ந.செல்லையா என்பவர் கல்லூரியில் பெரியார் சயம்பு பணியாற்றிய காலகட்டத்தில் 1927ஆம் ஆண்டு முதல் கல்வி கற்றவர். தமது பாடசாலைக் காலத்து நினைவுகளையும், அனுபவங்களையும் பதிவுசெய்து ‘அந்தநாள் ஞாபகம்’ என்கின்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 2015ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற சயம்பு மலரில் பிரசுரமாகியிருந்தது. கல்லூரி சார்ந்த பல முக்கியமான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய அவரது கட்டுரையின் சிறப்புக் கருதி அதனை இவ்விணையத்தளம் மறுபிரசுரம் செய்கின்றது.
அந்த நாள் ஞாபகம் – ந.செல்லையா, பழைய மாணவன், காரை.இந்துக் கல்லூரி
அந்த நாள் ஞாபகம் வந்ததே,
நண்பனே! நண்பனே!
இப்படி ஒரு திரைப்படப் பாட்டு. அதிபர் தந்த தலைப்பும் அதுவே. நன்று! நன்று!
இலங்கையின் சிகரம் யாழ் குடாநாடு. அதற்கு அணி செய்பவை ஏழு தீவுகள். அவற்றில் நகரானது காரைநகரின் பெருமை. தில்லையில் ஆடும் எல்லையில்லாத் திருக்கூத்தன் திருநடனம் புரியும் தலம் ஈழத்துச் சிதம்பரம்.
பொன்னாலைப் பாலம் இணைக்க காரைதீவு காரைநகர் என்ற தனித்துவச் சிறப்புப் பெற்றது.
பேராசிரியர் சயம்பு காரைநகரில் கால் பதித்த நாட்களில் காரைநகரில் மேற்கு றோட்டில் ஒரு ஆங்கில அமெரிக்க மிசன் சிறிய பாடசாலையும்(சாமியார் பள்ளிக்கூடம்) புதுறோட்டில் அப்புத்துரைச் சட்டம்பியாரின் தமிழ்ப் பாடசாலையும்தான் இருந்தவை. ஆங்கிலக் கல்வி கற்றவர்களிற்கே அரசாங்க உத்தியோகம் என்ற அன்றைய தேவையை நன்கு உணர்ந்தார் சயம்புப் பெரியார். சுபயோக சுபவேளையில் சைவ ஆங்கில பாடசாலைக்கு அத்திவாரம் இட்டார்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் ஆங்கில வித்தியாசாலை( Hindu English School ) சயம்பு சட்டம்பியார் தலைமையில் ஒளிபரப்ப ஆரம்பித்தது.
அதன் இரு திரிகளாக சமயவழிபாடும் “To Thine Own Self be True” என்ற கொள்கைத் திறன்( ‘நீ உனக்கு உண்மையாய் இரு’.) அதுதான் மனச்சாட்சி. மனச்சாட்சிப்படி நடப்பவன் பிழை விடமாட்டான், குற்றம்புரிய மாட்டான், அயலவனுக்கு துரோகம் செய்யமாட்டான்.
என் ஐந்து வயதில் 1927ம் ஆண்டு வித்தியாரம்பம் ஆங்கிலப் பாடசாலையில். ஆச்சரியப்படாதீர்கள், எனக்கும் பேராசிரியர் சயம்பு அவர்களின் பேரன் இராசதுரைக்கும் விஜயதசமியில் இந்து இங்கிலீசு ஸ்கூலில் வித்தியாரம்பம்.
ஏன்? தமிழ் மூன்றாம் வகுப்பு சித்தியடைந்த பிள்ளைகளைத்தான் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கமுடியும். ஆகவே தமிழ் சைவப் பாடசாலைகள் இல்லாததை உணர்ந்த பெரியார் எங்கள் ஆங்கிலப் பாடசாலைக்கு மாணவர்களிற்கு ஒரு சைவத் தமிழ் தேர்ச்சிப்பாடசாலை(Feeding School) ஆரம்பிக்க திட்டமிட்டார்.
தமிழப் பாடசாலையில் கீற்றுக் கொட்டிலில் அம்பலச் சட்டம்பியார் தலைமையில் ஆரம்பமானது. இடாப்பில் நாங்கள் இருவரும் முதலிடம் பிடித்தோம். இரு வருடங்களில் நான் வகுப்பேற்றப்பட்டு மீண்டும் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்தேன். நாங்கள் ஆரம்பித்த தமிழ் ஆங்கிலப் பாடசாலைதான் பின் இலகடிக்கு மாற்றப்பட்டு நல்லதம்பி மாஸ்டர் தலைமையில் சிறப்புப்பெற்றது. இன்று இலகடி அ.த.க.பாடசாலை.
பேராசிரியர் சயம்புச் சட்டம்பியாரிடம் மூன்றாம் வகுப்பு( 3rd Standard) படித்து சிங்கப்பூர் போய் மாஸ்டர்களாகவும், புகையிரதநிலைய அதிபர்களாகவும் வேலை பார்த்து ஓய்வூதியத்துடன் திரும்பி வந்து சயம்பு வீதியில் கல் வீடு கட்டி வாழ்ந்தார்கள். இதிலும் பார்க்கப் பெருமை ஓர் ஆசிரியருக்கு வேண்டுமா!
ஆன்மீகம் வளர்த்த பெரியார் எங்கள் தலைமை ஆசிரியர். மேல் வகுப்பு மாணவர்கள் வெள்ளிக்கிழமையில் அவர் தலைமையில் நடக்கும் அதிகாலைப் பஜனையில் பங்குபற்றாது வகுப்புக்குள் நுழையமுடியாது. அவ்வளவு கண்டிப்பு.
பேராசிரியர் ஓய்வு பெற்றதும் பெரிய பிரியாவிடை, நன்றி நவிலல் உபசாரம் நடைபெற்றது. வித்தியாசாலை முன்றலில் பெரிய மேடை அமைத்து சீன் கட்டி சமுத்திரக்கரை தாளங்காய், பச்சை, சிவப்பு தாளம்பூ எல்லாம் கொண்டு வந்து சிகரம் கட்டி மேடையை அலங்கரித்து விழா பிரமாதம். பொன்னாடை போர்த்து, மாலை அணிவித்து மகிழ்ந்தார்கள் சிலர். பலர் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். – இருந்து ஓய்வு பெற்றவர்கள் நன்றிஉரை கூறி சேவை நலம் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
பேராசிரியர் பாராட்டிலும் நன்றிப் பிரவாகத்திலும் மகிழ்ந்து நெகிழ்ந்தாலும் அவர் மனதில் ஒரு பெரிய கேள்விக்குறி மலைபோல் நின்றது.
மாணவச் செல்வங்களைப் பிரிவது, தன் ஸ்தாபக பாடசாலையை தன்னிடம் படித்த மாணவ மணிகளை தகுந்த கையில் ஒப்படைக்கவேண்டும். அது தன் தலையாய கடமை – பாடசாலையின் வரும் கால வளர்ச்சி.
பேராசிரியர் சயம்பு சட்டம்பியாரின் வலையில் சிக்கியவர் இராசரத்தினம் ஐயா. பாடசாலை Hindu Board இடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் போட்ட விளம்பரம் கண்டு வந்து தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் சீதாராம ஐயர் B.A. Hons.
ஆஜானு பாகுவான தோற்றம். ஆறு அடி உயரம். பஞ்சகச்சம் கட்டி குளோஸ் கோற் போட்டு வெள்ளைத் தலைப்பாவுடன் கம்பீரத் தோற்றம் எங்கள் Head Master. சென்னையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக (A.S.P.) இருந்து குதிரை ஏற்றம்-போர்ப் பயிற்சி பெற்றவர். சகலாகலா வல்லவர்.
அவர் தலைமையில் -1930-எங்கள் பாடசாலை பல்கலைக்கழகம்.
உதவி ஆசிரியர்கள்:
1.பொன்னம்பல மாஸ்டர்(சைவம்)
(கணிதம், விஞ்ஞானம்)
2.ஆர.கந்தையா மாஸ்டர் (வேதரடைப்பு)
(ஆங்கிலம், தமிழ்)
3.எஸ்.கந்தையா மாஸ்டர்.
(கணிதம், தமிழ்.)
4.கே.செல்லையா மாஸ்டர் (சைவம்)
(மிருதங்கம், சங்கீதம், சமயம்)
5.கே.கணபதிப்பிள்ளை மாஸ்டர்
(ஆங்கிலம், தமிழ், Sports)
6.வி.சுப்பிரமணியம் மாஸ்டர்
மாணவர் தோழர், சமூக சேவையாளர், இலக்கியப் பிரியர், மடிப்பு கலையாத உத்தரியம்- புல்கை சேட்.
Activities of our School-பாடசாலை செயற்பாடுகள்.
ஆங்கிலக் கல்வி English Medium-சமயம், தமிழ் பாடங்கள் தமிழில்.
வருடத்தில் நாலு (Term) தவணைகள். தவணைக்கு 40.00ரூபா (School Fees) கட்டணம். தினசரி Assembly-மாணவர் ஒன்றுகூடல், பாடசாலை ஆரம்பத்தில்-பிரார்த்தனை-அறிவுரை
நிர்வாகம்
தலைமை ஆசிரியர்- பொலிசில் இருந்தவர்-இராணுவக்கட்டுப்பாடு. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கக்கூடாது. தலைமை ஆசிரியர் கண்களால் அடிப்பார்.
Silence Bell, Period பாடமாற்றம் 40 நிமிடம். அதை அறிவிக்க ஒரு பெரிய Bell மணி. அமைதி பேண அபாய மணி-முதல் மணி அடித்தால் எழுந்து நிற்கவேண்டும். மறு மணி அடித்தால் சீற்றில் இருக்க வேண்டும்.
ஆடிப்பாடி விளையாடி நாடகமாடி படிப்பு. மாணவர் தலைவன் Monitor. பாடசாலை தவணைச் சோதனையில் முதல் இடம் பெற்ற மாணவனுக்கு உரிய பதவி- உதவி ஆசிரியர் அந்தஸ்து.
வாசிகசாலை
Daily News, வீரகேசரி, ஆனந்த விகடன், கலைமகள் தபாலில் வரும். மாணவர் வாசிப்புப் பயிற்சிக்கு ஊக்குவிப்பு. மேல் வகுப்பு மாணவர்களிற்கு கட்டாய பாடம். நேர சூசிகையில் பாடநேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். Reading Makes a Man Perfect. J.S.C.தவணைச் சோதனையில் Dictation அன்று தபாலில் வரும் Daily News இல்.
மாணவர் சுற்றுலா
இன்று ஊர்காவற்றுறை கடல் கோட்டையை எத்தனை மாணவர்கள் பார்த்திருப்பீர்கள். வருடம் தவறாமல் ஊர்காவற்றுறை அலுவலகத்தில் அனுமதி பெற்று வழிகாட்டி Guide உடன் சென்று பார்த்து அந்த நாளை கோட்டையில் மகிழ்ச்சியாகக் களிப்போம்.
நாடகம்
ஆங்கிலப் பாடசாலையானாலும் வருடம் ஒரு சமய நாடகம் மேடை ஏற்றுவோம். முற்றத்தில் மேடை அமைத்து, சீன் கட்டி மாணிக்கவாசகர், மார்க்கண்டேயர் இப்படி மாணவர்கள் நடிப்பார்கள்.
‘துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா’.
இது தமிழப் பாட்டி கேட்ட வரம்.
இயல், இசை, நாடகம் இவையே முத்தமிழ். நாடகக் கலை பாடமாகப் போதிக்கப்படுவதில்லை. ஆதலால் நாடகங்கள் அருகிவிட்டன. எழுதப் படிக்கத் தெரியாத நாட்களில் மக்களிற்கு சமய அறிவு, புராணக் கதைகள் தந்தவை நாடகங்களே. கோயில் திருவிழாக்களின்போது நாடகங்கள் அடியார்களைப் பெரிதும் கவர்ந்தன. என் பாடசாலை நாட்களில் பொன்னாலை கிருஸ்ணன் கோயில் நாடகங்கள் பிரபலம். பொன்னாலை பபூன் கிருஸ்ணர் நாடகங்கள் மூலம் முத்தமிழும் வளர்த்தார்கள். மேடையில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பாட்டுக்கள் இயற்றிப் பாடுவார்கள். அன்று முத்தமிழ் வளர்ந்தது. இன்று T.V.தொலைக்காட்சி மாணவர்களைக் கெடுக்கிறது.
குரு பூசை
சமயகுரவர் நால்வர் குருபூசையும் ஒழுங்காகக் கொண்டாடுவோம். அந்த நான்கு நாட்களும் எங்களுக்கு விடுதலை மாதிரி-இடாப்பு கூப்பிட்டு வரவு பதியப்படும். ஆனால் வகுப்புப் பாடங்கள் நடைபெறாது.
மாணவர் கோயிலுக்குப் போவதுபோல் குளித்து தோய்ந்து உலர்ந்த வஸத்திரம் தரித்து பாடசாலைக்கு வரவேணும். சமயகுரவர் படத்திற்கு மாலை அணிவித்து நிறையப் பூக்களால் அர்ச்சித்து பூசை செய்து அவர் பாடிய பதிகங்கள் பாடி மகிழ்வோம்.
மதியம் எல்லோருக்கும் அன்னதானம். பிள்ளைகள் வரிசையாக பந்தியில் அமருவர். வாழையிலையின் அடி, உண்பார் வலப்புறத்திட்டு தண்ணீர் தெளித்து சுத்தம்பண்ணி கரியல், பொரியல், பச்சடி, கிச்சடி, கீரை, கூட்டுவெள்ளைக்கறி பரிமாறி அன்னம் பரிமாறுவார்கள். அன்னம் பரவப்பட்டதும் பருப்பும், நெய்யும் பரிமாறுவார்கள். பரிமாறல் நடக்கும்போது மாணவர் வரிசையாகத் தேவாரம் பாடுவார்கள். அன்னம் பரிமாறி முடிந்ததும் பொறுப்பு ஆசிரியர் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பாடச் சொல்லுவார். அன்னதான தேவாரம் பாடிப் புராணமும் பாடி முடிந்தால்தான் எல்லோரும் ஏககாலத்தில் போசனம் செய்வர்.
‘வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை’
கோயிலில் நற்காரியம் தொடங்கும்போது தேங்காய் உடைக்கிறோம். ஏன்? எங்கள் உள்ளத்தையும் உடைத்துப் பார்த்தால் வெள்ளையாகவும், ஈரமாகவும், இனிப்பாகவும் இருத்தல் வேண்டும்.
வெள்ளை உள்ளம் வேண்டும்.
கருணை-இரக்க ஈரம் வேண்டும்
இனிய அன்பு-இன்சொல், மகிழ்ச்சி வேண்டும்
Laughter is the Best Tonic-Vitamin
சிரித்து வாழவேண்டும் தம்பி! சிரிக்க வாழ்ந்திடாதே..
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்லொழுக்கம், படிக்கும்போது பாடத்தில் கவனம், கீழ்ப்படிவு இவை எந்த மாணவனையும் உயர்த்தும்.
பாடசாலைக்கு வெளியில்:
செய்யும் தொழிலே தெய்வம்
திறமைதான் எங்கள் செல்வம்
மாணவர்கள் வருங்காலப் பெரியவர்கள்
அத்திவாரம் பலமாய்ப் போடவேண்டும். பாடசாலையில் பள்ளிப் பருவம் வாழ்க்கையின் பொன்னான காலம்
கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
அதிபர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள்,பழைய மாணவர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
நன்றி: சயம்பு – 2005
No Responses to “அந்த நாள் ஞாபகம். காரை.இந்துவின் பழைய மாணவன் ஒருவரின் கல்லூரிக்காலத்து நினைவுகளின் பதிவு.”