செப்.7.2013 சனிக்கிழமை அன்று மாலை 4:30 தொடக்கம் தாயைத் தேடி ஓடும் சேய் போல, புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் புதுபெண் போல ஏதோ ஓர் உணர்வு உந்தப்பெற்றவர்களாக காரை இந்து அன்னையின் புதல்வர்கள் மெல்ல மெல்ல கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். கலிபோஃணியா, மொன்றியல், ஹமில்ற்றன், வாட்டர்லூ போன்ற தொலைதூரங்களிலிருந்து கூட வந்தார்கள். இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்லூரியின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கே இவர்கள் வந்திருந்தார்கள்.
125 ஆண்டு கால நீண்ட கல்விப்பணியாற்றி பெருவிருட்சமாக பாரெங்கும் விழுதுகள் பரப்பி காரைநகரின் புகழை விளங்க வைத்துள்ள தன்னிகரற்ற முதன்மைக் கல்லூரியின் கடந்த கால சுவடுகளைத் திரும்பிப் பார்க்கவும் அதன் மகிமையினைப் பறைசாற்றவும் கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களில் அனைவரும் அக்கறையுடன் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் தி,சிவகுமாரன் அவர்களும்;. சிறப்பு விருந்தினராக குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களும் கௌரவ விருந்தினராக கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.த.பரமானந்தராஜா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
நிறுவுனர் சயம்பு அவர்களின் பேரன் திரு.ஐயாத்துரை பரஞ்சோதி, திருமதி. அன்னபூரணம் பரஞ்சோதி, சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பேராசிரியர்.இ.பாலசுந்தரம், கவிஞர்.பொன்னையா விவேகானந்தன், கவிஞர்.திருமதி.கோதை அமுதன், திரு.எஸ்.எம்.தனபாலன், கலைஞர்.திரு.பொன்.அருந்தவநாதன், சட்டத்தரணி பாக்கியலக்ஷ்மி வாசன், கலைவேந்தன் கணபதி.இரவீந்திரன், ஆகியோரும் குறிப்பிடத்தக்க அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.
உணர்வொத்த தோழமையுடன் கல்லூரியின் புதல்வர்களும் நலன்விரும்பிகளும் ஒன்று கூடியிருக்க மாலை 5:30 இற்கு மங்கல விளக்கேற்றலுடன் விழா தொடங்கியது. மங்கல விளக்கினை காரைநகர் மக்களுக்கு கல்வி எனும் ஒளி ஏற்றிய கல்லூரி நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் பேரன் திரு.ஐயாத்துரை பரஞ்சோதி அவர்களும் அவர்தம் பாரியார் திருமதி.அன்னபூரணம் பரஞ்சோதி அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.
காரைநகர் தந்த வளர்ந்துவரும் இளம்பாடகர் செல்வன்.அமுதீசர் சச்சிதானந்தன் இறைவணக்கப் பாடல்களை இசைத்தார். தமிழ்த் தாய் வாழ்த்தினை செல்வன்.சாரங்கன் விக்கினேஸ்வரன் பாடினார். கனடாப் பண்ணை செல்வன் சங்கர் ஜெயச்சந்திரன், செல்வி பவிசா மோகனேந்திரன், செல்வி லக்ஷிகா மோகனேந்திரன், செல்வி பிரியங்கா கேதீஸ்வரன், செல்வி நிஷாந்தி கணேசலிங்கம் ஆகியோர் தமிழ் மொழியில் இசைத்தனர்.
கல்லூரிச் சமூகத்துடன் ஆதரவாக இருந்து அண்மையில் அமரத்துவம் அடைந்த முன்னாள் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத் தலைவர் கலாநிதி சபாபதி சபாரத்தினம், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆரம்பகாலத் தலைவர் அமரர் சின்னத்தம்பி தம்பிராசா மாஸ்டர், உறுப்பினர் அமரர் திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதி ஆகியோருக்காகவும் மற்றும் அனைவருக்காகவும் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
சங்கத்தின் உப-பொருளாளர் திரு.நடராஜா பிரகலாதீஸ்வரன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
கல்லூரிப் பண்ணிற்கான நடனத்தை நாட்டிய கலாமன்ற அதிபர் ஸ்ரீமதி.சாந்தகுமார் செல்வநாயகம் அவர்களின் மாணவிகள் செல்வி.லக்ஷனா பத்மநாதன் செல்வி.அகிலா ரசகொன்டா ஆகியோர் வழங்கியிருந்தனர். கல்லூரியை வாழ்த்துவதோடு கல்லூரியின் மகிமையையும் பரதக் கலையின் அபிநயங்களில் வெளிப்படுத்துவதாக அந்த நடனம் அமைந்திருந்தது.
தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் தனது தலைமையுரையில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் காரைநகரின் பெருமைமிக்க சிறப்பு வாய்ந்த கல்லூரி என்றால் மிகையாகாது என்றும் தாம் இக்கல்லூரியின் மாணவன் என்பதில் பெருமை அடைவதாகவும், பழைய மாணவர்களாகிய நாம் எம்மால் இயன்ற நிதியினை வழங்கி கல்லூரியின் தேவைகளை நன்றியுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். இக்கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற இறைவனை வேண்டுவதாகவும் கூறினார்.
கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவர்களில் ஒருவராகிய சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது ஆசியுரையில் நாவலர் வழியில் அருணாசலம் உபாத்தியாயர் அறிவுரையில் நிறுவுனர் சயம்பு அவர்கள் செயற்பட்டு சைவத்தமிழ் பண்பு நிறைந்த அறிஞர்களை உருவாக்கினார் என்றும் அதன்பின் கலாநிதி ஆ.தியாகராசாவின் 25 ஆண்டுகால அதிபர் சேவையில் பாடசாலை கல்லூரி என்ற இடத்துக்கு உயர்ந்து எல்லாத்துறைகளிலும் மிளிர்ந்தது என்றும் அவர் காலத்தில் மலேசிய அன்பர்கள் உதவியது போன்று இன்று உதவிவரும் புலம்பெயர் காரை அமைப்புகளையும் மற்றும் தற்போது கடமையாற்றும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் வாழ்த்தினார்
அடுத்து கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தியை அறிவிப்பாளர் திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் வாசித்தார்.
அதிபரின் முழுமையான வாழ்த்துச் செய்தியை இங்கே பார்வையிடலாம்.
http://www.karaihinducanada.com/view_all_news.php?id=105
125 ஆண்டு கால தளர்வில்லா கல்விப்பணியாற்றிய கல்லூரி அன்னைக்கு விழா எடுக்கும் சமயத்தில் வரலாற்றுப் பதிவான ‘சயம்பு’ சிறப்பு மலரினை கல்லூரிச் சமூகத்திலிருந்து சயம்பு மலர்க்குழுவினர் ஆக்கி கல்லூரிச் சமூகத்தினால் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட 125வது ஆண்டு விழாவில் வெளியிட்டிருந்தனர். அச்சிறப்பு ‘சயம்பு’ மலரின் அறிமுகவுரையை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் 1947 ஆம் ஆண்டிலிருந்து ‘சயம்பு’ மலர் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்துள்ளதாகவும் இச்சிறப்பு மலர் அழகான முன்அட்டையைக் கொண்டதாகவம் அதன் பக்கங்கள் உள்ளடக்கங்களையும் விபரித்திருந்தார். இம்மலரினை வாங்கிப் படித்து ஆவணப்படுத்துவதுடன் கல்லூரியின் மேம்பாட்டிற்கும் உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து ‘சயம்பு’ சிறப்பு மலரினை குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை பேராசிரியர் தி.சிவகுமாரன் பெற்றுக்கொண்டார். கௌரவப் பிரதியை நிறுவனர் சயம்பு அவர்களின் பேரன் திரு.ஐயாத்துரை பரஞ்சோதி பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதியை DOUBLE SEAL INSULATING GLASS LTD அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் பெற்றுக் கொண்டார்.
அடுத்து பிரதம விருந்தினர் பேராசிரியர்.தி.சிவகுமாரன் உரையாற்றினார். அவர் தனது உரையில், தம்மை இந்த விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்தமைக்கு நன்றி கூறி சைவச் சூழலில் ஆங்கிலக் கல்விக்கான அன்றைய தேவையை உணர்ந்து செயற்பட்ட நிறுவுனர் சயம்புவையும் போற்றி கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவினை சென்ற மாதம் எம் கண்ணான காரை மண்ணிலும் இன்று பொன்னானான கனடா மண்ணிலும் கொண்டாடும் நாம் அனைவரும் பாக்கியசாலிகள் என்று கூறினார். நாம் கல்வியறிவு பெற்ற கல்லூரியை மதித்து இன்னும் அதன் சேவை வளர வாழ்த்தி எம்மாலியன்ற உதவிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவர்களில் ஒருவரும் குழந்தைகள் மருத்துவ நிபுணருமாகிய மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் உரையாற்றுகையில் 125 ஆவது ஆண்டு காணும் எம் கல்லூரியின் பழையமாணவர் என்ற வகையில் தாம் கலந்து கொள்ளும் இரண்டாவது விழா இது என்றும் அதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகக் கூறியிருந்தார். கலாநிதி ஆ.தியாகராசா அதிபராக இருந்த காலத்தில் தாம் கல்வி கற்றதாகவும் இவர் மாணவர்கள் மீது தனிப்பட்ட அக்கறையும் கண்டிப்பும் உடைய நல்லதிபர் என்றும் இவர்காலத்தில் கல்லூரி பெருவிருத்தியடைந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றதாகவும் கூறினார். தாம் அண்மையில் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவிற்கு சென்றபோது கல்லூரியைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கல்லூரியில் இன்னும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் உள்ளதாகவும் அவற்றை அனைவரும் இணைந்து செய்ய முன்வரவேண்டும் என்றும் கூறினாhர்.
அடுத்து கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட எமது நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா கல்வியறிவுள்ள சமுதாயம் அமைய கல்விக்கூடங்கள் பணி செய்வதாகவும் கல்வியறிவுள்ள சமுதாயமே சுயமாகச் சிந்தித்து தமக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயற்படும்; என்றும் இதற்கு அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றம், வளர்ச்சி, செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டு சங்கத்தின் ஊடாக இதுவரை கல்லூரி வளர்ச்சிக்கு உதவிய நன்கொடையாளர்களின் பட்டியலையும் வாசித்தார். சங்கத்தின் முதுகெலும்பாக சேவையாற்றும் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களுக்கு எல்லோர் சார்பிலும் பிரத்தியேகமான பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் கடப்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கல்லூரியின் 125வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினால் ஜூலை 7ம்திகதி Scarborough Civic Centre ல் நடாத்தப்பட்டிருந்த பேச்சுப் போட்டி பொதுஅறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிற்கான வெற்றிக்கிண்ணங்களும் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களிற்குமான பரிசில்களும் வழங்கப்பட்டன.
பேச்சுப்போட்டியில் பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என்ற நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்கள் முறையே ‘ஒளவைப்பாட்டி’, ‘பாரதியார்’, ‘வெள்ளி விழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா’, ‘தாபகர் முத்து சயம்பு’ ஆகிய தலைப்புகளில் பேசினார்கள்.
கல்லூரி 125 ஆண்டு காணும் இவ்வேளையில், வட அமெரிக்காவில் வதியும் 25 வரையிலான இக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது அவர்கள் சார்பில் அவர்களின் உடனடி குடும்ப உறவினர்கள் இவ்விழா அரங்கில் வைத்து கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டமை விழாவிற்கு மகுடம் வைத்தது போல இருந்தது.
இன்னிசை வேந்தர் சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கத்தின் மாணவிகள் செல்வி டக்சனா ஞானகாந்தன், செல்வி கோசலா ஞானகாந்தன் இன்னிசை மழை பொழிந்தார்கள். சபையோர் இசையில் லயித்தாவாறு அமைதியாக தாளம் போட்டு ரசித்தனர்.
சதங்கை நர்த்தனாலய அதிபர் திரு.வாசு சின்னராசா அவர்களின் 40 வரையான மாணவர்கள் வழங்கிய எட்டுத் திருமகள்களின் ஆடற்கலை நிகழ்வு அவையோர் அனைவரையும் அசையாமல் கட்டிப்போட்ட அருமையான படைப்பாக அமைந்திருந்தது.
கனடாவில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் அடுத்த தலைமுறையாலும் எடுத்துச் செல்லப்படுமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் பேராசிரியர் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ‘எடுத்துச் செல்லப்படும்’ என்ற அணியில் திரு.பொன்னையா விவேகானந்தன், திருமதி.கோதை அமுதன் திரு.எஸ்.எம்.தனபாலன் ஆகியோரும் ‘எடுத்துச்செல்லப்படாது’ என்ற அணியில் திரு.பொன்.அருந்தவநாதன், சட்டத்தரணி பாக்கியலஷ்மி வாசன் திரு.கணபதி ரவீந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர். சபையோர் அனைவரையும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த நல்லதொரு ஆய்வரங்கமாக இப்பட்டி மன்றம் இடம்பெற்றிருந்தது.
திரு.சுரேஸ்ராஜா ‘வழங்கிய மலாயன் பென்சனியர் விடுப்பு விசுவர்’ என்ற நகைச் சுவை சபையோரை இடைவிடாது சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சிகளை திரு.பா.ஞானபண்டிதன்;, திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர். விழா சீராக ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரம் தவறாமல் நடைபெற்றமை விழாவின் சிறப்பம்சமாகும்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய ம.வித்தியாலயத்தின் 125 ஆண்டு விழாவின் இறுதி நிகழ்வாக கனடாவில் நடைபெற்ற இவ்விழா கல்லூரி அன்னையின் புதல்வர்கள் அனைவரும் இணைந்து கல்லூரி அன்னையை அரியணையில் ஏற்றி மகிமைப்படுத்தி குதூகலப்படுத்திய வெற்றி விழாவாக இனிதே நிறைவேறியது.
No Responses to “கல்லூரி அன்னையை அரியணை ஏற்றி குதூகலப்படுத்திய வெற்றிவிழாவாக கனடாவில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 வது ஆண்டு விழா”