காரைநகர் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி சிவந்தினி வாகீசன் 2020 ஜனவரியில் திரு.அ.ஜெகதீசன் அதிபராக நியமனம் பெற்றமையைத் தொடர்ந்து பிரதி அதிபராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவர் மருதனார்மடம் இராமநாதன்; கல்லூரியின் பிரதி அதிபராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
2012ஆம் ஆண்டு கல்லூரியின் உயிரியல் பாட ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கிய இவரது கற்பித்தல் திறமையினால் உயர்வகுப்பு மாணவர்கள் உயிரியல் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுவந்துள்ளனர். மூன்று ஆண்டுகள் வரை காரை.இந்துவின் பதில் அதிபராக பதவி வகித்து கல்லூரியை வளர்ச்சியை நோக்கி நகர்த்திச் சென்றதில் திருமதி சிவந்தினி வாகீசனின் அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய சேவை பாராட்டிப் போற்றுதற்குரியதாகும். இவரது பதவிக் காலத்தில் பாடவிதான, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வலயம், மாகாணம், தேசியம் ஆகிய மட்டங்களில் பல வரலாற்றுச் சாதனைகளைப் பதிவுசெய்து கல்லூரியின் புகழ் மேலோங்கப்பெற்றிருந்தது. சிவந்தினி வாகீசனின் அர்ப்பணிப்பும் நிர்வாகத் திறனும் மிக்க சேவையானது கல்லூரியை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு பெரும் பங்காற்றியுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையுடன் இவர் கொண்டிருந்த மிக நெருக்கமான தொடர்பும் சங்கத்தின் உதவிகள் சார்ந்து வழங்கி வந்த ஒத்துழைப்பும் எமக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்திருந்தமை குறித்து இத்தருணத்தில் அவரைப் பாராட்டி நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இவரது சிறந்த ஒத்துழைப்புடன் கல்லூரியின் முக்கியமான தேவைகளிற்கு நிரந்தரமாக உதவும் திட்டம் எமது சங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் நிறைவுசெய்யப்பட்டிருந்தமை சிறப்பாக குறிப்பிடக்கூடியதாகும்.
எமது கல்லூரியின் பழைய மாணவியான சிவந்தினி வாகீசன் கல்லூரியின் வளர்ச்சிக்கு வழங்கிய மகத்தான சேவையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி நன்றிகூறுவதுடன் அவரது சமூகத்திற்கான கல்விப் பணி தொடர வாழ்த்துவதில் பெருமையடைகிறது..
No Responses to “காரை.இந்துவின் முன்னாள் பதில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனின் மகத்தான சேவையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி நன்றி கூறுகிறது.”