காரை.இந்து அன்னையின் பெருமை மிக்க புதல்வர்களில் ஒருவரும், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினரும் ஓய்வுநிலை தபாலதிபருமாகிய ‘கலைமாமணி’ ஆறுமுகம் முருகேசு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரும் அடைந்துள்ளது.
கோணலோடை, வலந்தலை, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கொழும்பில் வசித்து வந்தவரான ஆறுமுகம் முருகேசு அவர்கள் தாம் கற்ற கல்லூரி மீது மிகுந்த விசுவாசம் கொண்டவராக கொழும்புக் கிளையின் நிர்வாக சபையில் செயலூக்கம் மிக்க உறுப்பினராகவிருந்து நீண்டகாலம் பணியாற்றியவர். அவர் ஸ்ரீலங்கா அரசில் தபாலதிபராக பணியாற்றிய காலத்தில் தமது பணியினை மிகுந்த அர்ப்பணிப்புடனும், கடமை உணர்வுடனும் மேற்கொண்டிருந்து மேலதிகாரிகளின் பாராட்டிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கியவர். இவரிடத்திலே காணப்பட்ட கலை உணர்வும், கலையினை ரசிக்கும் தன்மையும் வியந்து பாராட்டக்கூடியதாகும். தமிழ் மக்களின் உன்னதமான் கலைகளின் பெருமைகளை வெளிக்கொணரும் வகையிலும, கலைஞர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் இவரிடத்தில் இயல்பாகவே இருந்து வந்த எழுத்தாற்றலைப் பயன்படுத்தினார். கலை, கலைஞர்கள் சார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் இவரால் எழுதப்பட்டு வந்த கட்டுரைகள் ஸ்ரீலங்காவின் பிரதான நாளிதழ்களான வீரகேசரி, தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளன. சிறப்பாக தமிழ் மக்களின் மங்கலகரமான இசையாகவும், பழமை மிக்க பாரம்பரியக் கலையாகவும் கருதப்படுகின்ற தவில், நாதஸ்வரக் கலை குறித்தும, அதில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் குறித்தும் இவரால் எழுதப்பட்டு வந்த கட்டுரைகள் பிரபல்யம் பெற்று வாசகர்களின் பாராட்டைப் பெற்றவையாகும். முருகேசு அவர்களின் கலைச் சேவையினைப் பாராட்டி ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சராகவிருந்த திரு.மனோகணேசன் அவர்களினால் 2019ம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை பெருமையளிப்பதாகும்.
அமரர் முருகேசு அவர்கள் காரை.இந்துவில் பணியாற்றிய புகழ் மிக்க ஆசிரியரும், சமூக சேவையாளருமான அமரர் வி.சுப்பிரமணியம் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் கலையுணர்வு மிக்க முருகேசு அவர்களின் கலைப் பாரம்பரியத்திலிருந்து வந்தவரான இவரது மகன் ரவீந்திரன் அவர்கள் ஸ்ரீலங்கா ஒலிபரப்புக் கூட்டத்தாபன வடபராந்திய தமிழ் ஒலி பரப்புச் சேவையின் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முருகேசு அவர்களின் இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்தில் சௌந்தராம்பிகை உடன் உறையும் சுந்தரேசப் பெருமானை பிரார்த்திக்கின்றது.
ஆறுமுகம் முருகேசு அவர்களின் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்த மரண அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகம் முருகேசு அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ‘கலைமாமணி’ விருதுடன் காணப்படுகின்றார்.
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் ‘கலைமாமணி’ ஆறுமுகம் முருகேசு அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி”