காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கல்விசாரா அலுவலர்களின் பங்கும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும்.
நேர்மையுடனும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்பு மிக்க சிறப்பான சேவையை வழங்கிய வகையில் அமரர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் கல்விசாரா அலுவலர்கள் வரிசையில் முன்னிலை வகித்து கல்லூரிச் சமூகத்தினால் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒருவராக விளங்குகின்றார்.
வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் பதவிக் காலத்தில் அலுவலக எழுதுவினைஞராகவும் பின்னர் ஆய்வுகூட உதவியாளராகவும் பதவியில் அமர்த்தப்பட்டிருந்த கல்லூரியின் பழைய மாணவரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் அதிபர் தியாகராசா அவர்களினதும் அதன் பின்னர் பதவி வகித்த அதிபர்களினதும் மற்றும் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் மனம் கவரும்படியாக மிகுந்த பொறுப்புடனும் செயற்திறனுடனும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கல்லூரியின் நிர்வாக ரீதியான பணிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தின் பாராட்டுக்குரியவராக விளங்கினார்.
கல்லூரியின் விளையாட்டுத்துறை போன்ற கல்விசாரா செயற்பாடுகள் மற்றும் சமய சமூக கலாசார நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியர்களுக்கு இவரால் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு காரணமாக ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தினதும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர். பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கல்லூரிக்கு சமூகமளித்து அவசியமான பணிகளை நிறைவுசெய்ய கல்லூரி நிர்வாகத்துக்கு உதவிவந்ததன் மூலம் அதன் சுமுகமான செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியவர்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பது போல, அன்னாரின் நன்மக்களான விக்கினேஸ்வரி, மனோரஞ்சிதம், சத்தியராணி, கிருஷ்ணகுமார் ஆகிய நால்வரும் பாடசாலையில் நல்லொழுக்கமும் கல்வியில் சிறந்து விளங்கியும் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நன்மாணக்கர்களாகத் திகழ்ந்து தம் தந்தை பெயர் சொல்ல வைத்தவர்கள் என்றால் மிகையாகாது.
இத்தகைய உன்னதம் மிக்க சேவையாளரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் சேவையிலிருக்கும்பொழுதே 1980ஆம் ஆண்டு தமது 40வது வயதில் சிவபதம் அடைந்தமை அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான இழப்பாகும். அன்னார் மறைந்த 36வது ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் ஏனையோருடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவுகூருவதுடன் அன்னாரின் கல்லூரிக்கான சேவை ஏனைய கல்லூரி சார்ந்த பணியாளர்களுக்கும் எடுத்துகாட்டாக அமைந்து விளங்கவேண்டும் என்பதுவும் எமது பெருவிருப்பாகும்.
அன்னாரின் உருவப்படம் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அன்னாரின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்து இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர்சங்க கனடாக் கிளையின் முன்னாள் பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாடசாலைக்குப் பயணம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படத்தைக் கீழே காணலாம்.
No Responses to “கல்வி சாரா அலுவலர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நன்றியோடு நினைவு கூருகின்றது.”