கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.28.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திய கல்லூரி அதிபரும் சங்கத் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைவர் அறிக்கையினை வாசித்தளித்திருந்தார்.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
மிகவும் விபரமாக வெளியிடப்பட்ட அதிபர் அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டு கால கல்லூரியின் வரலாற்றுத் தடங்கள், கடந்த ஆண்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள். மாணவர் தேர்ச்சி மேம்பாட்டுச் செயற்றிட்டங்கள், பௌதீக வள அபிவிருத்திப் பணிகள், பாடசாலைப் பயணத்தில் எதிர்நோக்கும் சவால்கள், நிறைவேற்றப்பட வேண்டிய பௌதீகவள அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள், மாணவர் தேர்ச்சி விருத்திச் செயற்றிட்ட முன்மொழிவுகள், என்பனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
பிரத்தியேகமாக கல்லூரியின் தேவைகளை அறிந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை, பழையமாணவர் சங்க கொழும்புக் கிளை, காரை அபிவிருத்தி சபை, லண்டன் காரை நலன்புரிச் சங்கம், கனடா காரை கலாசார மன்றம், அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்திச் சங்கம், பிரான்சு காரை நலன்புரிச் சங்கம் மற்றும் தங்கள் குடும்ப உறவுகளின் ஞாபகார்த்தமாக நிதியுதவி வழங்கி வரும் பழைய மாணவர்களுக்கும், தனிப்பட்ட ரீதியில் நிதியுதவி வழங்கிய பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் கல்லூரி சார்பிலே அதிபர் தமது அறிக்கையில் நன்றி தெரிவித்திருந்தார்.
No Responses to “பழைய மாணவர் சங்கம் – காரைநகர், அதிபர் அறிக்கை (01.10.2013 – 28.12.2014) – திருமதி.வாசுகி தவபாலன், அதிபர் –”