ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் வரலாற்றுத் தமிழ்ப் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டு இவ்விணையத்தளம் ஊடாக பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முழுமையான விளக்கத்துடன் கூடிய வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தது. வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட இருபது நாட்கள் என்ற குறுகிய காலத்துக்குள் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையையும் தாண்டி பழைய மாணவர்கள பலரும் முனவந்து வழங்கிய பேராதரவினால் 10,615.00 டொலர்களை சேகரிக்க முடிந்தமை குறித்து தமிழ் இருக்கை செயற்பாட்டுக் குழுவினர் தமது வியப்பையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர். சேகரிக்கப்பட்ட 10,615 டொலர்களும் சென்ற 30-01-2020 சனிக்கிழமை அன்று தமிழ் இருக்கைச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரும் தமிழுலகு அறிந்த சிறந்த எழுத்தாளருமாகிய திரு.அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்களிடம் பழைய மாணவர் சங்க செயலாளரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழெனும் அமுதினை பருகிட நிலைகொண்ட காரை.இந்து அன்னை ஊட்டி வளர்த்த தமிழுணர்வோடும், காரை.இந்து அன்னை மீதான விசுவாச உணர்வோடும், பழைய மாணவர் சங்கத்தின் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையோடும் நன்கொடைகளை வாரி வழங்கி மகத்தான வரலாற்றுப் பணிக்கு உதவிய அன்பான தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தலைசாய்த்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் இவர்களது பங்களிப்புக் குறித்து காரை.இந்து அன்னையும் அன்னையின் புதல்வர்களும் மிகுந்த பெருமிதம் அடைவதாக பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ் வாழவேண்டும், அதன் பெருமையை உலகறியவேண்டும், தமிழர் தம் அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும், எமது எதிர்காலச் சந்ததி தமிழைக் கற்கவும் போற்றிப் பாதுகாக்கவும் வாய்ப்பளிக்கவேண்டும் என்கின்ற நன்கொடையாளர்கள் அனைவரதும் உன்னதமான உணர்வினைப் பாராட்டி மகிழ்வதாகவும் பழைய மாணவர் சங்க நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
ரொறன்ரோ பல்கலைக்கழகம், கனேடிய தமிழ்க் காங்கிரசு, தமிழ் இருக்கைச் செயற்பாட்டுக் குழு ஆகியன இணைந்து இணையவழி மூலம் நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் சென்ற 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தது. இக்கொண்டாட்டத்தின் நிறைவில் எமது சங்கம் 10,615.00 டொலர்களை உதவியமை குறித்து அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. இக்கொண்டாட்டத்தின் காணொளியை கீழே பார்வையிடலாம்:
No Responses to “ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு உதவ பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்த நிதி சேகரிப்புத் திட்டத்திற்கு கிடைத்த பேராதரவினால் 10,615.00 டொலர்கள் கையளிக்கப்பட்டுள்ளது.”