ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1972 ஆம் ஆண்டில், ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றாடல் தினமாக கடைப்பிடிப்பதற்கான பிரகடனத்தை செய்த பின்பு, ஆண்டுதோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் சுற்றாடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு எம்மைச் சூழவுள்ள சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
உணவு வீணாவதைத் தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு ‘யோசி, உண், சேமி’ எனும் தொனிப் பொருளில் உலக சுற்றாடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இத்தினத்தைக் கடைப்பிடித்து சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில் ஜுன் 5, 2013 அன்று சுற்றாடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ இந்நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்வுகளில் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி செல்வி.ஆரணி சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
‘யோசி, உண், சேமி’ என்ற இவ்வாண்டு மகுட வாசகத்தின் கீழ் காட்சிப்படுத்தலுடன் கூடிய கருத்துரையை செல்வி ஆரணி மாணவர்களுக்கு வழங்கினார்.
இத்தினத்தையொட்டி கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ சுற்றாடலைப் பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம் என்னும் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர். இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் ஆகியோர் உள்ளனர்.
அத்துடன் உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது.
No Responses to “உலக சுற்றாடல் தினம் கடைப்பிடிப்பு ‘யோசி, உண், சேமி’ ஐ.நா சபையின் இவ்வாண்டு தொனிப்பொருள்”