காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனும் ஐக்கிய அமெரிக்காவில் புவி விஞ்ஞானியாக(Geoscientist) பணியாற்றி வருகின்றவருமான திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடைபெறவுள்ள ‘சுப்பர் சிங்கர்’ சாய் சரணின் இன்னிசை முழக்கம் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் காரை.இந்து அன்னனையையும் பெருமைப்படுத்தவுள்ளார்.
சுப்பிரமணிய வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் காரை.இந்துவில் இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்ட திருஞானசம்பந்தன் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் இயந்திரப் பொறியியலாளராவார். B.Sc.(Mechanical Engineering). பின்னர் இலண்டன் Cranfield பல்கலைக்கழகத்தில் மேலும் கல்வியை மேற்கொண்டு M.Sc.Mathematics பட்டத்தினையும் பெற்றுக்கொண்டவர். இலங்கை போக்குவரத்துச் சபையில் இயந்திரப் பொறியியலாளராகப் பணியாற்றிய பின்னர் இலண்டன் சென்று பிரபல சுரங்க ரயில்பாதை – பால வடிவமைப்பு நிறுவனமொன்றில் பணியாற்றியிருந்தவர். தற்போது ஐக்கிய அமெரிக்காவின் Texas மாநிலத்தில் Just Geo Inc. என்ற பெயரில் சொந்த நிறுவனத்தை 1991ஆம் ஆண்டு முதல் நிறுவி புவி விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார். இவரது இந்நிறுவனமானது ஐக்கிய அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் உள்ள நிறுவனங்களிற்கு எண்ணெய்வள ஆராய்ச்சி தொடர்புபட்ட ஆலோசனைகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் சார்பில் திரு.திருஞானசம்பந்தன் பெரிய பிரித்தானியா, நோர்வே, யெமன்(Yemen), ஐர்லண்ட், சீனா, கட்டார், மலேசியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்து எண்ணெய்வள ஆய்வுகளை மேற்கொண்டு சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தவர்.
திருஞானசம்பந்தன் தமது குடும்பத்துடன் Texas மாநிலத்தில் குடியேறி வசித்து வருகின்றார். எமது கல்லூரியின் பழைய மாணவியும் கலைத்துறைப் பட்டதாரியுமாகிய நிர்மலாதேவி இவரது மனைவி என்பதுடன் காரை இந்துவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி புகழ்பெற்ற ஆசிரியராக விளங்கிய அமரர் ஐயாத்துரை மாஸ்டரின் புதல்வி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். காரைநகர் மருதடியைச் சேர்ந்தவரும் சைவசமயப் பற்றும், இன, மொழி உணர்வும் கொண்டு விளங்கியவரும் சிற்றம்பலம் மாஸ்டர் என அனைவராலும் நன்கு அறியப்பட்டவருமான தமிழ் ஆசிரியரின் புதல்வரே திருஞானசம்பந்தன் என்பதுடன் காரைநகர் மக்கள் மத்தியில் பிரபல்யம்பெற்று விளங்கிய ஆயுள்வேத டாக்டரும் விவாகப் பதிவாளருமாகப் பணிபுரிந்தவருமாகிய அமரர் ஞானப்பிரகாசம்(பரியாரி) இவரது சிறிய தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “இயந்திரப் பொறியியலாளரும் புவி விஞ்ஞானியுமாகிய (Geoscientist) சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் இன்னிசை முழக்கம் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.”