மாகாண உள ,சமூகவள நிலையமும், தேசிய இளைஞர் சேவை மன்றமும் இணைந்து நடாத்திய “பாடசாலையிலிருந்து வேலை உலகிற்கு தொழிற்துறை வழிமுறைகளை வெற்றி கொள்ளல்” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் மு.ப 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கருத்தரங்கின் ஆரம்பத்தில் யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற அதிகாரி திரு A. பாலசுப்பிரமணியம் அவர்கள் கருத்துரை வழங்கினார். தற்போது தொழிற்துறையை எவ்வாறு தெரிவு செய்யலாம், அதற்கு அடிப்படையான தகைமைகள் எவை என்பது குறித்து மாணவர்களை செயற்பாட்டில் ஈடுபட வைத்தும், வினாக்களை வினாவியும் அவர்கள் மூலமே விடைகளை கண்டறிந்து காட்சிப்படுத்தல் மூலம் தெளிவான விளக்கத்தினை ;திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் தமது விரிவுரையின்போது வழங்கியிருந்தார். .
அடுத்து வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் திரு. S. கஜிதரன் அவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் எவ்வாறு பாடத்துறையை தெரிவு செய்யலாம் என்பது தொடர்பாகவும், க.பொ.த உயர்தரத்தில் எவ்வாறான பாடத்துறைகள் உண்டு என்பதையும், எவ்வாறான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதையும் சிறு கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கி விளக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைநகர்க் கிளையின் பொறுப்பதிகாரி திரு க. உயிதரன் அவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் எவ்வாறு தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து எவ்வாறான தொழிற்பயிற்சிகளை பெறலாம் என்றும் காரைநகர் பயிற்சி நிலையத்தில் எவ்வாறான துறைகள் உள்ளன அதற்கான கால அளவு, பாடக் கற்கை நெறியை பூர்த்தி செய்த பின்பு வழங்கப்படும் சான்றிதழ், அதன் பிரதியை காட்சிப்படுத்தி அதன் உண்மைத்தன்மை தொடர்பாகவும் விரிவான விளக்கம் வழங்கினார்.
இறுதியாக கிளிநொச்சி மாவட்ட தொழில் வழிகாட்டல் அதிகாரி திரு S. வீரசுதாகரன் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு வினாக்கொத்து அடங்கிய கையேட்டினைக் கையளித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் வழங்கிய விடைகளுக்கு புள்ளிகள் வழங்கி அதன் அடிப்படையில் எந்தப் பாடத்துறையை தெரிவு செய்யலாம் என்ற விரிவான விளக்கத்தினை வழங்கினார். தேசிய இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர் திரு வ. அகிலராஜ் அவர்களும், காரைநகர் இளைஞர் சேவை மன்ற தலைவர் திரு சு. செந்தூரன் அவர்களும் இவர்களுக்கு உதவியாகவிருந்து ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். இறுதியாக எமது கல்லூரியின் சிரேஸ்ட ஆசிரியர் பிரம்மஸ்ரீ கு. சரவணபவானந்த சர்மா அவர்களின் நன்றியுரையுடன் இக்கருத்தரங்கு இனிதே நிறைவடைந்தது.
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு”