தீவக வலய கல்விப் பணிமனையின் வழிகாட்டலுடன் காரைநகர் கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான அறநெறி வகுப்பு தொடக்கிவைக்கப்பட்ட ஓராண்டு நிறைவினை கொண்டாடுகின்ற வகையில் அறநெறி விழா ஒழுங்கமைக்கப்பட்டு காரை.இந்து நடராஜா மண்டபத்தில் வெகுசிறப்பாக நடத்தப்பட்டிருந்தது. சென்ற 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்த இவ்விழாவின் ஆரம்பத்தில் கல்லூரியின் நடன ஆசிரியையின் நெறிப்படுத்தலுடன் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. இதனையடுத்து இசை ஆசிரியையும், அறநெறி வகுப்பு ஆசிரியையுமாகிய செல்வி க.பாலசுப்பிமணியம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து அறநெறி வகுப்பின் பொறுப்பாசிரியரான பிரம்மஸ்ரீ கு.சரவணபவானந்த சர்மா அவர்கள் ஆசியுரை வழங்கியிருந்தார். வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆ.இளங்கோ அவர்களின் வாழ்த்துரை, திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையுரை என்பவற்றையடுத்து சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது. ‘மனம், வாக்கு, காயத்தால் அறம் பேணி அன்புடன் வாழ்வோம்’ என்கின்ற தொனிப்பொருளில் மாணவர்கள் பயன்பெறக்கூடியதான சிறந்த சொற்பொழிவினை சுவாமி சிதாகாசானந்தா நிகழ்த்தியிருந்தார். மாணவர்களின் ஆவலைத் தூண்டுகின்ற வகையில் கதைகள் கூறியும், வினாக்களை வினவி விடைகள் அளிக்க வாய்ப்பளித்தும் மாணவர்களின் மனதில் பதியும் வகையிலான அறிவுரைகளை வழங்கியும் தமது சொற்பொழிவினை சுவாமிகள் அமைத்துக்கொண்டு மாணவர்கள் அறநெறி சார்ந்த விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ள உதவியிருந்தார்.
சிதாகாசானந்தா சுவாமிகள் பிரம்மஸ்ரீ கு.சரவணபவானந்த சர்மா அவர்களினாலும், வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ. இளங்கோ காரை.இந்துவின் உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன் அவர்களினாலும் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர். அறநெறி வகுப்பு மாணவர்களினதும் ஆசிரியர்களனதும் பண்ணிசை நிகழ்வு தனித்தனியாக நடைபெற்றதைத் தொடர்ந்து சமயபாட ஆசிரியை திருமதி சி.சிவரங்கன் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(கல்வி நிர்வாகம்) திருமதி நிறைஜா மயூரதாஸன் அவர்களும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்(கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் வலயக் கல்விப் பணிப்பாளருடன் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
அறநெறி வகுப்பு தொடக்கிவைக்கப்பட்டமை தொடர்பான செய்தி:
விழாவின்போது எடுக்கப்பட்டிருந்த புகைப் படங்கள் சிலவற்றை கீழே பார்வையிடலாம்:
No Responses to “மாணவர்கள் மத்தியில் தெளிவூட்டலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த அறநெறி விழா!”