திரு.தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்கள் சிவபதம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளேன்.
திரு.தி.மார்கண்டு அவர்கள் எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையினை ஆரம்பிப்பதில் முழு மூச்சாக செயற்பட்டு ஆரம்ப காலம் முதல் தன் இறுதி மூச்சு வரை அதன் செயலாளராக கடமையாற்றியவர்.
இடப் பெயர்வை தொடர்ந்து கல்லூரி தன் சொந்த இடத்தில் மீள இயங்க ஆரம்பித்த 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில், கல்லூரிக்கு வேறு நிதியுதவிகள் பெரியளவில் கிடைக்காத சந்தர்பத்தில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்திக் ஊடாக நிதியுதவி பெற்றுத் தந்து பெரும் பங்காற்றியதை நன்றியுடன் நினைவு கூருகின்றேன். அக்கால கட்டத்தில் பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி, ஆசிரியர் தின விழா போன்றவற்றுக்கு பழைய மாணவ சங்க கொழும்பு கிளையின் பங்கு போற்றுதற்குரியதாக இருந்தது. மேலும் 2000ஆம் ஆண்டைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பாடசாலைக்கு காணிகளை பெற்றுக் கொள்வதில் அன்னாருடைய பங்களிப்பு பெரியளவில் இருந்ததை நான் நன்கு அறிவேன்.
2000, 2001, 2002 காலப்பகுதியில் தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொள்ள கொழும்பிற்கு நான் மாணவரை அழைத்துச் சென்ற போது, எம்மைச் சந்தித்து ஆக்கமும் ஊக்கமும் நல்கிய நினைவுகளை நான் மீட்டிப் பார்க்கின்றேன்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
திரு அ.ஜெகதீஸ்வரன்
அதிபர்
யா/காரைநகர் இந்துக்கல்லூரி, காரைநகர்
No Responses to “காரை.இந்துவின் வளர்ச்சியில் அக்கறையோடு செயற்பட்டஅமரர் திரு தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்களின் மறைவிற்கு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அனுதாபம்.”