பழைய மாணவர் சங்கத்தின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் காரை. இந்துவின் விளையாட்டுத் துறையில் சாதனைகளை ஏற்படுத்தியிருந்தவருமான அண்மையில் மறைந்த அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களை நினைவு கூருகின்ற வகையில் அன்னாரது நண்பர்களும் அனுதாபிகளும் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்ந்த திட்டத்திற்கு உதவுவதென தீர்மானித்திருந்தனர்.
கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் முன்னோடி நிகழ்வாக நடைபெற்று வருகின்ற காரைநகர் சுற்று வீதியை ஓடி முடிக்கின்ற வீதி ஓட்டத்தின் முதலாவது வெற்றியாளருக்கு கேடயத்தினையும் ரொக்கப் பரிசிலையும் வழங்குவதற்கும் கல்லூரியின் விளையாட்டு அணி வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அமரர் பாலசுப்பிரமணியத்தின் பெயரினைப் பதித்த சீருடைகள் வழங்குவதற்கும் உதவுவதே இந்நினைவுத் திட்டமாகும். ஒரு இலட்சம் ரூபா வங்கியொன்றில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன்மூலம் பெறப்படும் வட்டித்தொகையே ரொக்கப் பரிசிலாக வருடாந்தம் வழங்கப்படவுள்ளது.
அமரர் பாலசுப்பிரமணிம் அவர்களின் 31வது நினைவு நாள் மற்றும் மதியபோசனம் வழங்கிய நிகழ்வு அன்னாரின் குடும்பத்தின் ஏற்பாட்டில் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றபோது குறித்த உதவித்திட்டத்தினை செயற்படுத்துகின்ற பொறுப்பு பாலாவின் நண்பர்கள் மற்றும் அனுதாபிகளினால் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. காரை.
இந்துவின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு காத்திரமான பங்களிப்பினைச் செய்துவருகின்ற குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுக் கேடயத்தினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன், பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி ஆகியோரிடம் நண்பர்கள் மற்றும் அனுதாபிகள் சார்பில் கையளித்து இத்திட்டத்தினை சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கிவைத்தார். இக்கேடயம் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள வீதி ஓட்டப் போட்டியின் முதல் வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசிலுடன் சேர்த்து வழங்கப்படவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நினைவுக் கேடயத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் வருமாறு:
Nagarajah Balasubramaniam Memorial Trophy
“You are Loved Beyond Words and Missed Beyond Measure”
Sponsored by Friends through O. S. A (Canada)
கையளிக்கப்பட்ட நினைவுக் கேடயத்தினையும் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரி முன்னிலையில் கேடயம் கையளிக்கப்பபடுவதையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:
No Responses to “அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவாக காரை.இந்துவிற்கான உதவித் திட்டத்தினை செயற்படுத்தும் பொறுப்பு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது”