காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி அர்ப்பணிப்பு மிக்க சிறந்த சேவையை வழங்கியிருந்ததுடன் காரைநகர் மக்களோடு மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்து அவர்களது முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்து அவர்களது அன்பையும் மதிப்பையும் பெற்று விளங்கும் காரைநகரைச் சேராத ஆசிரியர்கள் வரிசையில் அமரர் திருமதி நாகபூசணி தியாகராசா, திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன், அமரர் ‘சங்கீதபூசணம்’ சுப்பையா கணபதிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அண்மையில் மறைந்த கல்லூரியின் முன்னாள் இசை ஆசிரியரான “சங்கீதபூசணம்” கணபதிப்பிள்ளை அவர்கள் காரைநகர் மக்களிற்கும் தமக்கும் இருந்து வந்துள்ள நெருக்கமான தொடர்புகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி ‘என் வாழ்நாளில் காரைநகர்’ என்ற தலைப்பிலான கட்டுரையினை 2013ஆம் ஆண்டில் கல்லூரியின் 125வது ஆண்டு விழா சிறப்பு மலராக வெளியிடப்பெற்ற சயம்பு மலரில் எழுதியிருந்தார். அன்னார் மறைந்த 31வது நாள் நினைவுகூரப்படும் இத்தருணத்தில் அன்னாரால் எழுதப்பட்ட இக்கட்டுரையினை இங்கே மீளப் பிரசுரிப்பதுடன் இக்கட்டுரைக்குக் கீழாக அன்னாரது இசை ஆற்றலையும், இசைப் பணியினையும் அறிந்துகொள்ளும் வகையில் அவை கோவைப்படுத்தப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.
என் வாழ்நாளில் காரைநகர்
காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயத்துடன் சிறு வயது முதல் தொடர்பு உள்ள யான் இன்று வரை காரைநகர் மக்களுடனும் தாபனங்களுடனும் ஒன்றித்து வாழும் நிலையுள்ளதையிட்டு பெருமிதமடைகின்றேன். பல வருடங்கள் கற்பித்த காரைநகர் இந்துக் கல்லூரி நூற்று இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதையிட்டும் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். காரைநகர் பற்றிய எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த மலராசிரியர், அதிபர், பாடசாலைச் சமூகம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
ஈழத்திருநாட்டின் சிரம் எனத் திகழும் யாழ்.குடா நாட்டின் நெற்றியென விளங்குவது பொன்னாலை ஆகும். அந்நெற்றியில் திலகம் என ஒளிர்வது காரைநகர். ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் திண்ணபுரம் சிவன்கோயிலுக்கு எனது சிறிய தந்தையாருடன் பொன்னாலை மேற்கில் உள்ள பெரியவர் கோயிலிலிருந்து கடல் வழியாக நடந்து வந்து வழிபாடு செய்வதை நினைத்துப் பார்க்கின்றேன். எனது சிறு பராயம் முதல் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை தரிசிக்கும் பேறு பெற்றவனாவேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் பயின்று ‘சங்கீத பூசணம்’ பட்டம் பெற்று 1963ல் எனது சொந்த ஊருக்கு வந்த பின் ஈழத்துச் சிதம்பரம், காரைநகர் இந்துக் கல்லூரி, அறிஞர் பெருமக்கள் என தொடர்புகள் அதிகரித்தன. பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றேன்.
திரு.ஆ.தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராக அலங்கரித்துக்கொண்டிருந்த காலம் பொற்காலம் எனப் போற்றப்பட்டது. அவர் ஓர் இசைப் பிரியன். என் இசையிலும் நாட்டம் பெற்ற காரணத்தால் தம் கல்லூரியில் இசை ஆசிரியராக நியமித்தார். ஆறு ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றினேன். இசையில் நாட்டம் கொண்ட அதிபருக்கும், மாணவச் செல்வங்களிற்கும் இசையமுதை வழங்கியது மட்டுமல்லாது கல்லூரிக் கட்டமைப்பு, நிர்வாகத் திறன் ஆகியவற்றை அவரிடமிருந்து உய்த்துணர்ந்து கொண்டேன். இவ்வறிவு யாழ். மாவட்டத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக 1977ல் சேவையாற்றும்போது பெரிதும் உதவியது.
இக்கல்லூரியில் இசையாசிரியராக இருந்தவேளையில் யாழ்ற்ரன் கல்லூரியிலும் பகுதிநேர ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இதனால் காரைநகரின் இரு கண்களாக விளங்கும் இரு கல்லூரிகளிலும் சேவையாற்றும் பாக்கியம் கிடைத்தது. யாழ்ற்ரன் கல்லூரியில் மாணவர்கள் நடித்த ‘தேவவிரதன்’ என்னும் நாடகம் இசையமைத்து மேடையேற்றப்பட்டது நினைவுக்கு வருகிறது.
இரு கல்லூரி மாணவர்களிற்கும் வாய்ப்பாட்டு, பாடசாலைக் கீதங்கள், பண்ணோடு திருமுறைகள் பாடுதல், மேடையேற்றுதல், யாழ் மாவட்டப் போட்டிகளிலும் ஏனைய போட்டிகளிலும் பங்குகொள்ளச் செய்தல், பரிசுகள் தட்டிக்கொண்டு வருதல் ஆகிய நிகழ்வுகள் மனம் நிறைந்த நினைவுகளாகும்.
காரைநகர் வாழ். பேரறிஞர்கள், கலைஞர்கள், மக்கள் ஆகியோரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்றுக்கொண்டேன். பல இசை நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தேன். மிருதங்க வித்துவான் அமரர் இராமலிங்கம் வைத்திலிங்கம் அவர்களுடன் சேர்ந்து பல அனுபவங்களைப் பெற்றேன். இவர் மிருதங்கக் கலையைப் பயின்று ஈழத்துச் சிதம்பரத்தில் அரங்கேற்றிய வேளையில் எனது இசை நிகழ்வு பிரதான அங்கமாக விளங்கியது. இவரின் தயாரிப்பில் உருவான ‘மணியோசை’ நாடகம் அன்று மிகப் பிரபல்யமாக விளங்கியது. ஈழத்துச் சிதம்பர திருப்பணியை நோக்கமாகக் கொண்டு இந்நாடகத்தை உருவாக்கினார்கள். இதில் பிரதான பாத்திரமேற்று திரு.வைத்திலிங்கம் அவர்கள் நடித்துள்ளார். இந்நாடகம் யாழ்ற்ரன் கல்லூரி திறந்த வெளி அரங்கிலும, கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நாடகத்திற்கும் சிறியேனின் ஒத்துழைப்பு பலவகைகளில் உதவ ஊக்கிவித்தவர் அமரர் வைத்திலிங்கம் ஆவார். இந்நாடகம் என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு ஆகும். கிராம அலுவலராகக் கடமை புரிந்த திரு.சண்முகசுந்தரம் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் வாரிவளவுப் பிள்ளையார் கோயிலில் நடைபெற்றபோது இசை நிகழ்ச்சி வழங்கியமையும் சிறப்பான சம்பவமாகும்.
மேலும் இசையாசிரியர் சங்க ஆசிரியர்களின் உதவியோடு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா மண்டபத்தில் சற்குரு தியாகராசா சுவாமிகளின் உற்சவ நிகழ்வு சிறியேன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
1974-04-01 காரைநகர் கல்லூரிகளை விட்டுப் பிரிந்து பலாலி விசேட ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட இசையாசிரியராக விளங்கினேன். 1977-05-01முதல் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் கல்வியதிகாரியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகக் கடமையாற்றி 1999ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். இக்காலத்தில் காரைநகர் கல்லூரிகளிற்கு இசையாசிரியர் பற்றாக் குறையை நீக்கிவைக்க இப்பாடசாலைகளிற்கு அடிக்கடி வருகை தந்து இசைக்கல்வி வளர ஊக்குவித்த என்னால் இயன்ற பணியைச் செய்துள்ளேன்.
ஓய்வு பெற்ற பின்னரும் தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனது சேவையைப் பெற ஆர்வம் கொண்டது. அப்போது அதிபராக இருந்த பண்டிதர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும், முன்னாள் அதிபர் திரு.ஆ.தியாகராசா அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் கிழமையில் ஓரிரு நாட்கள் வித்தியாலயம் சென்று கல்லூரிக் கீதம் சீரியமுறையில் இசைக்கவும், சிவபுராணம், ஏனைய திருமுறைகள் பண்ணோடு ஓதவும் பயிற்றுவித்த அந்நாளையும் நினைவுகூருகின்றேன்.
ஈழத்துச் சிதம்பர மார்கழி திருவாதிரை நாளில் மணிவாசக சபையின் ஆதரவுடன் திருவாசக இன்னிசை நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், மணிவாசக சபை நடாத்தும் பண்ணிசைப் போட்டிகள், பஜனைப் போட்டிகள், வில்லுப்பாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு ஆலோசகராகவும், நடுவராகவும் பணியாற்றி வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். காரைநகர் கோவளம் ஞானியார் கோயிலில் மாதப்பிறப்புத்தோறும் திருவாசகம் முற்று ஓதல் வைபவத்தில் இன்னும் கலந்து திருவாசகம் ஓதிவருவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். எனது ஆசிரியராக விளங்கிய எம்.ஏ.கந்தையா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பக்தர்கேணி வன்மீக விநாயகர் ஆலய மணவாளக்கோல விழாவில் ஊஞ்சல் பாட்டுப் பாடி வருகின்றேன். வாரிவளவுப் பிள்ளையார் கோயிலில் நடைபெறும் திருமுறை விழாவில் ஏனைய ஓதுவார்களுடன் சேர்ந்து வீதிவலமாக பண்ணிசை பாடுவதற்கு விநாயகப் பெருமானின் திருவருள் பெற்றவனாவேன்.
ஜனாதிபதியின் ‘கலாபூசணம்’ என்னும் பட்டம், யாழ் மாவட்ட ஆளுனர் விருது, இந்து கலாசார அமைச்சு விருது ஆகிய விருதுகளை விட காரைநகர் மக்கள் எமக்குத் தரும் நல் வாழ்த்தையும், கௌரவத்தையும் பெரிதும் மதிக்கின்றேன். இலண்டனில் வசிக்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த பரமசாமி சோமசுநந்தரம் அவர்கள் எம்மை ;லண்டன் மாநகருக்கு அழைத்து தன் மகளின் வாய்ப்பாட்டு, வயலின் ஆகிய இரு நிகழ்வுகளிற்கு பிரதம விருந்தினராக்கிப் பெருமைப்படுத்தினார்கள். இது என் வாழ்நாளில் பசுமையான நிகழ்வுகளாகும். இலண்டனில் வாழும் காரைநகர் மக்கள் என்மீது பேரன்பு காட்டி கௌரவித்தார்கள். இது என் வாழ்நாளில் சுவையான நிகழ்வுகளாகும்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் 28 வருடகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்ற திரு.ஆ.தியாகராசா அவர்களிற்கு பிரமாண்டமான அளவில் பிரியாவிடை நடைபெற்றது. இவ்விழாவிற்கு அவரது சேவையைப் பாராட்டி பாடலாக்கி இசையமைத்த மாணவர்களிற்கு வழிகாட்டிப் பாடிய பாடல் இன்றும் என் நாவில் இசைத்துக்கொண்டிருக்கின்றது. இப்பாடல் வருமாறு:
பல்லவி
வாழ்க நீ பல்லாண்டே தியாகராஜா வள்ளலே
கல்வியை அள்ளி எமக்குத் தந்தாய்
அனுபல்லவி
ஆழ் கடல்போல் அறிவும் அரிய பல்கலை ஞானமும்
அமிழ்தான இசையறிவும் அமைந்த பெருந்தகை நீ
சரணம்
பல்வளமும் நிறைந்த பதி காரைநகர் புரிந்த
நல்த வத்தால் பிறந்து நாயகனாய் இந்துக்
கல்லூரியை வளர்த்துக் கலைச் சேவையால் உயர்ந்தாய்
பல்சேவையும் புரிந்துபாரினில் புகழ் ஓங்கி
வாழிய பல்லாண்டே.
காரைநகரில் இரு கல்லூரிகளிலும் இசையாசிரியராகவும், யாழ் மாவட்டத்தில் இசைப் பிரிவிற்கான கல்விப் பணிப்பாளராகவும் இருந்து சேவையாற்றிய காலம் முதல் இன்று வரை எனது அறிவு, ஆற்றல், அனுபங்களிற்கு எட்டியவரை இயன்றளவு காரை மாதாவிற்குத் தொண்டாற்றி வருகின்றேன் என்பதை பூரிப்புடன் கூறுவதுடன் என் அனுபவங்களை வெளிக்கொணர வாய்ப்பளித்த மலர்க் குழுவினருக்கும் அதிபருக்கும் கல்விச் சமூகத்திற்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து மகிழ்கின்றேன்.
நன்றி: சயம்பு மலர் – 2013
அமரர் ‘சங்கீதபூசணம்’ கணபதிப்பிள்ளை அவர்களின் இசைப் பயணத்தின் சுவட்டுப் பதிவுகள்.
பல்வகைத் திறமைகளையும் பல்மொழி பேசும் ஆற்றலையும் கொண்டு வரகவி எனப் பெயர்பெற்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பெரிய தந்தையாரான திரு.பே.க.கிருஸ்ணபிள்ளை அவர்களால் 1949-1955 காலப்பகுதியில பல இடங்களிலும்; மேடையெற்றப்பட்ட ‘கிருஸ்ணலீலா’ என்ற நாடகத்தில் பாலகிருஸ்ணனாக-கம்சனாக தமது 10வது வயதிலேயே நடித்தன் மூலம் கணபதிப்பிள்ளை அவர்களின் கலை வாழ்வு தொடங்கப்பெறுகிறது.
பொன்னாலைக் கிராமத்தின் இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த கணபதிப்பிள்ளை அவர்களிடத்தில் 10வது வயதிலேயே கலை ஞானம் மலரத் தொடங்கியது ஒன்றும் வியப்பில்லை.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் 1951-1958 காலப்பகுதியில் கல்வி பயின்று வந்த காலத்தில் ‘பக்தநந்தனார் கண்ணப்பர்’ நாடகத்தில் நாகன் பாத்திரத்தில் நடித்து பாராட்டினைப் பெற்றார்.
இசையார்வம் மிக்க கணபதிப்பிள்ளை அவர்கள் தமது ஆரம்ப இசைக் கல்வியை மூளாய் வலங்கைமான் ஆறுமுகம், இணுவில் S.V.மாசிலாமணி வட்டுக்கோட்டை இரத்தினசிங்கம், வடலியடைப்பு சிங்காரவேலு ஆகியோரிடத்தில் கற்றார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இசையாசிரியர்களான ‘சங்கீதபூசணம்’ வேலாயுதபிள்ளை(மீசாலை), ‘சங்கீதபூசணம்’ செ.இரத்தினசபாபதி(கொக்குவில்) ஆகியோரும் இவரு க்கு சிறந்த இசைப் பயிற்சியை வழங்கியிருந்தனர்.
வட இலங்கை சங்கீத சபையால் நடாத்தப்பட்ட இசைப் போட்டியில் மூன்றாம் தரத்தில் முதற் பிரிவல் சித்தியடைந்து சிறு வயதிலேயே தமது இசையாற்றலை வெளிப்படுத்தினார்.
இசைக் கல்வியின் நாட்டம், நல்ல குரல் வளம், பரம்பரை இசை ஞானம் ஆகியனவற்றை கண்டுணர்ந்த இவரது இசையாசிரியர்கள் தமிழகம் சென்று மேலதிக இசைப் பயற்சியைப் பெற்றுக்கொள்ள ஊக்குவித்தனர்.
1959-1963 காலப்பகுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “சங்கீதபூசணம்” பட்டப்படிப்பினை நிறைவுசெய்து முதற்பிரிவில் சித்தியும் தங்கப்பதக்கமும் பெற்றார். துணைப் பாடமாக வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் முறைப்படி பயின்றார்.
1963ல் இலங்கை திரும்பிய இவர் தமது குலதெய்வமான பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலின் சிறப்பு அரங்கில் யூன் 1963ல் தமது இசை அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார்.
கலைஞானம் மிக்க இவரது அரங்காற்றுகையினாலும் கம்பீரம் மிக்க சிறந்த குரல் வளத்தினாலும் நாட்டின் பல பாகங்களிலும் இவரது இசைக் கச்சேரிகள் நடந்தேறின. கலை விழாக்கள், இசை விழாக்கள் என அனைத்திலும் இவரது நிகழ்ச்சியே சிறப்புக் கச்சேரியாக அமைந்தது. இக்காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் என்ற பெயரைப் பெற்று ரசிகர்களின் பெருவரவேற்பினைப் பெற்று புகழ்க்கொடி நாட்டியிருந்தார்.
நடன அரங்கேற்றங்கள், மிருதங்க அரங்கேற்றங்கள் என்பவற்றிற்கு பிரதான பாடகராக இவரையே அழைத்து மகிழ்ந்தனர். இலங்கைக்கு வெளியே கோலலம்பூர், சிங்கப்பூர், இலண்டன் ஆகிய நாடுகளிலும் இவரது இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சுமார் 40 ஆண்டுகளாக வாய்ப்பாட்டிசையில் விசேடதரக் கலைஞராகவும் திருமுறைப் பண்ணிசையில் ‘A’ பிரிவுக் கலைஞராகவும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
1966ல் அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயத்தில் இசையாசிரியராக அரச நியமனத்தைப் பெற்ற இவர் தொடர்ந்து காரைநகர் இந்துக் கல்லூரி(1968), யாழ்ற்ரன் கல்லூரி, குருநாகல் இந்து மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இசையாசிரியராகப் பணியாற்றினார்.
இவரது ஆழ்ந்த இசைப் புலமையை அடையாளம் கண்டுகொண்ட இலங்கை கல்விப் பகுதியினர் 1977ல் இலங்கைக்கான சங்கீத வித்தியாதரிசியாகவும் பின்னர் யாழ்ப்பாண பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பதவியுயர்வினை வழங்கி பெருமைப்படுத்தினர்.
வட இலங்கை சங்கீத சபை நிர்வாக சபையின் உப தலைவராக 40 ஆண்டுகள், சபையினர் நடாத்தும் பரீட்சைகளில் பிரதம பரீட்சகர், ‘கலாவித்தகர்’, இசைத்துறைப் பட்டத்திற்கான பிரதம பரீட்சகர், தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையிலான பாடத்திட்டத்தின் மீளாய்வுக் குழுவின் பிரதம உறுப்பினர், யாழ.பல்கலைக்கழக நுண்கலைத்துறை இசைத்துறை மாணவர்களிற்கான உள்வாரி, வெளிவாரி செயன்முறைப் பரீட்சகர், வலி-மேற்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் உப-தலைவர் என பல பதவிகளை வகித்து அளப்பரிய இசைப் பணியாற்றியுள்ளார்.
இவரிடத்தில் இசைப் பயிற்சியைப் பெற்றுக்கொண்ட பலரும் முன்னணி இசைக் கலைஞர்களாகவும், இசை ஆசிரியர்களாகவும், இசை விரிவுரையாளர்களாகவும் இருந்து இவருக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
நன்றி: ‘சங்கீதபூசணம்’ கணபதிப்பிள்ளை அவர்களின் பவள விழா மலர்.
அனுப்பி உதவியவர்: ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம்.
No Responses to “‘என் வாழ் நாளில் காரைநகர்” “சங்கீதபூசணம்” சுப்பையா கணபதிப்பிள்ளை அவர்களின் அனுபவப் பதிவு”