காரைநகர் இந்துக் கல்லூரியில் 2005ஆம் ஆண்டு வரைக்கும் உள்ள காலப்பகுதியில் 15ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியமணிகள் குறித்த விபரம் 2005இல் வெளிவந்திருந்த சயம்பு மலரில் பிரசுரிக்கப்பட்டு அவை முன்னதாக இவ்விணையத்தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்தது. 15ஆண்டுகள் என்கின்ற சேவைக்காலம் என்ற பிரிவுக்குள் உள்ளடங்காது அதற்குக் குறைவான சேவையினை வழங்கிய ஆசிரியர்கள் பலர் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியதைக் கருத்திற்கொண்டு தொடர்புமிக்க ஆசிரியமணிகள் என்ற பிரிவுக்குள் அவர்களை உள்ளடக்கி அவர்கள் குறித்த விபரம் சயம்பு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ் ஆசிரியமணிகளையும் கௌரவித்து நன்றிகூறுகின்ற வகையிலும் வாசகர்களின் பயன்கருதியும் அவர்கள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை மறுபிரசுரம் செய்வதில் இவ்விணையத்தளம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றது.
தொடர்பு மிக்க ஆசிரியமணிகள்
சங்கீதபூசணம் சு.கணபதிப்பிள்ளை SLEAS. (1967 -1974)
பொன்னாலையிலிருந்து வருகை தந்து சங்கீத பாடத்தை நயம்படப் போதித்த பேராசான். பண்ணிசை மற்றும் தேவாரப் போட்டிகளில் மாணவர் விருதுகள் பல பெறச் செய்தவர். வட இலங்கை சங்கீத சபையின் செயற்பாடுகளில் பெரும் பங்காற்றியவர். பதவி உயர்வு பெற்று சங்கீத பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தனது ஓய்வு காலத்திலும் பாடசாலைக்கு வருகை தந்து பண்ணிசை, பஜனை வகுப்புக்;களை மாணவர்களிற்கு நடாத்தி ஊக்குவித்து வந்தவர்.
திரு.பொன்.ஈசன் B.Sc. (1974 -1978)
கணித, விஞ்ஞான பட்டதாரியான இவர் க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் தூய கணிதம, பிரயோக கணிதம் ஆகிய பாடங்களை மாணவர் மனம் கவரக்கூடிய வகையில் போதித்தவர். அக்காலத்தில் யாழ்.மாவட்டத்தில் கணித பாடங்களிற்கு பிரபல்யம் பெற்ற ஆசிரியராக விளங்கியவர். இவரது காலத்தில் அயலூர்களைச் செர்ந்த மாணவர்களும் உயர்தர வகுப்பில் கற்று வந்தமையும் கல்லுஸரியில் இருந்து அதிக மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
திரு.N.அமிர்தலிங்கம் B.Sc. (1975 – 1984)
பௌதிக பாடத்தை சிறப்பாகக் கற்பித்தவர். பாடசாலை நிர்வாகத்துடன் கூடிய ஒத்தழைப்பினை வழங்கி விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் முன்னின்று உழைத்தவராவர். தற்போது கனடாவில் வசித்து வரும் இவர் பாடசாலைக்கு வருகை தந்து அதன் முன்னேற்றம் தேவைகள் குறித்து அக்கறையுடன் விசாரித்து அறிந்து சென்றார்.
வித்துவான் சைவமணி மு.சபாரத்தினம் (1976 – 1986)
பார்ப்போரைக் கவரும் நெடிதுயர்ந்த தோற்றம் நிறைந்த இவர் தமிழ், சமயம் ஆகிய பாடங்களை மாணவர் உளங்கவரக்கூடிய வகையில் போதித்தவர். கல்லூரியின் முக்கிய நிகழ்வுகள் சமய விழாக்களை முன்னின்று நடாத்தியவர். சிறந்த பேச்சாளரான இவர் கல்லூரியின் நிகழ்வுகளிலும் ஆலய நிகழ்வுகளிலும் பேச்சாளராக விளங்கியவர். பாரதி நூற்றாண்டு விழாவை ஒழுங்கமைத்து சிறப்போடு நடத்தியவர். கல்லூரியின் எல்லா விடயங்களிலும் முன்னின்று உழைத்தவர். இவர் இல்லாது விழா இல்லை என்ற அளவிற்கு முன்னின்று சேவை செய்தவர்.
திரு.S.K.சதாசிவம் Gen.Trained, SLPS I (1977 -1981)
கல்லூரியின் பழைய மாணவனும் உதை பந்தாட்ட வீரரும் சிறந்த பந்துக் காப்பாளருமான இவர் ஆசிரியராக சில ஆண்டுகள் பணிபுரிந்தாலும் விளையாட்டு மற்றும் நிகழ்வுகளில் முன்னின்று செயற்பட்டவர். இடமாற்றம் பெற்றுச் சென்ற இவர் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை அதிபராக இருந்தார். வலிகாம இடப்பெயர்வுடன் வவுனியா சென்று அங்கு உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி புவுணு நிறுவனத்தில் திட்டப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
திரு.A.விஜயரத்தினம் Special Trained English (1979 -1992)
விசேட ஆங்கிலப் பயிற்சி பெற்ற இவர் சாந்தமான குணமும் புன்முறுவல் பூத்த முகமும் கொண்டு மாணவரை அன்புடனும் கண்டிப்புடனும் நெறிப்படுத்தியவர். ஆங்கிலப் போட்டிகள் பேச்சுக்களில் மாணவரைத் தயார்படுத்தி வெற்றிபெறச் செய்தவர். இடப்பெயர்வுடன் கொழும்பு சென்று ஓய்வு பெற்றிருந்தார்.
திரு.N.செல்வரத்தினம் Special Trained Maths, SLPS I, (1982 -1992)
விசேட கணிதப் பயிற்சி பெற்ற இவர் கணித பாடத்தை மிகச் சிறப்புடன் கற்பித்தவர். சில வருடங்கள் பாடசாலையின் விளையாட்டுத் துறையை பொறுப்பேற்று நடத்தியவர். மாணவர் ஒழுக்கத்திற்கு பொறுப்பாகவிருந்து வழிநடத்தியவர். அதிபராக வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு பதவியுயர்வு பெற்றுச் சென்ற இவர் பின்னர் கிளிநொச்சியில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
திரு.V.முருகமூர்த்தி B.Sc.,Dip.in.Ed.,SLPS.II (1984 -1993)
விசேட கணிதப் பயிற்சி பெற்றவர். கணித பாடத்தை நுட்பமாக கற்பிக்கும் திறமை வாய்ந்தவர். பாடசாலையில் பரீட்சைப் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் கூடிய பங்களிப்புச் செய்தவர். பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளராக இருந்து நூற்றாண்டு விழாக் காலத்தில் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தவர். பதவியுயர்வு பெற்று யாழ்ற்ரன் கல்லூரியின் உப அதிபராகப் பணியாற்றிய இவர் தற்போது கொழும்பில் பணியாற்றி வருகின்றார்.
திரு.V.இந்திரன் Special Trained Maths. (1986 -1992)
கணித பாடத்தை நுட்பமாகப் போதிப்பதில் வல்லவரான இவர் அதிபர் மு.திருநீலகண்டசிவம் அவர்களுடன் ஒத்துழைத்து வலது கரமாகத் தொழிற்பட்டவர். பாடசாலையின் வெளித் தொடர்புகளை திறம்படக் கொண்டு நடாத்துவதில் ஆற்றல் மிக்கவராக இருந்தமையால் அதிபர்களிற்கு நிர்வாகரீதியில் உறுதுணையாகச் செயற்பட்டு வந்தார். அதிபராக பதவியுயர்வு பெற்றுச் சென்று வவுனியாவில் கடமையாற்றி வருகின்றார்.
No Responses to “காரை.இந்துவின் தொடர்புமிக்க ஆசிரியமணிகள்.”