காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தி அடைவதனை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியும், பூரிப்பும் மனநிறைவும் அடைகின்றேன்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையானது, கடந்த எட்டு வருடங்களாகக் காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியிலும், கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பாராட்டும்படியான சிறந்த, நிறைவான சேவைகளை ஆற்றி வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பளக் கொடுப்பனவுகள் , ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கல் , மலர் வெளியீடுகள் , சயம்பு சிலையினைப் புனரமைத்தல், பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழாவுடன் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கல், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாவனைக்கான சிற்றுண்டிச் சாலை நிறுவுதல், ஆசிரியர் தின விழாவிற்கான அனுசரணை, அலங்கார வளைவு அமைத்தல் போன்ற பலவிதமான கல்லூரியின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளுக்கு நிதி உதவிகளையும், அனுசரணைகளையும் வழங்கிச் சிறந்த செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கல்லூரியின் வெள்ளிவிழா அதிபர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா கனடாவில் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டதுடன், விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இது போன்ற பல சிறந்த, பயன்மிக்க செயற்பாடுகளை இச்சங்கம் செய்து வருவது பாராட்டத்தக்கது. போற்றுதற்குரியது. இத்தருணத்தில் நன்றியுணர்வுடன் நினைவுகூரப்பட வேண்டியது ஆகும்.
இச்சங்கத்தினை ஆரம்பிப்பதற்காக அரும்பாடுபட்டு உழைத்தவரும், ஆரம்ப காலத் தலைவருமான, இக் கல்லூரியின் முன்னாள் புகழ் பெற்ற கணித ஆசிரியரும், முன்னாள் உப-அதிபருமான அமரர்.சி.தம்பிராசா அவர்களை இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப் பட்டிருக்கின்றோம். இச்சபையினை உருவாக்குவதில் தமது முழுமையான பங்களிப்பை வழங்கிய இளைப்பாறிய அதிபர் பொன்.சிவானந்தராசா அவர்களையும், இளைப்பாறிய அதிபர் எஸ்.கே.சதாசிவம் அவர்களையும், இத்தருணத்தில் பாராட்டி வாழ்த்த வேண்டியது எமது கடமையாகும். கனடாவில் வாழ்ந்து வருகின்ற காரை இந்துவின் பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினை மிகவும் திறம்பட நடாத்தி வந்த முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள், தற்பொழுது சபையினைச் சிறப்பாக நடாத்தி வருகின்ற நிர்வாக சபை உறுப்பினர்கள், தலைவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர்களின் அயராத, கடின உழைப்பினால் இச்சங்கமானது சிறந்த வளர்ச்சி கண்டு தனது எட்டாவது அகவையினைப் பூர்த்தி செய்வதனையிட்டு காரைநகர் மக்களாகிய நாம் பேருவகையும், பெருமிதமும் அடைகின்றோம்.
இக்கல்லூரிக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெருமளவில் வழங்கி இச்சங்கமானது அரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கின்ற வேளையில், சென்ற ஆண்டு இப்பாடசாலையின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் பொருட்டு இருபது லட்சம் ரூபாவினை நிரந்தர வைப்பில் இட்டு வழங்கி உள்ளமையைக் காரைநகர் வாழ் மக்கள் சார்பாக நன்றி உணர்வுடன் பாராட்டி வாழ்த்துகின்றேன்.. பழைய மாணவர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடனும் குழந்தை மருத்துவநிபுணர் வி.விஐயரத்தினம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடனும் முப்பது இலட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு ‘மருத்துவக்கலாநிதி வி.விஐயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மகத்தான உதவியைப் புரிந்த மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களையும் இத்தருணத்தில் நன்றி உணர்வுடன் பாராட்டி வாழ்த்தி நிற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
வாழ்த்துச் செய்தி வழங்குவதற்கு எனக்கு இச் சந்தர்ப்பத்தினை வழங்கிய தற்போதைய நிர்வாக சபைக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் என் அகம் குளிர்ந்து வழங்கி அவர்களின் பணி, காரை இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மேன்மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல ஈழத்துச்சிதம்பர செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் திருவடிகளை வணங்கிப் பிராத்திக்கின்றேன்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 8வது ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கைஸ்ராலினா யோகரத்தினம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி”