கல்வி,சமூகச் செயற்பாட்டாளரான திரு.எஸ்கே.சதாசிவம் அவர்கள் காரைநகர் பிரதேச கலாசாரப் பேரவையினால் பண்பாட்டு ஆய்வுத் துறைக்கான ‘கலைஞானச் சுடர்’ என்கின்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். காரைநகர் பிரதேசச் செயலகத்தினால், அண்மையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டிருந்த கலாசாரப் பெரு விழாவின் போது திரு.எஸ் கே சதாசிவம் அவர்களுக்கான இவ்விருது வழங்கப்பட்டிருந்தது. திரு.எஸ்கே.சதாசிவம் அவர்கள் காரைநகர் சார்ந்து வரலாறு, கல்வி, விளையாட்டு, பண்பாடு என்பன தொடர்பில் பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன் இவற்றின் ஊடாக காரைநகர் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வு நிலையினை ஏற்படுத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘சதாசிவம் மாஸ்டர்’ என காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஓய்வுநிலை ஆசிரியரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு. எஸ்.கே.சதாசிவம் அவர்கள் காரை. இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவர். கனடாவில் பழைய மாணவர் சங்கம் பல சவால்களையும் தடைகளையும் தாண்டி உருவாக்கம் பெற்றதில் திரு. சதாசிவம் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் என்பது மட்டுமல்லாது இச்சங்கம் குறிகிய காலத்தில் அடைந்த வியக்கத்தக்க வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமிட்டவராகவும் விளங்குபவர்.
திரு. சதாசிவம் அவர்கள் ‘கலைஞானச் சுடர்’ விருது பெற்றமை குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிக்க பெருமிதம் கொள்வதுடன் அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
கலாசாரப் பெருவிழாவில் விருது வழங்கப்பட்டபோது பதிவுசெய்யப்பட்ட சில நிகழ்வுகளை கீழே பார்வையிடலாம்:
No Responses to “‘கலைஞானச் சுடர்’ விருது பெற்ற எஸ்.கே.சதாசிவம் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”