வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் சென்ற ஆண்டு நடாத்தப்பட்டிருந்த தனி இசைப் போட்டியில் மாகாண மட்டப் பிரிவு v இல் பங்கு பற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா 2வது இடத்தினைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
செல்வி அமிர்தா ஆனந்தராசா 2016ஆம் ஆண்டு நடாத்தப்பட்டிருந்த மாகாண மட்ட பண்ணிசைப்போட்டியில் 2வது இடத்தினையும், 2015ஆம் ஆண்டு ‘இலங்கை வாழ்வின் எழுச்சி’ திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்டிருந்த தனிப்பாடல் போட்டியில் 2வது இடத்தினையும் பெற்று சாதனை ஏற்படுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். செல்வி அமிர்தா கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன், செல்வி கலைவாணி ஆகியோரிடத்தில் இசைப் பயிற்சியை பெற்று வருகின்றார்.
வாத்திய இசைப் போட்டியில் – மிருதங்கம் பிரிவு iii இல் பங்கு பற்றிய இந்துவின் மாணவனும் செல்வி அமிர்தாவின் இளைய சகோதரனுமாகிய செல்வன் அரிகரன் ஆனந்தராசா 2வது இடத்தினைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். செல்வன் அரிகரன் கிழவன்காடு கலா மன்றத்தில் மிருதங்க இசையை பயின்று வருகின்றார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சாதனையாளர் தின நிகழ்வின் 2ஆம் நாள் அமர்வின்போது எமது கல்லூரியின் சாதனையாளர்களான செல்வி அமிர்தா, செல்வன் அரிகரன் ஆகியோர் விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
செல்வி அமிர்தாவும் இவரது சகோதரன் செல்வன் அரிகரனும் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் ஆசிரியரான (அமரர்) நாகலிங்க மாஸ்டரின் பூட்டப் பிள்ளைகளாகும்.
காரை.இந்துவுக்கு பெருமைசேர்த்த செல்வி அமிர்தா, செல்வன் அரிகரன் ஆகியோரையும் அவர்களைப் பயிற்றுவித்து ஊக்குவித்த இசை ஆசிரியைகளையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.
இரு சாதனை மாணவர்களுக்கும் விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
செல்வி அமிர்தா ஆனந்தராசா தன்னை ஊக்குவித்து வருகின்ற முன்னாள் பதில் அதிபரும் தற்போதய பிரதி அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசனுடன் இணைந்து எடுத்த புகைப்படம்.
சாதனையாளர் செல்வன் அரிகரன் ஆனந்தராசா
No Responses to “மாகாண மட்ட இசைப் போட்டிகளில் வெற்றிபெற்று காரை.இந்துவைப் பெருமைப்படுத்திய இரு சகோதர மாணவர்கள்.”