பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் குடும்பத்தினர் முதற்கட்டமாக உதவிய ஐம்பதினாயிரம் ரூபா(ரூ50,000) மூலம் அவர்களது அன்பிற்குரிய பிள்ளைகளான அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஆகியோரது நினைவாக பாடசாலையின் இசை ஓவியம் ஆகிய கற்கை நெறிகளின் மேம்பாட்டினை நோக்கிய உதவித் திட்டம் சென்ற ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டிருந்தது.
மேற்குறித்த திட்டத்திற்கான இவர்களது உதவு தொகை பயன்படுத்தப்பட்டமை குறித்த முழுமையான அறிக்கை தாய்ச் சங்க நிர்வாகத்தினால் திரு.தம்பிப்பிளளை பொன்னம்பலம் குடும்பத்திற்கு பழைய மாணவர் சங்க கனடா கிளையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அழகியல் அறைகளிற்கு மின்னிணைப்பினை ஏற்படுத்தியமை இவ் அறைகளிற்கு வர்ணம் தீட்டியமை வயலின் மிருதங்கம் டொல்கி கார்மோனியம் ஆகிய சங்கீத உபகரணங்கள் திருத்தியமை ஆகியன உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்வதற்கு உதவித் தொகை பயன்படுத்தப்பட்டமை குறித்து செலவுகள் உள்ளிட்ட விபரம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் குடும்பம் இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட உதவு தொகையாக ஐம்பத்தொராயிரம் ரூபாவினை (ரூ51,000) சென்ற மாதம் அனுப்பிவைத்திருந்தனர். பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையூடாக செயற்படுத்தி வருகின்ற இத்திட்டத்தின் மற்றோர் அங்கமாக வயலின் இசை வகுப்பு சென்ற நொவம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. வயலின் இசையினை பயில்வது பாடத்திட்டத்தில் இல்லாத போதிலும்; 6ஆம் 7ஆம் 8ஆம் வகுப்புக்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 14 மாணவர்கள் பாடசாலை நேரத்தின் பின்னரான இவ்வகுப்பில் இணைந்துகொண்டு வயலின் இசையினை பயின்று வருகின்றனர்.
கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி ரயிதா பாலவாசன் ஆகியோர் இம்மாணவர்களிற்கு வயலின் இசையிலான அடிப்படைப் பயிற்சியினை வழங்கி வருவதாகவும் இதனை இவர்கள் பூர்த்தி செய்த பின்னர் மேலதிக பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த அதிபர் ஓர் இசையினை பயின்றுகொள்வதன் மூலம் எற்படக்கூடிய உயரிய பயன்களை இவர்கள் பெற்றுக்கொள்வதுடன் பாடசாலையின் கலை மற்றும் இசை நிகழ்வுகளிற்கு பக்கவாத்தியம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் வயலின் இசையை எமது மாணவர்களாலேயே வழங்கக்கூடிய நிலை உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் குடும்பத்தினர் அவர்களது மறைந்த அன்பிற்குரிய பிள்ளைகளின் நினைவாக வழங்கி வரும் உதவி பாடசாலையின் இசை ஓவியம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்கை வகித்து வரலாற்று பதிவுகளை ஏற்படுத்த வழியேற்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட அதிபர் இவர்களது பாடசாலை மீதான விசுவாசத்தைப் பாராட்டி பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மீண்டும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
No Responses to “அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் நினைவு உதவித் திட்டத்தின் கீழ் பாடசாலை நேரத்தின் பின்னர் வயலின் இசை வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது”