வெற்றி(வெள்ளி) நாயகன் புகழ் பல நூறாண்டு வாழ…………
காரையின் புதல்வனாய், காரை இந்துவின் நல்லாசானாய், முதல்வனாய், வடபுலத்தின் குரலாய் திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள். அவர் புவியில் 65 வருடங்கள் வாழ்ந்தாலும், அவரின் நாமம், கீர்த்தி நூற்றாண்டு கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
குடும்பத்தின் குலவிளக்காய், சமூகத்தின் கலங்கரையாய், மக்கள் திலகமாய் வாழ்ந்து இப் புவி வாழ்வின் அர்த்தம் புரிந்து வெற்றி கண்ட மாமனிதன் தியாகராசா அவர்கள் மண்ணுலகில் மட்டுமன்றி விண்ணுலகிலும் வெற்றி கண்டார் என்பதை பறைசாற்றுவதாக அமரர் தியாகராசா அவர்களுக்கு எடுக்கப்படும் தொடர்ச்சியான நூற்றாண்டு விழாக்களின் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.
அமரர் அவர்கள் சமூகத்துக்காற்றிய சேவையை நினைவு கூர்ந்து பிறந்த மண் (காரைநகர்), சேவையாற்றிய கல்விக்கூடம் (காரைநகர் இந்துக் கல்லூரி) மட்டுமன்றி கடல் கடந்து நாடு கடந்து (கனடா காரை இந்து பழைய மாணவர் சங்கம்) உலகெங்கும் வாழும் மக்கள் இணைந்து அவ்வப் பிரதேசங்களிலும் விழா எடுக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக காரை சுவிஸ் அபிவிருத்தி சபையினர் சுவிஸ்லாந்தில் 17.07.2016 இல் எடுக்க இருக்கும் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா நூற்றாண்டு விழா சிறப்புற, அமரர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நற்பணி ஆற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். மேலும் அமரர் அவர்களின் புகழ், நாமம் இன்னும் பல நூறாண்டு வாழ வாழ்த்துவதுடன், அவரின் வழியில் எம் மக்கள் பலரும் சேவையாற்றி மாண்பு பெற இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி.
திருமதி வாசுகி தவபாலன்
அதிபர்
யாஃகாரைநகர் இந்துக்கல்லூரி.
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு இந்துக் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி”