காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் அதிபரும், சிறந்த கல்வியாளரும், சமூக, சமயப் பணியாளரும் ஆகிய கே.கே.நடராஜா அவர்கள் அமரத்துவம் அடைந்த 31வது நாள் எதிர்வரும் சனிக்கிழமை நினைவுகூரப்படுவதை முன்னிட்டு அன்னாரது காத்திரமான கல்விப் பணிகள் குறித்த தனது விரிவான பார்வையினை ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், கல்வி, சமூகப் பணியாளருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் பின்னே உள்ள கட்டுரையின் ஊடாகப் பதிவிட்டுள்ளார்.
காத்திரமான கல்விப் பணியாற்றிய பெருந்தகை
கணபதிப்பிள்ளை கார்த்திகேசு நடராஜா
அமரர் திரு. K. K. நடராஜா – இலங்கை கல்வி நிர்வாக சேவை
திரு. திருமதி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் புதல்வர் திரு. K. K. நடராஜா தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று விஞ்ஞானமானி பாடநெறி கல்வியை லண்டன் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்து விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றார்.
கோவளம் வெளிச்ச வீட்டுக்கு அருகே ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த திரு. V.V. முருகேசு சுவாமிகளின் (பேப்பர் சுவாமிகள்) மாணவர்களில் ஒருவராவார். விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் ஆச்சிரமத்தில் கற்பிக்கப்பட்டது. திரு.K. K.நடராஜா கணித பாட வகுப்புக்களில் அதிகளவில் கலந்து கொள்ளாமலே பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற பொழுது சுவாமிகள் திரு. K.K. நடராஜாவை சாணக்கியன் என்று அழைத்தார். திரு.K.K. நடராஜா சுவாமிகளின் தீர்க்கதரிசனமான செய்திகளை நேரில் பார்த்தவர். சுவாமிகளிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் பின் நாளில் கல்வியில் புலமை மிக்கவர்களாகவும், உயர் பதவிகளையும் வகித்தனர்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணியை ஆரம்பித்து நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியரகக் கடமையாற்றினார். இயல்பாகவே கணித ஆற்றல் மிக்க திரு.K.K. நடராஜா திறன் மிகு கற்பித்தல் நுணுக்கங்களைக் கையாண்டு வெற்றி கரமாக கற்பித்தமையால் மாணவர் மனங்களில் இடம்பிடித்தார். திரு.K.K.நடராஜா காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபராக 1974 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நியமிக்கப்பட்டார். கல்லூரியின் பெயரை மாற்றுவதாலோ அன்றி கல்லூரியின் தரத்தை மாற்றுவதாலோ அன்றி உற்சாகம் மிக்க சேவையினால் (Enthusiastic) யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பாடசாலைகளின் கல்வித் தரத்திற்கு இணையாக பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்தி பாடசாலைக்கு அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தார். அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் உழைப்பு கற்பித்தல் பெறுபேறுகளை வலுவுள்ளதாக்கியது.
திரு. K.K. நடராஜா அதிபராகப் பதவியேற்று வருகை தந்த போது க. பொ. த. உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்கள் தாங்கள் வேறு பாடசாலையில் கற்க விரும்புவதாகவும் விடுகைப் பத்திரங்களைத் தந்துதவுமாறும் வேண்டி நின்றனர். மாணவர்களிடம் உங்கள் பாடங்களுக்கான ஆசிரியர்களை வரவழைப்பேன். தொடர்ந்து பாடசாலையில் கற்குமாறு அறிவுரை வழங்கினார். இம்மாணவர்களுக்கான வகுப்புக்களை காலை 6.00 மணிக்கு தானே ஆரம்பித்து நடாத்தினார். அன்றைய காலகட்டத்தில் வழங்கப்பட்ட விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் பொருத்தமான ஆசிரியர்களை கல்லூரிக்கு நியமிக்க ஆவன செய்தார். யாழ்.நகரில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்பித்த பிரபல்யமான ஆசிரியர்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரியில் நியமனம் பெற ஆவன செய்தார். பாடசாலையில் இருந்து விலகிச் செல்ல விரும்பிய மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுச் சென்றனர்.
வலிகாமம், ஊர்காவற்றுறை போன்ற இடங்களில் இருந்து க. பொ. த உ. த. விஞ்ஞான பிரிவில் கல்வி கற்பதற்கு மாணவர்கள் வருகை தந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்றனர். நீண்ட காலமாக காரைநகர் இந்துக் கல்லூரியில் உயர்தர விஞ்ஞான பிரிவு இயங்கிய பொழுதும். திரு. K. K. நடராஜா அவர்களின் சேவைக் காலத்தில் இருந்து தான் விஞ்ஞான பிரிவில் இருந்து மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுச் சென்றனர் எனக் கருதலாம். மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு மாணவர்கள் தெரிவாகினர். விஞ்ஞான பீடத்திற்கு அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அனுமதி பெற்றுச் சென்றனர். பல்கலைக் கழக அனுமதியில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தி அமுல் படுத்திய அன்றைய கால கட்டத்தில் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றுச் சென்றமை மெச்சத் தக்கதாகும்.
க. பொ. த. உ. த. விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற மாணவர்களின் கல்வியைச் செழுமைப்படுத்தி வலுவூட்டுவதற்காக பாடசாலைக்கு அண்மிய சூழலில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான விஞ்ஞான கணித ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள ஆவன செய்தார்.
திரு. K. K. நடராஜா வெற்றிகரமான அதிபராகப் பணியாற்றியமைக்கான பண்புகளைக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற தன் மகனை காரைநகர் இந்துக் கல்லூரியில் சேர்த்தார். அலுவலகத்தில் அமர்ந்திராது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கவனித்தார். ஆசிரியர்கள் ஓய்வு பெறுமிடத்து அந்த வகுப்புகளிற்கான பாடங்களைக் கற்பித்தார். க. பொ. த. சா. த. பரீட்சை அண்மிய காலப்பகுதியில் மாலை நேர மேலதிக வகுப்புக்களைப் பரீட்சையை இலக்காக வைத்துப் பாட ஆசிரியர்களால் நடாத்துவித்தார்.
க. பொ. த. சா. த. மாணவர்களை அவதானித்து க. பொ. த. உ. தரத்தில் கற்க வேண்டிய பாட நெறியைத் தெரிவு செய்து தன்னகத்தே வைத்திருப்பார். மாணவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் உளச்சார்பு என்பனவற்றை கருத்திற் கொண்டு மாணவர்கள் உயர்தரத்தில் தெரிவு செய்ய வேண்டிய பாடநெறிக்கான ஆலோசனையை வழங்குவார். மாணவர்களின் நடத்தை தொடர்பாக கண்டிப்புடன் செயற்பட்டார். பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் மாணவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து வந்தார் திரு. K. K. நடராஜா. மாணவர்கள் பண்புசார் கல்வியைப் பெற்று சமூகத்தின் நற்பிரஜைகளாக வாழ வேண்டும் எனும் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர்.
கல்லூரியின் நிருவாகக் கட்டிடம், மாதிரி விஞ்ஞான ஆய்வு கூடம்; என்பன கட்டப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவாகியது போக எஞ்சிய நிதி திறைசேரிக்குத் திரும்பிச் செல்லாது எஞ்சிய நிதியினை பெற்று குறுகிய காலத்திற்குள் நடராஜா மண்டபத்திற்கு மேற்குப் பக்கமாக அமைந்துள்ள வகுப்பறைத் தொகுதி, விளையாட்டு மைதான மதிற்சுவர் என்பன அமைக்கப்பட்டன. இப்பணிகளை உரிய காலத்தில் உரிய முறைப்படி நிறைவேற்றியமைக்காக 1 ABC பாடசாலைகளின் அதிபர்கள் கூட்டத்தில் யாழ். மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு. மகதந்திலாலா அவர்களால் திரு.K.K.. நடராஜா பாராட்டப்பட்டார்.
ஆசிரியர்களின் சிநேக பூர்வமான உறவினைக் கொண்டிருந்தார். ஆசிரியர் குழாம், கல்வித் திணைக்களம், சமூகம் திரு. K.K.. நடராஜாவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கின. பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. தியாகராஜாவின் சேவையை கல்லூரியின் வளர்ச்சிக்காக உச்ச அளவில் பெற்றுக் கொண்டார்.
ஈழதேச அரசியலாளர்களால், 3 வருடங்களும் 3 மாதங்களும் அதிபராகப் பெரும் பணியாற்றிய திரு. K.K. நடராஜா அனலை தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாற்றத்தினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அறிந்த பின் அனலை தீவிற்கான இடமாற்றத்தினை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு வேறுபடுத்தினர். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி அபிவிருத்திப் பணிகளில் பின்நாளில் அரசியலாளர்களும் அதிபரும் இணைந்து பயணித்தனர்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபராகவும், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அதிபராகவும், சுழிபுரம் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் 11 வருடங்களும் 4 மாதங்களும் திரு.K.K.நடராஜா கடமையாற்றினார். திரு.K.K. நடராஜாவை காரைநகர் இந்துக் கல்லூரியில் அவரது சேவைக்காலம் முழுவதும் இடையூறு விளைவிக்காமல் கடமையாற்ற அனுமதித்து இருப்பின் காரைநகர் இந்துக் கல்லூரியின் கல்வி வளர்ச்சி நகரப் பாடசாலைகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.
விசேட தரம் I (Special Post Grade – I) பதவி உயர்வு பெற்று இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலராக ஓய்வு பெற்றார்.
தனது குறுகிய பதவிக் காலத்தில் செயல் ஊக்கம் மிக்க சேவையினால் (Dynamic Service) கல்வி உலகில் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் வரிசையில் திரு. K. K. நடராஜா இடம்பெறுகின்றார்.
திரு. K. K. நடராஜா தனது உறவினரான ஸ்ரீமான் சுப்பிரமணியபிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலையின் வளர்ச்சியில் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கினார். 1970 களில் திரு. கு. இராசையாவுடன் இணைந்து அரசின் நிதி உதவியுடன் வகுப்பறைத் தொகுதி ஒன்றினை கட்டுவித்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் தரம் தொடர்பான தேவையை நிறைவு செய்ய ஆரம்பப் பாடசாலை ஒன்று தேவைப்பட்ட பொழுது சுப்பிரமணிய வித்தியாசாலையை காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாக மாற்ற ஆவன செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. தியாகராஜாவின் ஆலோசகர் குழாமில் இடம்பெற்றிருந்தார். சமூக நலன் பேணும் பல்வேறு அமைப்புக்களில் இணைந்து சமூகப்பணியாற்றினார்.
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான திருப்பணிச் சபை, மாணிக்கவாசகர் அன்னதான சபை, காரைநகர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஆகிய அமைப்புக்களின் தலைவராகவும், பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் திருப்பணிச் சபையிலும் அங்கம் வகித்தார்.
ஆசிரியராக, அதிபராக, சமூக சேவகனாக, சமயத் தொண்டனாக எல்லாப் பணிநிலைகளிலும் வெற்றிகரமாகப் பயணித்தவர் திரு. K. K. நடராஜா.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
கட்டுரை ஆசிரியர் திரு.எஸ.கே.சதாசிவம்
No Responses to “காத்திரமான கல்விப் பணியாற்றிய பெருந்தகை கணபதிப்பிள்ளை கார்த்திகேசு நடராஜா (K. K. நடராஜா) – எஸ்.கே.சதாசிவம்”