அண்மையில் வெளியிடப்பட்டிருந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். பெறுபேறு, மாவட்ட நிலை, பாடப் பிரிவு ஆகியவற்றை கருத்திற்கொள்ளும்போது செல்வி கம்சிகா தேவராசா, செல்வி கிருத்திகா இராசலிங்கம் ஆகிய இரு மாணவிகளும் முன்னிலை பெற்று பல்கலைக்கழ அனுமதியைப் பெற்றுக்கொள்வது நிச்சயமானது எனக் கருதப்படுகிறது. கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்ற செல்வி கம்சிகா தேவராசா பொறியியல் துறைக்கும், வர்த்தகப் பிரிவில் 2AC சித்திகளைப் பெற்ற செல்வி கிருத்திகா இராசலிங்கம் முகாமைத்துவத் துறைக்கும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை படைத்து காரை.இந்துவிற்கு புகழ்சேர்த்த இவ்விரு மாணவிகளிற்கும் பயன்படக்கூடிய வகையில் மடிக் கணினிகளை அன்பளிப்புச் செய்வதற்கு காரை.இந்துவின் இரு பழைய மாணவர்கள் முன்வந்து உதவியுள்ளனர்.
கனடாவில் வதியும் பழைய மாணவனான திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களும் அவரோடு இணைந்து அவரது புதல்வனான திரு.அரவிந்தன் அவர்களும் மற்றொரு பழைய மாணவனான் ஐக்கிய அமெரிக்கா Texas மாநிலத்தில் புவி விஞ்ஞானியாகப்(Geoscientiist) பணியாற்றி வருகின்ற இயந்திரப் பொறியியலாளர் சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவர்களுமே உதவியை வழங்கி கல்லூரி மீதான விசுவாசத்தினையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
காரை.இந்துவில் கற்ற பின்னர் மலேசியா சென்று பணியாற்றியிருந்ததுடன் ‘சாம்பசிவம் ஞானாமிர்தம்’ அல்லது ‘நன்னெறிக் களஞ்சியம்’ என்ற பாராட்டைப்பெற்ற நாவலை இயற்றியதன் ஊடாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் முதல் இலக்கியப் படைப்புக்களில் ஒன்று என்கின்ற வரலாற்றினை ஏற்படுத்தி காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்தவரும், சமய, சமூக சேவையாளருமாகிய அமரர் அருணாசலம் நாகலிங்கம் அவர்களின் புதல்வரே திரு.குஞ்சிதபாதம் என்பதுடன் இவர் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவராகப் தற்போது பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
புவி விஞ்ஞானியும், இயந்திரப் பொறியியலாளருமான திரு.திருஞானசம்பந்தன் அவர்கள், சிறந்த சமய உணர்வாளரும், இனமொழிப் பற்றாளரும் புகழ்மிக்க தமிழ் ஆசிரியராக காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்டவருமான மருதடியைச் சேர்ந்த அமரர் சிற்றம்பலம் அவர்களின் புதல்வராவார். திருஞானசம்பந்தன் அவர்களது துணைவியாரான நிர்மலாதேவி அவர்களும் காரை.இந்துவின் பழைய மாணவி என்பதுடன் கல்லூரியின் பிரபல ஆசிரியரான அமரர் ஐயாத்துரை மாஸ்டர் அவர்களின் புதல்வியுமாவார். பழைய மாணவர் சங்கம் உருவாக்கம் பெற்ற காலம் முதலாக சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து நிகழ்வுகளிற்கும் திருஞானசம்பந்தன் அவர்கள் அனுசரணை வழங்கி வருவதுடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக தமது உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தினர் தாய்ச் சங்கத்துடன் இணைந்து சாதனை மாணவிகளிற்கு கணினிகளை அன்பளிப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கோவிட் தொற்றினால்; ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எளிமையான முறையில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து கணினிகள் வழங்கப்பட்டிருந்தன. திரு.குஞ்சிதபாதம் அவர்களின் சகோதரனும், ஓய்வுநிலை பனை அபிவிருத்திச் சபை அலுவலரும், கல்லூரியின் பழைய மாணவனுமாகிய திரு.நா.பாலகிருஸ்ணன் அவர்கள் செல்வி கம்சிகா தேவராசாவிற்கும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளரான திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் செல்வி கிருத்திகா இராசலிங்கத்திற்கும் கணினிகளை வழங்கிவைத்திருந்தனர். இந்நிகழ்வில் தாய்ச் சங்கத்தின் உப தலைவரும் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, மாணவிகளிற்கு கற்பித்த ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சாதனைச் செல்விகளை பாராட்டி வாழ்த்தி உரையாற்றிய அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள், கல்வியில் சிறந்து விளங்கி பாடசாலைக்கு மேலும் புகழ் சேர்ப்பதுடன் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் விசுவாசமும் பயனும் மிக்கவர்களாக விளங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாணவிகளிற்கான கணினிகளை வழங்குவதற்கு உதவிய திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம், அவரது புதல்வன் திரு.அரவிந்தன் குஞ்சிதபாதம் மற்றும் பொறியியலாளர் சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் ஆகியோரது பாடசாலை மீதான விசுவாச உணர்வினைப் பாராட்டியதுடன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் இவ்வுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையையும் பாராட்டி நன்றி கூறினார்.
கணினிகள் வழங்கப்பட்ட நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:சாதித்த பெருமிதத்தில் செல்வி கிருத்திகா இராசலிங்கம், செல்வி கம்சிகா தேவராசா.அதிபர், உபஅதிபர் ஆசிரியர்கள் ஆகியோருடன் சாதனை மாணவிகள்
ஆசிரியை திருமதி சு.சுகன்யா(இணைந்த கணிதம்), உப அதிபர் திருமதி அருபா ரமேஸ் , திரு.ச.அரவிந்தன்(இரசாயனவியல்), செல்வி கிருத்திகா இராசலிங்கம், செல்வி கம்சிகா தேவராசா, ஆசிரியர் திரு.மு.ஜெயானந்தன்(பௌதிகவியல்), அதிபர் அ.ஜெகதீஸ்வரன்ஆசிரியை திருமதி ச.கேசவன்(பொருளியல்), உப அதிபர் திருமதி அருபா ரமேஸ், ஆசிரியை திருமதி தயாளினி ஜெயகுமார்(கணக்கீடு), செல்வி கிருத்திகா இராசலிங்கம், செல்வி கம்சிகா தேவராசா. ஆசிரியை திருமதி உசாந்தினி புஸ்பகாந்தன்(பொருளியல்), அதிபர் அ.ஜெகதீஸ்வரன்
No Responses to “காரை.இந்துவின் பழைய மாணவர்கள் இருவர் முன்வந்து வழங்கிய உதவியினால் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த இரு மாணவிகளுக்கு மடிக் கணினி(Laptop) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது”