக விளங்கிய “நாகபூசணி ரீச்சர்” அவர்கள் காரை.இந்துவில் தமது ஆசிரியப் பணியைத் தொடங்கி இக்கல்லூரியிலேயே பணியை நிறைவு செய்த பெருமைக்குரியவர். மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் காரை.இந்துவையும், காரைநகர் மக்களையும் நேசித்த “நாகபூசணி ரீச்சர்” அவர்கள் காரைநகர் மக்களது முன்னேற்றத்தில் பெரும் பங்குகொண்டு அவர்களது அன்பையும் மதிப்பையும் பெற்றவராக விளங்குபவர்.
“நாகபூசணி ரீச்சர்” அவர்கள் மறைந்த 10வது ஆண்டு நினைவு கூறப்படும் இவ்வேளையில் அன்னாரது அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய கல்விப் பணியினை காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நன்றியுடன் நினைவுகூறுவதாக சங்க நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No Responses to ““நாகபூசணி ரீச்சர்” அவர்கள் மறைந்த 10வது ஆண்டு நிறைவில் காரை.இந்துவிற்கான அன்னாரது அளப்பரிய கல்விப் பணி நன்றியோடு நினைவுகூறப்படுகிறது.”