‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.
பாடவிதானம்இ இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.
யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.
No Responses to “மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்”