பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆரம்ப கர்த்தாவும் அதன் முதலாவது தலைவராகப் பணியாற்றியவரும் தம்பிராசா மாஸ்டர் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படுபவருமான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் அமரத்துவமடைந்த ஓராண்டுப் பூர்த்தி எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதியாகும்.
தம்பிராசா மாஸ்டர் அவர்கள் தமக்கு கல்வியறிவூட்டிய ஆசான்களை என்றும் நன்றியோடு நினைவு கூர்ந்து போற்றுபவர்.
அந்த வகையில் அன்னாருக்கு கல்வி புகட்டிய ஆசான் R.கந்தையா மாஸ்டர் பற்றி ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
‘இரு தலைமுறைகளுக்கு மேலாக ஆரம்பம் முதல் அரும்பெரும் சேவையாற்றிய பெருமைக்குரிய ஆர்.கந்தையா(R.K)’ என்று குறிப்பிடுகின்றார்.
அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா மாஸ்டர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர் மதித்துப் போற்றும் அவரது ஆசிரியர்களில் ஒருவரான R.கந்தையா மாஸ்டர் பற்றிய கட்டுரையை இங்கே தருகின்றோம்.
நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் இராமநாதர் கந்தையா (R.Kandiah)
வளங்கள் பல நிறைந்த காரை மண்ணில் அறிவொளி வீசும் கலங்கரை விளக்கமாக ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) திகழ்கின்றது. இக்கல்லூரியின் 125 ஆண்டு கால வரலாற்றில் பல அதிபர்களும் உப அதிபர்களும் ஆசிரியர்களும் கடமையாற்றினர். சிலர் சிறிது காலமும் பலர் நீண்ட காலமும் பணியாற்றினர்.
அமரர் இராமநாதர் கந்தையா நாற்பது ஆண்டுகள் இக்கல்லூரியில் சிறந்த ஆசிரியராகப்; பணியாற்றி கல்லூரியின் சிறப்பு மிக்க ஆசிரியர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரை மாணவர்கள் R.கந்தையா மாஸ்டர் என்றும் R.K மாஸ்டர் என்றும் அன்புடன் அழைத்தார்கள். இவரை ஏன் தனியே கந்தையா மாஸ்டர் என்று அழைக்கவில்லை? இவர் இங்கு கற்பித்த காலத்தில் இன்னுமொரு கந்தையா ஆசிரியராக இருந்தார். இவர்கள் இருவரில் எவரைக் குறிப்பிடுகின்றோம் என்பதைத் தெளிவாகச் சொல்வதற்காக இவர்களின் தந்தையரின் முதல் எழுத்தை அடைமொழியாக வைத்து இவர்கள் இருவரையும் R.கந்தையா மாஸ்டர் என்றும் S.கந்தையா மாஸ்டர் என்றும் அழைத்தார்கள். R.கந்தையா மாஸ்டர் வேதரடைப்பில் வாழ்ந்தவர். S.கந்தையா மாஸ்டர் களபூமியில் வாழ்ந்தவர்.
R.கந்தையா ஆசிரியர் 01.09.1895ஆம் ஆண்டு திரு.இராமநாதர் தெய்வானை தம்பதிகளின் ஒரே மகனாகப் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை அமெரி;க்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை சயம்பு ஆசிரியர் கற்பித்த காரை திருஞானசம்பந்தர் வித்தியாசாலை(காரைநகர் இந்துக் கல்லூரி)யிலும் பெற்றார். பின்னர் London Matriculation, Cambridge Junior and Senior Certificate பெறுவதற்குத் தேவையான கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கற்று அத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.
நாம் எவரைப் பற்றியும மதிப்பிடும்; பொழுது அவர்கள் வாழ்ந்த காலத்தை மனதில் வைத்துத்தான் மதிப்பிட வேணடும். எம் ஆசிரியர் R.K வாழ்ந்த காலத்தில் பெரும்பாலோர் ஏழு அல்லது எட்டாம் வகுப்பளவில் கல்வியை நிறுத்தி இலங்கையிலோ அல்லது மலாயாவிலோ அரச பணியில் சேர்ந்து கடமையாற்றினர். அக்காலத்தில் காரைநகரில் London Matriculation, Cambridge Junior and Senior Certificate வகுப்பு வரையும் கற்றவர்களை விரல் விட்டு எண்ணலாம்.
இவர் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தபடியால் சயம்பு ஆசிரியரின் விருப்பிற்குரிய மாணவனாக இருந்தார். எப்பொழுதும் ஆசிரியர்களுக்குச் சிறந்த மாணவர்கள் மீது அன்பும் அக்கறையும் மதிப்பும் உண்டு. R.கந்தையா மாஸ்டர் சிறந்த மாணவனாக திகழ்ந்தபடியால் அவர் ஆசிரியராக 1915ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சரியானவற்றை உரிய முறையில் கற்பிக்க வேண்டும் என்பதால் கல்வியிற் சிறந்தவர் மட்டுமே ஆசிரியராக இருக்க வேண்டும். R.கந்தையா மாஸ்டர் ஆங்கிலம் தமிழ் கணிதம் ஆகிய பாடங்களைச் சிறப்பாகக் கற்பித்தார். ஒளவையாரின் ‘எண்;ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற கூற்றிற்கமைய இவர் சிறப்பாகக் கற்பித்த கணிதம் எண்ணாகும். தமிழும் ஆங்கிலமும் எழுத்தாகும்.
R.கந்தையா மாஸ்டர் தனது அகவை அறுபதில் இளைப்பாறினார். இளைப்பாறிய காலத்திலும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த அயராது உழைத்தார்.
இவர் இளைப்பாறும் பொழுது கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் அதிபராக இருந்தார். இவரது பிரியாவிடை வைபவம் பிரபல வழக்கறிஞர் ஐ.வ.குலசிங்கம் (A.V.Kulasingam, Advocate) அவர்களின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. அக்காலத்தில் அங்கு ஆசிரியராக இருந்த திரு. N.சபாரத்தினம் (பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இருந்தவர்) வாழ்த்துரைகளை தயாரித்து ஒழுங்கு செய்தார். வாழ்த்துரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டன. அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் அதிபராக இருந்த பொழுது கல்லூரியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பௌதிக ஆய்வுகூட (Physics Laboratory) கட்டிடத்தில் பளிங்குக் கல்லின் மேல் (Plaque) R.கந்தையா அவர்களின் உன்னத சேவையைப் பாராட்டி ஆங்கிலத்தில் ‘In Honour of the Meritorious Service of R. Kandiah (1915-1955)‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. இக்கட்டிடம் கந்தையா மாஸ்டரிடம் கற்ற மலேசியாவிலுள்ள பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது.
இவர் ஆசிரியராக இருந்த பொழுது மாணவர்கள் பாடத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அலுப்புத் தட்டாமல் இடைக்கிடை நகைச் சுவையுடன் கற்பிப்பார். இவரைப் பற்றி எவரும் எக்காரணத்தை இட்டும் குறை கூறமுடியாத ஒழுக்கமான ஆசிரியராகக் கடமையாற்றினார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்
என்ற வள்ளுவர் வாக்கைச் சிந்தையில் வைத்த ஆசிரியராக இருந்தார். நாம் எவரையும் முதன் முறை பார்க்கும் பொழுது அவரின் தோற்றத்தைத்தான் முதற் கவனிப்போம். இது மனித இயல்பு. நான் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் (1945-1949) மாணவனாக இருந்த காலத்தில் கந்தையா மாஸ்டர் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவரின் பூரண சந்திரன் போன்ற சாந்தமான முகத்தையும் ஆறுதலான அவசரமற்ற நடையையும் கவனிக்காமல் இருக்க முடியாது. இவர் மற்றவர்களிடம் பேசும் பொழுது மென்மையாகவும் அன்பாகவும் அக்கறை உள்ளவராகவும் பேசுவார்.
இன் சொலாலன்றி இரு நீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே
என்ற பழந்தமிழ்ப் பாடலின் இரு வரிகளும் இன்சொல் மட்டுமே கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதைக் கூறுகிறது. கந்தையா மாஸ்டரின் வாயிலிருந்து இன்சொற்கள் மட்டுமே வரும். இன்சொல் பேசுவது அவருக்கு இயல்பாகவே அமைந்த சிறந்த குணம். அவரைக் காண்பதற்கு அவரது இல்லத்துக்குச் சென்றால் வயதில் இளையோராக இருந்தாலும்; எழுந்து வந்து அன்புடன் வரவேற்கும் நற்பண்புள்ளவர். வேதரடைப்பில் தென்னஞ் சோலை மத்தியில் அமைதியான இடத்தில் உள்ளது அவரது இல்லம்.
இவர் சிவ பக்தியும் தமிழறிவும் உள்ளவராக இருந்தார். இதை அவர் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்த பெயர்களில் இருந்து நாம் அறியலாம். பதுளையில் பிரபல வர்த்தகராக இருந்த அமராபதி முருகேசு தெய்வானை தம்பதிகளின் மூத்த மகள் இராசம்மா அவர்களை கந்தையா மாஸ்டர் மணம் புரிந்து இல்லறமாகிய நல்லற வாழ்க்கையை நடத்தினார். இத்தம்;பதிகளுக்கு எட்டுப் பிள்ளைகள் பிறந்தனர். (சிவகாமசுந்தரி, உமாதேவி, சரஸ்வதி, பொன்னம்பலம், தில்லைநடராசா, இரத்தினசபாபதி, சிவபாக்கியம், சிதம்பரநாதன்)
ஆசிரியராக இருப்பது மிகவும் உன்னதமானது. ஆசிரியர்கள் மாணவர்களைக் கற்பித்து அவர்களின் அறிவை வளர்த்து அவர்களுக்கு நல் வழியைக் காட்டுகிறார்கள்.
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ என இவர்களைச் சமுதாயம் போற்றுகின்றது.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்று பாரதியார் கூறினார்.
நாற்பது ஆண்டுகளாக காரைநகரின் எல்லாக் குறிச்சிகளிலும் இருந்து வந்த எண்ணற்ற மூன்று தலைமுறை மாணவர்களைக் கற்பித்த புண்ணியமும் பெருமையும் இவரைச் சார்ந்தது. மாணவர்களின் வாழ்க்கையைச் சிறப்பித்து அவர்களுக்கு நல்வழி காட்டிய R.கந்தையா மாஸ்டருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்.
கந்தையா மாஸ்டர் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தின் திருவடிகளை தனது எண்பத்தொன்றாம் வயதில் (24.11.1976) அடைந்தார். அவர் மறைந்து முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரை மறவாது மதித்து காரைவசந்த சஞ்சிகையில் இக்கட்டுரை வருவது அவருடைய பூதவுடல்தான் அழிந்ததே அன்றி அவர் ஈட்டிய புகழ் அழியாது இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறத்தல் நன்று
Dr..தில்லைநாதன் சிவகுமாரன்; M.Sc., Ph.D.. FCACB,DABCC
நன்றி: காரை வசந்தம்-2013
No Responses to “அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா மாஸ்டர் நினைவாக அவரது ஆசான் R.கந்தையா மாஸ்டர் பற்றி….”