கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் கீர்த்தி மிக்க பழைய மாணவரும் கனடா ரொறன்ரோவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றி வருபவரும் சமூக அக்கறையுடனும் தாராள சிந்தையுடனும் பல்வேறு சமூகப் பணிகளிற்கு உதவி ஆதரவளித்து வருபவரும் குறிப்பாக தாம் பிறந்த பெருமைக்குரிய ஊரான காரைநகரின் வளர்ச்சியிலும் கல்வி விருத்தியிலும் பெரும் பங்காற்றி வருவதன் மூலம் காரைநகர் மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுக் கொண்டவருமாகிய மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் தமது வாழ்வின் வளத்திற்கு வித்திட்ட கல்லூரி அன்னையின் வளர்ச்சிப் பாதையில் இணைந்து கொண்டு காத்திரமான ஒரு பங்களிப்பினை வழங்கி உதவவேண்டும் என்ற அவரது நீண்ட கால கனவு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பெரு முயற்சியின் பயனாக நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.
‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்’ ஒன்றரை மில்லியன் இலங்கை ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் மூலமாகப் பெறப்படும் வருடாந்த வட்டிப்பணம் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் பரிசளிப்பு விழாவினை காலாகாலமாக எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்து நடத்தக் கூடிய வகையிலான ஏற்பாடு சட்டவரையறைகளுக்கு உட்பட்டதாக செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிதியத்திற்கான நிர்வாக ஏற்பாடுகள் கடந்த ஆண்டு மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்றிருந்தபோது கால்கோள் இடப்பட்டு தாய்ச் சங்கத்தின் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் மாஸ்டர், பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன், நிர்வாக உறுப்பினரும் முன்னாள் இலங்கை வங்கி உதவி முகாமையாளருமான திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம் ஆகியோரின் இடைவிடாத முயற்சியின் பயனாகவும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், இலங்கை வங்கியின் காரைநகர் முகாமையாளர் திரு.விஜயகுமார் தொடர்ந்து வழங்கிய ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக் காரணமாகவும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களின் முழுமையான பங்களிப்புடன் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் இந்நிதியத்தின் முதன்மை உறுப்பினராகவும் பதவி வழியால் கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சபைப் பொருளாளர் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் மொத்தம் மூவர் இந்நிதியத்தின் உறுப்பினர்களாக பணியாற்றுவர்.
பரிசளிப்பு விழாவிற்கு மட்டுமன்றி எதிர்காலத்தில் கல்லூரியில் பயிலும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின் கல்வி விருத்திக்கு உதவும் வகையிலுமான ஏற்பாடுகள் ‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்’; செய்யப்பட்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்;.
நாளை வெள்ளிக்கிழமை (04.07.2014) அன்று கல்லூரியில் நடைபெறவுள்ள வருடாந்த பரிசளிப்பு விழாவின்போது நிதியத்தின் நிலையான வைப்புச் சான்றிதழ் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களிடம் கையளிக்கப்படுவதுடன்; இந்நிதியம் குறித்த அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டு இந்நிதியம் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது.
கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் மற்றுமோர் மைல் கல்லாக கருதப்படும் ‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தினை’ நிறுவி பேருதவி புரிந்த குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் பாடசாலைச் சமூகத்தினதும் காரைநகர் மக்களினதும் கல்விச் சமூகத்தினதும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவராக விளங்குகின்றார்.
No Responses to “கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் மற்றுமோர் மைல் கல்லாக ‘மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ தொடக்கி வைக்கப்படுகின்றது”