கனடாவில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக விளங்கியவர்களுள் ஒருவரும் அச்சங்கத்தின் முதலாவது தலைவர் என்கின்ற பெருமைக்குரியவரும் பாடசாலையின் முக்கியமான வளர்ச்சிப் பணிகள் பலவற்றை குறுகிய காலத்தில் முன்னெடுத்து நிறைவு செய்ய உழைத்தவருமாகிய அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் அமரத்துவமடைந்த ஓராண்டுப் பூர்த்தி எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதியாகும்.
அமரர் தம்பிராசா அவர்கள் சிறந்த சமய சமூக உணர்வாளராக விளங்கி தமது பணிகள் மூலம் காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பவர். நீண்ட கால ஆசிரியப் பணியாற்றி ஆசிரியத்துவத்தின் மகத்துவத்திற்கு இலக்கணமாக விளங்கி நூற்றுக்கணக்கான நல் மாணாக்கர்களை உருவாக்கி கல்விச் சமூகத்தின் பாராட்டிற்குரியவராக விளங்கியவர்.
தம்பிராசா மாஸ்டர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் சமய சமூக கல்விப் பணிகளை நினைவு கூர்ந்து அன்னாருக்கு நினைவு வணக்கத்தினை செலுத்தும் வகையில் ஓர் நினைவு வணக்கக் கூட்டத்தினை நடத்துவதென பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.மு.வேலாயுதபிள்ளை தெரிவித்தார்.
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் Scarborough Civic Center ல் இந்நினைவு வணக்கக் கூட்டத்தினை ஒழுங்கமைத்து நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இக்கூட்டம் குறித்த முழுமையான விபரங்களுடனான அறிவித்தல் விரைவில் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்து வரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் அமரர் தம்பிராசா மாஸ்டரின் முதலாவது ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம்”