கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி மகா வித்தியாலயத்தின்(காரைநகர் இந்துக் கல்லூரி)125வது ஆண்டு விழா பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களினதும், நலன் விரும்பிகளினதும் பேராதரவுடன் கடந்த ஜுன் மாதம் 23ஆம் திகதி(23-06-2013) பிரித்தானியாவில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே.
கல்லூரியின் வளர்ச்சி, சாதனைகளை நினைவுகூருதல், கல்லூரியின் வளர்ச்சிக்கு புலம்பெயர் வாழ் பழைய மாணவர்கள் உதவுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் விழாவில் சேகரிக்கப்படும் நிதியை நிரந்தர வைப்பிலிட்டு அதன் வட்டி வருமானத்திலிருந்து பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு (கல்வித் திணைக்களத்திலிருந்து உதவி பெறமுடியாத) உதவுதல் என்பன இவ்விழாவின் நோக்கங்களாக அமைந்திருந்தன.
அந்தவகையில் இவ்விழாவின் மூலம் சேகரிக்கப்பட்ட 1 மில்லியன் இலங்கை ரூபா பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் பெயரில் தனியாக நிலையான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இக்கணக்கிலிருந்து கிடைக்கப் பெறும் வட்டி வருமானம் வங்கியினால் பாடசாலை அபிவிருத்தி சபையின் நடைமுறைக் கணக்கிற்கு வருடாந்தம் வைப்பிலிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித் திணைக்களத்தின் நிதியைப் பெற முடியாத பாடசாலையின் சில இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கே இந்நிதி பயன்படுத்தப்படும்.
கல்லூரியில் அண்மையில் நடந்தேறிய 125 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் முதலாம் அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வட மாகாண பிரதிக் கல்விச் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் வழங்கிய இந்நிதியத்திற்கான சான்றிதழையும் நினைவுக் கேடயத்தையும் கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களிடம் கையளித்திருந்தார்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் 1 மில்லியன் ரூபாவினை தாய்ச்சங்கத்தின் நிலையான வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளது”